நஜீப் பின் கபூர்
நன்றி ஞாயிறு தினக்குரல் 27.07.2025
அரசுக்கு வேலியாக வேலை பார்க்கின்ற ஒரு சக்திவாய்ந்த ஊடக கூட்டம் நாட்டில் பணி புரிந்து வருகின்றது. இது காசுக்காக தொழில் பார்க்கின்றவர்கள் என்பதனை விட சித்தாந்த ரீதியில் இந்த அரசுக்குத் துணைபுரிய வேண்டும்-பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பலர் அந்தப் பணியில் இருக்கின்றார்கள்.
அதே போன்று எதிரணிக்கு முட்டுக் கொடுக்கின்ற ஒரு ஊடகக் கூட்டமும் இன்று நாட்டில் செயல்பட்டு வருவதும் தெரிந்ததுதான். அதில் எந்தத் தவரும் கிடையாது. ஆனாலும் முன்னைய குழுவைவிட பின்னய குழு மிகவும் பலயீனமானது. இவர்களில் பெரும்பாலானவர்கள் பிழைப்புக்கான ஒரு தொழிலாகத் இதனைச் செய்து வருகின்றார்கள். எனவே அவர்களை விமர்சனம் செய்வது நாகரிகமானதல்ல.
பலமான ஒரு அரசாங்கம் இருக்கின்ற போது செல்வாக்கான ஒரு எதிரணி நாட்டில் இருக்க வேண்டும். ஆனாலும் நமது அரசியல் களம் அப்படி இல்லை என்பதனையும் இங்கு சுட்டிக்காட்டித்தான் ஆக வேண்டும். எதிரணியில் இருப்பவர்களே இதனை ஏற்றும் கொள்கின்றார்கள். கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் வரையிலும் இந்த ஜேவிபி-என்பிபி.க்கு ஆதரவாக செல்வாக்கான சம்பிரதாய ஊடகங்கள் ஏதும் நேரடியாக களத்தில் இருக்கவில்லை.
அன்று அரச ஊடகங்கள் முற்றும் முழுதாக ஆட்சியாளர்களின் ஊதுகூழலாகத்தான் செயல்பட்டு வந்தன. அதனால் இன்றும் கூட பெரும்பாலான குடிமக்கள் அவற்றை நிராகரித்து விட்டிருந்தனர். இதனை சில தனியார் ஊடகங்கள் தமக்கு சாதகமாக்கிக் கொண்டு பிழைத்து வருகின்றன.

இன்றும் சில தனியார் ஊடகங்கள் முற்றும் முழுதாக தமது சொந்த நிகழ்ச்சி நிரலுக்குஏற்ப செயல்பட்டு வருகின்றன. அதன் உரிமையாளரின் விருப்பு வெறுப்புக்கள்தான் அங்கு தீர்மானிக்கின்ற சக்தி. அதே போன்று கடந்த காலத்தில் பதவியில் இருந்த அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கி அதன்மூலம் இலாபமீட்டி பிழைத்து வந்த சில ஊடகங்களும் நாட்டில் இருந்தன.
இன்று அவை பலயீனப்பட்டிருந்தாலும் அவற்றின் செயல்பாடுகள் முற்றிலும் முடங்கிப் போய் விட்டன என்று சொல்ல முடியாது. இதனையும் ஒரு குறையாக சொல்ல முடியாது பல நாடுகளிலும் இதே நிலைதான்.
பாலையும் நீரையும் வேறுபடுத்தி பருகும் வல்லமை அண்ணப்பறவைக்கு இருக்கின்றது என்ற ஒரு கதை இருக்கின்றது. அது போல இன்று அனேகமான பொது மக்கள் ஊடகங்களின் உள்நோக்கங்களையும் நிகழ்ச்சி நிரலையும் புரிந்து கொண்டு தமது தெரிவுக்கு முன்னுரிமை கொடுத்து வருகின்றனர்.
