எண்ணெய் வாங்க நிதி இல்லை – ரணில் அறிவிப்பு

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கையில் மக்கள் போராட்டத்தால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகினார். அதன்பின், ரணில் விக்ரமசிங்க பிரதமராகப் பொறுப்பேற்றார்.

இந்நிலையில், இலங்கையின் நிதி அமைச்சர் பொறுப்பையும் விக்ரமசிங்கே வகித்து வருகிறார். நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

நாடு மிகப்பெரும் கடன் சுழலில் சிக்கியுள்ளது. இலங்கையின் சுற்றுலா துறை வருமானமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இத்துடன் கரோனா பாதிப்பு பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

தற்போது இலங்கை பெட்ரோலியம் கார்ப்பரேஷனுக்கு 70 கோடிடாலர் கடன் உள்ளது, இதனால் எந்த ஒரு நாடும், எந்த ஒரு நிறுவனமும் கச்சா எண்ணெய் சப்ளை செய்ய முன்வரவில்லை. ரொக்க அடிப்படையில் கச்சா எண்ணெய் தருவதாகக் கூறுகின்றன என்று நாடாளுமன்றத்தில் நேற்று ரனில் குறிப்பிட்டார்.

நாட்டில் பொருளாதார வளர்ச்சிசரிய தொடங்கும்போதே நடவடிக்கை எடுத்திருந்தால், இப்போது ஏற்பட்டுள்ள அளவுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்காது. இத்தகைய சூழலை முற்றிலுமாகத் தவிர்த்திருக்க முடியும். நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்துக்கு செல்வதற்கான அறிகுறிகள் தெரிவதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு இந்தியா 400 கோடி டாலர் கடன் உதவியை அளித்தது. இந்த கடன் உதவியால் தத்தளிக்கும் இலங்கை மீண்டு எழும் என்று எதிர்பார்க்க முடியாது.

ஐஎம்எப் கடன் நிறுத்திவைப்பு

ஏற்கெனவே இலங்கை அரசு சர்வதேச செலாவணி நிதியத்துக்கு (ஐஎம்எப்) இந்த ஆண்டு செலுத்த வேண்டிய 700 கோடி டாலர் கடனை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. கூடுதல் கடன் உதவி கோரி ஐஎம்எப்-ஐ இலங்கை நாடியுள்ளது. இருப்பினும் 2026-ம் ஆண்டு வரை ஐஎம்எப் அமைப்புக்கு 500 கோடி டாலரை ஆண்டுதோறும் கட்டாயம் செலுத்தியாக வேண்டிய சூழல் இலங்கைக்கு உள்ளது.

அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்ததால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைக்கான பொருள்களை வாங்க நீண்ட வரிசையில் நெடுநேரம் காத்திருக்க வேண்டிய அவலம் உருவாகியுள்ளது.

Previous Story

சீனா பாகிஸ்தானுக்கு 2.3 பில்லியன் டாலர் கடன் 

Next Story

உள்நாட்டு யுத்தம்  அபாயம் - வாசுதேவ  எச்சரிக்கை