விக்ணேஷ்குமார்
காந்தியடிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் காளிசரண் மகாராஜ் என்ற சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை விடுவிக்கக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் வலதுசாரி அமைப்பினர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் அண்மையில் தர்ம சன்சத் என்ற பெயரில் இந்து மதக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.இக்கூட்டத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த காளிசரண் மகாராஜ் என்ற சாமியாரும் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் காளிசரண் மகாராஜ் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
யார் மகாத்மா
அதாவது அவர் கூறுகையில், “இந்து மதத்தைப் பாதுகாக்கக் கூடிய ஒரு தீவிரமான தலைவரையே அரசின் தலைவராக்க வேண்டும். நமது நாட்டின் உண்மையான மகாத்மா நாதுராம் கோட்சேதான். காந்தியடிகள் இல்லை” என்று பேசினார். அவரது இந்த பேச்சு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. மகாத்மா காந்தியடிகளை அவதூறாகவும் அவரை சுட்டுப் படுகொலை செய்த கொலையாளி நாதுராம் கோட்சேவை மகாத்மா என்றும் காளிசரண் குறிப்பிட்டதற்கு பல்வேறு தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
கைது
மகாத்மா காந்தியடிகளை அவதூறாகப் பேசி சமூகத்தில் விஷத்தைப் பரப்புவதாகக் குறிப்பிட்ட சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், இப்படியெல்லாம் பேசி வென்றுவிட முடியும் என நயவஞ்சகங்கள் நினைத்தால் அது நடக்காது என எச்சரித்தார். மேலும், இது தொடர்பாக பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த சத்தீஸ்கர் போலீசார், காளிசரண் மகாராஜை கைது செய்தனர்.
வலதுசாரிகள் போராட்டம்
இந்நிலையில், காளிசரண் மகாராஜ் கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு வலதுசாரி அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வலதுசாரி அமைப்புகள் போராட்டமும் நடத்தினர். சத்தீஸ்கர் துணை ஆணையர் இல்லம் எதிரே உள்ள டேங்க் பூங்காவில் திரண்டிருந்த ஏராளமான தொண்டர்கள், காளிசரனை விடுதலை செய்ய வேண்டும், ஒவைசியை கைது செய்யக் கோரி முழக்கங்களை எழுப்பி பேரணி சென்றனர்.
ரூ 22 லட்சம் தருகிறோம்
(SRI LANKA RS 58.9 L)
அப்போது வலதுசாரி தலைவர்களில் ஒருவரும் வழக்கறிஞருமான குல்பூஷன் பரத்வாஜ் கூறுகையில், “ஒவ்வொருவருக்கும் கருத்துச் சுதந்திரம் உண்டு. காளிசரண் திட்டமிட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இந்து மதத் தலைவர்களை போலீசார் திட்டமிட்டு கைது செய்வதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது.
அப்படிப் பார்த்தால் ஒவைசியை ஏன் காவல்துறையும், அரசும் கைது செய்யவில்லை? ஓவைசியை பிடிக்கும் காவல்துறை அதிகாரிக்கு 22 லட்சம் ரூபாய் வழங்கப்படும்” என்று ஓப்பானாக பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓவைசி
இது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளைக் கொண்ட மனுவையும் அவர் அரசிடம் வழங்கினார். முன்னதாக சமீபத்தில் தான் ஓவைசியின் ஒரு பேச்சு இணையத்தில் வைரலானது. அதில் ஓவைசியின் பேச்சு இந்துக்களுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் உள்ளதாக பல்வேறு இந்து அமைப்புகளும் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.