சம்பிரதாய ஊடகங்கள் என்னதான் தமது தலையில் மிளகாய் அறைக்க முயன்றாலும் அதற்கு இன்று மக்கள் தயாராக இல்லை. அதனால்தான் சமூக ஊடகங்கள் சக்கைபோடு போடுகின்றன. இதிலுள்ள ஆபத்தான பக்கம் என்னவென்றால் இந்த சமூக ஊடகங்கள் நம்பமுடியாதவை என்ற விமர்சனங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அதே நேரம் தரமான நம்பகமான சமூக ஊடகங்களும் நாட்டில் இருக்கின்றன.

மேற்படி நமது கருத்து நாட்டில் இருக்கின்ற சிங்கள ஊடகங்கள் தொடர்பானது. அரசியலில் பேரின மக்கள் மத்தியில் ஊடகங்கள் செலுத்துகின்ற ஆதிக்கம் தமிழ் சம்பிரதாய ஊடகங்களிலோ சமூக ஊடகங்களிலே அந்தளவுக்குத் தெரியவில்லை. அப்படி இருந்தாலும் பெரும்பாலும் அவை வடக்குக்கு மட்டுப்பட்ட அளவில் நிற்கின்றன.
தமிழ் வாசகர்கள் பெரும்பாலும் தென்னிந்திய பொழுது போக்கு ஊடகங்களில் மூழ்கிப்போய் இருக்கிற ஒரு துர்ப்பாக்கிய நிலைதான் தெரிகின்றது. இதனால் குறிப்பாக தமிழ் முஸ்லிம் மலையக சமூகத்தினர் மத்தியில் அரசியல் விளிப்புணர்வு மட்டமான நிலையில் இருக்கின்றன.. அச்சு ஊடகங்கள் என்று பார்த்தாலும் செல்வாக்கான எத்தனை தமிழ் இதழ்கள்தான் நாட்டில் இயங்கி வருகின்றன என்பதும் கேள்விக்குறி.
அரசு மீதான விமர்சனங்களும் அதற்கு அரசு தரப்பிலான பதிலடிகள் என்ற செய்தியை சொல்லவந்த நாம் ஊடகங்கள் பற்றிய நீண்ட முன்னுரையை திணித்திருப்பதாக விமர்சனங்கள் வரலாம். அரசியல் கருத்துக்களை உணர்வுகளை-சிந்தனைகளை மக்கள் மனதில் விதைக்கும் பணியை ஊடகங்கள்தான் செய்து கொண்டிருக்கின்றன. எனவே அவை பற்றி சற்று விரிவாக விளாசியதில் தவறில்லை என்பது நமது வாதம்.
அரசுகளை கதிரைகளில் அமர்த்துவது-தூக்கி வீசுவதும் இந்த ஊடகங்கள் முதன்மை இடத்தில் இருந்த வருகின்றன. எனவேதான் ஊடகங்கள் மீது அரசியல்வாதிகளின் அடாடித்தனங்கள் ஊடகவியலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு வன்முறைகள் இந்த பின்னணியில் வருகின்ற அட்டூழியங்கள்தான். இன்று பலயீனமான ஒரு எதிர்க்கட்சி நாட்டில் இருக்கின்ற நேரத்தில் ஊடகங்கள்தான் பொது மக்களுக்கு காவலனாக செயல்பட வேண்டும்.
![]()
அதிகாரத்தில் இருக்கின்ற அனுர ஆட்சிக்கு எதிரான பிரதான குற்றச்சாட்டாக பேசப்படுவது துறைமுக நெருக்கடியைத் கலைப்பதற்காக அங்கிருந்து துரிதமாக வெளிளேற்றப்பட்ட 325 கெண்டேனர்கள் தொடர்பான குற்றச்சாட்டு இருக்கின்றது. இதனைத் தூக்கிப்பிடிப்பதில் முன்னணியில் இருப்பவர் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபர் ரஹ்மான். கொழும்பு மேயர் விவகாரத்தில் மூக்குடைபட்டதை மறைக்க அவர் மேற்கொள்ளும் ஒரு முயற்சி இது என்றும் விமர்சனம் வருகின்றது.
