இன்று கண்டியில் உள்ளாட்சித் தேர்தலில் மு.கா. எப்படியான நிலைப்பாட்டை மேற்கொள்வது என்பது தொடர்பான கூட்டம் ஒன்று மு.ப. 10.30. முதல் 1.30 மணிவரை தலைவர் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.
அப்போது தமது கூட்டணியான சஜித்தின் ஐமச. யுடன் இணைந்து போட்டியிடுவது என்றும் சீட்டுக் கிடைக்காத இடங்களில் தனித்து மரச் சின்னத்தில் நியமனப் பத்திரங்களைத் தாக்கல் செய்வது என்றும் அங்கு தீர்மானிக்கப்பட்டதாக நமக்குத் தகவல் கிடைத்திருக்கின்றது.
கடந்த முறை ரணிலின் ஐதேக.வுடன் மு.கா.இப்படித்தான் உள்ளாட்சித் தேர்தலை வடக்கு கிழக்கிற்கு வெளியே சந்தித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதன்போது அநுராதபுர மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதையே பெரும்பாலானோர் அதிகம் வலியுறுத்தினர். போட்டியிடும் உள்ளுராட்சி மன்றங்கள் அவற்றில் கட்சிக்கு வழங்கப்படும் வட்டார மற்றும் ஆசன ஒதுக்கீடுகள் என்பவற்றைப் பொறுத்தான ஐக்கிய மக்கள் சக்தி தலைமைத்துவத்துடனான பேச்சுவார்த்தையின் பின்னர், இதுபற்றிய இறுதித் தீர்மானம் விரைவில் மேற்கொள்ளப்படுமென தீர்மானிக்கப்பட்டது.
பிரஸ்தாப தேர்தல் தொடர்பில் கொழும்பு மாநகர சபை உட்பட கொழும்பு மாவட்டம், புத்தளம் மாவட்டம், பதுளை மாவட்டம், குருநாகல் மாவட்டம், கம்பஹா மாவட்டம், புத்தளம் மாவட்டம்,வன்னி மாவட்டம்,கேகாலை மாவட்டம் ஆகியவற்றிற்கான முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களுடனான சந்திப்புகளும் கட்சித் தலைவர் ஹக்கீமுடன் தனித்தனியாக இடம்பெற்றன. இவற்றிலும் கட்சியின் தேசிய அமைப்பாளர் எம்எஸ்.தௌபீக் எம்.பி.கலந்துகொண்டார்.
அத்துடன் ,இந்தத் தேர்தல் குறித்தான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர்பீட நிருவாக உத்தியோகர்களுடனான கலந்துரையாடலும் வெள்ளிக்கிழமை மாலையில் தலைவர் ரவூப் ஹக்கீம்,செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஆகியோர் முன்னிலையில்”கட்சியின் தாருஸ் ஸலாம்”தலைமையகத்தில் நடைபெற்றது.