கட்சித் தலைமை தெரிவிற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டமைக்கு வரவேற்பு

தமிழ்த் தேசிய வரலாற்றில் முதன் முதலில் வாக்கெடுப்பு மூலம் கட்சித் தலைமையை தெரிவு செய்யப் பட்டுள்ளமையை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு வரவேற்றுள்ளதோடு, அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய விடயங்களையும் வலியுறுத்தியுள்ளது.

இவ்விடயம் குறித்து வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு இன்றைய தினம் (26.01.2024) ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

குறித்த அறிக்கையில் மேலும், தமிழ்த் தேசிய அரசியலின் வரலாற்றிலும், தமிழரசுக் கட்சியின் வரலாற்றிலும் முதன் முதலில் வாக்கெடுப்பு மூலம் கட்சித் தலைமையை தெரிவு செய்வது கடந்த வாரம் நடை பெற்றுள்ளது.

இந்த ஜனநாயகப் பண்பை வரவேற்பதோடு இது நிலைத்திட வேண்டும் என அவாவுகின்றோம்.

பாரிய கடப்பாடுகள்

இலங்கை நாட்டின் உள்ளக அரசியல், பிராந்திய அரசியல் மற்றும் சர்வதேச சூழல் ஆகியன சிக்கல் மிக்கதாகக் காணப்படும் தற்போதைய சூழலில், தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்றிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் முன்னால் பாரிய கடப்பாடுகள் குவிந்துள்ளன.

கட்சித் தலைமை தெரிவிற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டமைக்கு வரவேற்பு | Election Of Party Leadership Through Referendum

இலங்கையின் வடக்கு கிழக்கு பிராந்தியத்தில் பாரம்பரியமாக இயங்கிவரும் தமிழ்த் தேசியக் கொள்கையுடைய அரசியல் கட்சி ஒன்றின் தலைமைத்துவம் என்ற வகையில் அவரும், அவர் சார்ந்த கட்சியினரும் அடங்கலாக அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் பின்வருவனவற்றை வலியுறுத்துகின்றோம்:

• வீழ்ச்சியடைந்திருக்கும் தமிழ்த் தேசிய அரசியலை பரந்துபட்ட மக்களின் பங்கேற்புடன் மீளவும் கட்டியெழுப்ப வேண்டும்

• உணர்ச்சிகரமான அரசியல் என்பது நாம் எமது சுய தேசிய உணர்ச்சிகளுக்கு தீனி போடுவது மாத்திரமேயாகும். இது தமிழ் தேசத்தை ஏனைய சமூகங்களிடமிருந்து அந்நியப் படுத்துவதுடன் தமிழ் தேசம் தனது நியாயாதிக்கத்தை சர்வதேச அளவில் இழக்கவும் காரணமாகின்றது. தமிழ் தேசிய அரசியலை அறிவுபூர்வமான, நவீன அரசியல் கொள்கைகளுடன் கூடிய அரசியலாக பரிணமிக்கச் செய்ய வேண்டிய கடப்பாடு தமிழ் அரசியல் கட்சிகளுக்கு உள்ளது.

• வடக்கு கிழக்கு பிரதேசத்தை தமது தாயகமாகக் கொண்ட தமிழ் மக்களுக்கும், அதேபோல் பிரதேசத்தை தமது பூர்வீகமாகக் கொண்ட முஸ்லிம் மக்களுக்கும், சிறுபான்மையினராக பல காலமாக எல்லையோரக் கிராமங்களில் வாழ்ந்து வரும் சிங்கள மக்களுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்த வேண்டிய கடப்பாட்டை தமிழ் அரசியல் கட்சிகள் கொண்டுள்ளன. எந்தவொரு சந்தர்ப்பத்திலும், தமிழ்த் தேசிய அரசியலையும் தமிழ் மக்களையும் வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்கள் மற்றும் சிங்கள மக்களிடமிருந்து பிரிக்காதவாறு கொள்கைகளை முன்னெடுக்க வேண்டும்.பொறுப்பு

பொறுப்பு

• குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்கள் மத்தியில், தமிழ் தேசிய அரசியல் தலைமைத்துவங்கள் சார்ந்து சந்தேகங்கள் எழாதவாறு உறவுகளை வெளிப்படைத் தன்மையுடன் பேணவேண்டிய பொறுப்பு காணப்படுகின்றது