இதற்குப் பதில் கொடுக்கின்ற ஆட்சியாளர்கள் கடந்த ஆட்சிக் காலத்தில் 3000 வரையிலான கொண்டேனர்கள் இப்படி வெளியேற்றப்பட்டிருக்கின்றன. இன்று கேள்வி எழுப்புகின்றவர்கள் ஏன் அன்று வாயடைத்து நின்றார்களே என்றும் கேட்கப்படுகின்றது.
இதனால் 325 கொண்டேனர் விவகாரத்தில் குரல் எழுப்பியவர்கள் சற்றுப் மௌனித்திருக்கின்றார்கள். இந்தக் கொண்டேனர்களில் சட்டவிரேத பொருட்கள்தான் இருந்தது என்பதற்கும் துல்லியமான ஆதாரங்களும் எதிரணியிடம் கிடையாது. ஒரு சந்தேகத்தின் அடிப்படையிலேதான் இந்த விமர்சனங்கள்.
ட்ரம்ப் அதிரடியாக விதித்த வரியில் சிக்கி இந்த அரசு நெருக்கடிகளுக்கு இலக்காகும். அதன்மூலம் நாட்டில் ஒரு கொந்தளிப்பு நிலை வரும் என்று எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்திருந்தன. அரசு இந்தவிடயத்தில் மெத்தனப் போக்கிலே செயலாற்றுகின்றது என்றும் குற்றம்சாட்டப்பட்டது.
அதையும் ஆட்சியாளர்கள் லாவகமாக கையாள்வதில் வெற்றி பெற்றுவிட்டார்கள் எனத்தெரிகின்றது. ஏனைய நாடுகளுடன் ஒப்பு நோக்கும் போது இலங்கைக்கான ட்ரம்ப் வரி மிகவும் கீழ்மட்டத்தில் இருக்கின்றது. அதற்கு அரசு ட்ரம்புடன் இரகசிய உடன்பாடுகளைச் செய்து கொண்டிருக்கின்றது என எதிரணியின் ஒரு விமர்சனமும் இருக்கின்றது.
முன்னாள் சபாநாயகர் அசோக்க சபுமல் ரன்வெல கல்விச்சான்றிதழ் விவகாரத்தில் அனுர அரசுக்கு முதல் மூக்குடைந்து வந்தது என்பதனையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் இப்படி போலியான கல்வி சான்றிதழ் பட்டம் பதவிகள் வைத்துக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளும் அரசியல்வாதிகள் அல்லாதவர்களும் ஆயிரக்கணக்கில் நாட்டில் இருக்கின்றார்கள். காசுக்கு கலாநிதிப் பட்டங்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் நூற்றுக்கணக்கில் நாட்டில் இயங்கிக் கொண்டு வருகின்றன.
கடைசியாக நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் தரப்புக்கு பெரும் சரிவு என்றும் ஒரு கதை இருக்கின்றது. இது முட்டால்தனமானது. இந்த உள்ளாட்சித் தேர்தல் முறையில் வருகின்ற ஒரு இயல்பு நிலைதான் இது. எல்பிட்டிய தேர்தலில் இதனை நாம் முதலில் பார்த்தோம். அதன் பின்னர் வந்த பொதுத்தேர்தல் முடிவு என்னவாக இருந்தது.?
அதே நேரம் நாங்கள் நூறுக்கும் குறையாத உள்ளாட்சி சபைகளைக் கைப்பற்றுவோம் என்று சொன்ன சஜித் தரப்பு முப்பது வரையிலான சபைகளையே கைப்பற்ற முடிந்தது. அதிலும் நிறைய குழறுபடிகள். தனது முதலாவது வரவு செலவுத்திட்டத்தில் இதில் பெரும்பலான சபைகள் என்பிபி. வசம் பேவதற்கு அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.
