உலக வங்கி கைவிரிக்க 1 00000 கோடி ரூபாய்  அச்சாகிறது!

கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ள இலங்கைக்கு கடன் கொடுக்க முடியாது என உலக வங்கி கை விரித்துள்ள நிலையில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கக்கூட பணமில்லாமல் அந்நாட்டு அரசு தவிக்கிறது. இதனையடுத்து ஒரு லட்சம் கோடி ரூபாய் பணத்தை அச்சடிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது.

இதனால் எரிபொருள் பற்றாக்குறை, மின்வெட்டு, பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உயர்வு என பெரும் பொருளாதார நெருக்கடியில்  சிக்கியுள்ளது. இதனால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

அந்நியச் செலவாணி கையிருப்பு இல்லாததால் அன்றாடம் பொருட்களை வாங்க கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வாங்கிய கடனுக்கான வட்டித் தொகையையும் செலுத்த முடியாத திவால் ஆகும் நிலைக்கு ஆளாகியுள்ளது.

இலங்கையை பொறுத்தவரையில் ஆண்டுதோறும் வெளிநாட்டுக்கடன் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதுமட்டுமின்றி நடப்பு கணக்கு பற்றாக்குறை என்பது 3 பில்லியன் டாலராக உள்ளது. இதில் ஜூலையில் முதிர்ச்சியடையும் 1 பில்லியன் டாலர் சர்வதேச தங்கப்பத்திர கடன் உள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கியில் 14.3 சதவீத பங்குடன் அதிக கடன் பெற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் 21.5 வீதமான காணப்பட்ட பணவீக்கம், ஏப்ரல் மாதத்தல் 33.8 வீதமாக உயர்வடைந்துள்ளது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை அதிகரித்ததால், அத்தியாவசிய சேவைகளின் கட்டணங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பெரும் அளவில் அதிகரித்துள்ளன.

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உலக வங்கி, சர்வதேச நிதியம் போன்றவற்றிடம் கடன் வாங்க இலங்கை முயன்ற வருகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. ஆனால் திடமான பொருளாதார திட்டம் இல்லாத இலங்கைக்கு கடன் கொடுக்க வாய்ப்பில்லை என உலக வங்கி திட்டவட்டமாக மறுத்துள்ளது.

மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவையை தவிர இதர பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்கு கடன் கொடுக்க இயலாது என சர்வதேச நிதியமும் தெரிவித்து விட்டன. மற்ற பல நாடுகளும் இதே நிலையில் தான் உள்ளன. ஆனால் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க பெரிய மாற்றங்களை செய்ய வேண்டிய தேவை உள்ளது. அதன் ஒருபகுதியாக இலங்கை பொருளாதார நெருக்கடி தீவிர நிலையை அடைந்துள்ள இந்த தருணத்தில், மேலும் பணத்தை அச்சிடுவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இதன்படி மேலும் ஒரு லட்சம் கோடி ரூபாய் பணத்தை அச்சிட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் ‘‘எங்களுக்கு ஒரு ரூபாய் வருமானம் கூட இல்லை. மக்களிடம் பணப்புழக்கம் இல்லை. எதிர்வரும் மாதங்களில் நாட்டின் பணவீக்கமானது 40 வீதத்தை எட்டும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

விலையேற்றத்தினால் போராட்டங்களை நடத்தி வரும் மக்களுக்கு இது மேலும் அழுத்தத்தைக் கொடுக்கும். எனவே பணத்தை அச்சடிக்கிறோம். அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கக் கூட எங்களிடம் பணம் இல்லை. எனவே நாங்கள் ஒரு லட்சம் கோடி ரூபாய் பணத்தை மேலும் அச்சிடுகிறோம்” என தெரிவித்துள்ளார்.

Previous Story

19க்கும் 76க்கும் 'லவ்'

Next Story

குடிமக்கள் முதுகில் குத்திய ரணில்!