• வடக்கு கிழக்கு தமிழ் சமூகத்தில் காலங்காலமாகக் காணப்பட்டு வரும் ‘சமூக ஊனங்களான’ யாழ். மேலாதிக்க வாதம், பிரதேசவாதம், மத ரீதியான வெறுப்புணர்வு கள் மற்றும் புறக்கணிப்புகள், சாதி அடக்குமுறை, ஆணாதிக்கம் ஆகிய பிற்போக்கான போக்குகளிலிருந்து தமிழ் சமூகத்தின் சிந்தனையை மாற்றி, சமூக சமத்துவ சிந்தனையைக் கட்டி எழுப்புவதன் மூலம் மாத்திரமே தனக்கான எதிர்காலம் குறித்து விஞ்ஞானபூர்வமாக சிந்திக்கும் ஆற்றல் கொண்ட உறுதியான தமிழ்த் தேசத்தை கட்டியெழுப்ப முடியும். அத்தகைய ஒரு மக்கள் சமூகத்தால் மாத்திரமே தனது அரசியல் இலக்குகளை அடைய முடியும். இதை அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் தமது அடிப்படைக் கொள்கையாக ஏற்கவேண்டும்.

கட்சித் தலைமை தெரிவிற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டமைக்கு வரவேற்பு | Election Of Party Leadership Through Referendum

• சிங்கள இனவாத அடக்கு முறைகளின் காரணமாக வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்து வாழும் மலையக தமிழ் மக்களின் வழித்தோன்றல்கள் வடக்கு கிழக்கின் மக்கள் வாழ்வியலுடன் பிணைந்து விட்டது. இந்தப் பிணைப்பில் சிறு கீறல் கூட ஏற்படுத்தாவண்ணம் பொறுப்புடன் செயல்பட வேண்டிய கடப்பாடு தமிழ் அரசியல் தலைமைகளுக்கு உள்ளது.

• தமிழரசுக் கட்சி அடங்கலாக அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளிலும் பெண்கள் மற்றும் இளையோரின் பங்கேற்புக்கு கதவுகள் அடைக்கப்பட்டே உள்ளன. தமிழ் அரசியல் தளத்தில் முற்போக்கான ஜனநாயகமான சிந்தனைகள் பரிணமிக்காது தமிழ்த் தேசிய அரசியல் தளம் முடங்கி கிடப்பதற்கு இது முக்கிய காரணமாகும். தமிழ்க் கட்சிகள் தமது அங்கத்துவ எண்ணிக்கையை உயர்த்தி மக்கள் மயப்பட்ட கட்சிகளாக தமது கட்சிகளை மாற்ற வேண்டும்.

• புலம்பெயர் நாடுகளில் வாழும் பல்வேறு சக்திகளும் தமிழ் அரசியலில் தமது செல்வாக்கைச் செலுத்த முயல்கின்றனர். அவர்களின் ஆளுகைக்கு உட்படாது, வடக்கு கிழக்கு தாயகப் பிரதேசத்தில் வேரூன்றி தமது உரிமைக்காக அன்றாடம் போராடிக்கொண்டு வாழ்ந்து வரும் மக்களின் நலன்களையே தமிழ் அரசியல் கட்சிகள் பிரதிபலிக்க வேண்டும்.

• அரச இனவாதத்துக்கு சரணடையாத கொள்கையை கொண்டிருக்க வேண்டும்.

• தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு சிதறிக் கிடக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மீளவும் பலப்படுத்த வேண்டும். ஆபிரிக்க தேசிய காங்கிரசில் காணப்படும் கூட்டுப் பலமே தென்னாப்பிரிக்க மக்களின் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது. இந்த உண்மையை தமிழ் அரசியல் கட்சிகள் ஏற்றாக வேண்டும்.

• வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையான, ‘ஐக்கிய இலங்கைக்குள் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு’ என்பதை தமது இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும்.

Previous Story

ஏமன்: அரசியல் கொலைகளைச் செய்யும் அமெரிக்க கூலிப்படை அதிர்ச்சித் தகவல்!

Next Story

"ஒரு மாசம் டைம்.." காசா இனப்படுகொலை