தேர்தல் காலப் பரப்புரைகளை ஒரு முறை எண்ணிப்பாருங்கள் அனுர அதிகாரத்துக்கு வந்தால் இந்த நாட்டில் பௌத்த கலாச்சாரத்துக்கு அழிவு. விகாரைகள் மூடப்படும். பௌத்த தேரர்களுக்கு தானம் தடை செய்யப்படும். கண்டிப் பெரஹராவுக்கு தடை. சர்வதேசம் இவர்களை அங்கிகரிக்காது. இது நாட்டுக்கு ஆபத்து என்றெல்லம் பரப்புரைகள் நடந்தன.

இதில் மிகிந்தனை வலஹேனகுனவன்ச தம்மரத்தன தேரர் முன்னணியில் இருந்தார். ஜனாதிபதித் தேர்தலில் சஜித்துக்கு ஆதரவாக கடும் வார்தைகளைக் கொண்டு அவர் அனுராவை வசைபாடி வந்தார்.
இன்று என்ன நடந்திருக்கின்றது. அவர்கூட தனக்குத் தவறு நடந்து விட்டது. என்று சொல்லி இப்போது பகிரங்கமாக அனுராவை தேரர் ஆதரரித்து வருகின்றார். இது அவரது சந்தர்ப்பவாத பல்டியாகவும் இருக்கக் கூடும்.!
அண்மையில் ஜனாதிபதி அனுராவை மிகிந்தலை வரவழைத்து பொசன் வைபவத்துக்கு அரச ஒத்துழைப்பையும் பெற்றுக் கொண்டார். இதற்கு முன்னர் அரசு இந்த வைபவத்தை கைவிட்டிருந்தது. மேலும் பிரதான பௌத்த பீடாதிபதிகளுடனும் அனுர நெருக்கமான நல்லுறவை ஏற்படுத்தி அவர்களின் ஆலோசனைகளையும் பெற்று வருகின்றார்.

அனுர ஜனாதிபதியாக வந்தால் இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்களுக்குப் பெரும் பாதிப்பு. நோன்பு கிடையாது பெருநாள் கிடையாது அவர்களது கலாச்சார பாரம்பரியங்கள் போச்சு என்றும் சொல்லி முஸ்லிம் தனித்துவ அரசியல்வாதிகள் அன்று தேர்தல் பரப்புரை செய்து வந்தனர். அவர்கள் இப்போது நாம் எப்போதும் ஜனாதிபதி கட்சிதான் என்று சொல்லிக் கொண்டு இன்று அனுராவுடன் நெருக்க உறவை ஏற்படுத்திக்கொள்ளவும் முனைகின்றார்கள்.
பொதுவாக ஒட்டுமொத்த சிறுபான்மை அரசியல் தலைமைகளும் சஜித் கையாலாகாத ஒரு அரசியல் தலைவர் என்ற தீர்மானத்துக்கு இப்போது வந்து விட்டார்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது. எனவே இன்றைய களநிலவரப்படி எதிர்க்கட்சியைப் பலப்படுத்துவது என்பது கல்லில் நார் உரிக்கும் முயற்சியாகத்தான் நாம் பார்க்கின்றோம்.
அதேபோன்று ஜேவிபி-என்பிபிக்கு சர்வதேசத்துடன் நல்லறவு கிடையாது. இவர்களைப் பயங்கரவாதிகளாகத்தான் உலகம் பார்க்கின்றது என்று ஒரு கதை சொல்லப்பட்டது. ஆனால் இன்று அனுர அரசு சர்வதேசத்துடன் குறிப்பாக மேற்கு மற்றும் இந்தியா போன்ற நாடுகளுடன் மிகவும் நெருக்கமான உறவில் இருக்கின்றது.

என்னதான் அனுர வெற்றிகரமாக இந்த அரசை நகர்த்திக் கொண்டு போனாலும் ஊழலுக்கும் கைஊட்டல்களுக்கும் பழகிப் அதிகாரிகள்தான் இன்னும் நிருவாகத்துறையில் இருக்கின்றார்கள். இப்படி ஒரு கடும் போக்கு அரசு அதிகாரத்தில் இருப்பது அவர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் பெரும் இழப்பாக-பாதிப்பாக இருப்பதால் அப்படியானவர்கள் இன்னும் பழைய பாணியில் செயல்படுவதில்தான் ஆர்வமாக இருக்கின்றனர்.
இவர்களை சரியான வழிக்குக் கொண்டுவர வேண்டிய தேவை இந்த அரசுக்கு இருக்கின்றன. அது ஒரு சிக்கலான பணியும் கூட. இது போன்ற நிறையவே சவால்களை இந்த அனுர அரசு எதிர்நேக்கி வருகின்ற அதே நேரம் தூய்மையான நிருவாகத்துக்கு ஒத்தழைத்து நாட்டை மீட்க்க வேண்டும் என சிந்திக்கும் அதிகாரிகளும் இல்லாமல் இல்லை.
இன்று நாட்டில் பலயீனமான ஒரு எதிரணி இருப்பது இந்த அனுர அரசுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கின்றது. உதய கம்மன்பில விமல் வீரவன்ச சம்பிக்க போன்றவர் இப்போது என்னதான் பேசினாலும் அவர்களை இன்று எவரும் கண்டுகொள்வதில்லை.
அதே போன்று நிராகரிக்கப்பட்ட ராஜபக்ஸாக்கள் மீண்டும் இந்த நாட்டில் அரசியலில் பழைய இடத்துக்கு வருவது என்பது துரிதமாக நடக்கக் கூடியதாக இல்லை. அதேபோன்று வடக்குக் கிழக்கு அரசியல் செயல்பாடுகள் தெற்கு அரசியலில் மாற்றங்களை கொண்டு வந்து தீர்வுகளைத் தேடும் நிலையிலும் இல்லை. அதே நேரம் குடிமக்களும் யதார்த்தத்தை புரிந்து கொண்டு செயல்படுவதாக தெரிகின்றது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாட்டில் யதார்த்தங்களையும் நெருக்கடிகளையும் நன்கு புரிந்து கொண்டு தனது பயணத்தை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றார். நெருக்கடியான பொருளாதாரத்தில் இருந்து மக்களை மீட்டெடுப்பதும் இன நெருக்கடிக்குக் தீர்வு பெற்றுக் கொடுப்பது. மற்றும் ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு அரசியல் மேடைகளில் சொன்னது போல தண்டனை. கொள்ளையடித்த அரச சொத்துக்களை மீட்பது.
அவர்களுக்கு தண்டனை வழங்குவது ஊழல் மிகுந்த நிருவாகத்தை புனிதப்படுத்துவது. புதிய அரசியல் யாப்பை அறிமுகம் செய்வது என்பன ஜனாதிபதி அனுர முன்னுள்ள சவால்கள். இதற்கு சற்றுக் காலம் எடுக்கும். அதேபோன்று இதில் நிறையவே சவால்களும் இருக்கத்தான் செய்கின்றன. இது விடயத்தில் ஜனாதிபதி நல்ல புரிதலுடன் காய்நகர்த்தி வருகின்றார்.
இதற்கிடையில் அடிப்படை மனித உரிமை மீறல்கள் வழக்கில் முன்னாள் ஜனாதிபதி ரணில் குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கின்றது. வேடிக்கை என்னவென்றால் இதற்கான வழக்குச் செலவுகளை ரணில் சார்பில் அரசுதான் செலுத்த வேண்டும் எனச் சொல்லப்பட்டிருக்கின்றது.





