நிலைமை கையை மீறி போகுது..
ரஷ்யா புதின் தந்த ‘ஷாக்’ வார்னிங்
மத்திய கிழக்கில் பற்றி எரியும் இஸ்ரேல் – ஈரான் போர், தற்போது உலக நாடுகளின் சமையலறை வரை எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகள், உலக எரிசக்தி சந்தையை பெரும் நெருக்கடியில் தள்ளியுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரித்துள்ளார்.
உலக நாடுகளுக்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவில் ஐந்தில் ஒரு பங்கு, ஈரான் அருகே உள்ள ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது.
தற்போது நிலவும் போர் பதற்றத்தால் இந்த வழித்தடம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்துப் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், “அடுத்த சில வாரங்களில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடக்கும் எண்ணெய் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்படலாம்.
ஏற்கனவே உற்பத்தி குறைந்துவிட்டது; சேமிப்பு கிடங்குகள் தேங்கிக் கிடக்கின்றன. இந்தப் போக்குவரத்து முடக்கம் உலகப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்” என்று அதிரடி காட்டியுள்ளார்.
$100-ஐத் தாண்டிய விலை
2022-க்குப் பிறகு முதல்முறையாக கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலரைத் தாண்டியுள்ளது. இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டது. பெங்களூரு, மும்பை மற்றும் கொல்கத்தா போன்ற பெருநகரங்களில் வணிக ரீதியிலான எல்.பி.ஜி (LPG) சிலிண்டர் விநியோகத்தில் ஏற்கனவே தட்டுப்பாடு நிலவுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்து, அந்நாட்டு எரிவாயுவை வாங்குவதை ஐரோப்பிய நாடுகள் வெகுவாகக் குறைத்துக்கொண்டன. ஆனால், தற்போதைய தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி மீண்டும் ஒரு டீலுக்கு புதின் அழைப்பு விடுத்துள்ளார்.
“ஐரோப்பிய நாடுகளுடன் மீண்டும் நீண்டகால எரிசக்தி உறவை ஏற்படுத்த ரஷ்யா தயாராகவே இருக்கிறது. ஆனால், அதற்கு அவர்கள் தரப்பிலிருந்து பச்சைக்கொடி காட்டப்பட வேண்டும்,” என புதின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் ‘மாஸ்டர் பிளான்’ உலகிலேயே இரண்டாவது பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடான ரஷ்யா, இந்த விலையேற்றத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிடுகிறது.
ஐரோப்பாவுக்குப் பதில் ஆசிய நாடுகளுக்குத் தள்ளுபடி விலையில் எண்ணெய் விற்று வரும் ரஷ்யா, இப்போது தன் வருவாயைப் பெருக்கிக் கொள்ள நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவிற்கும் இந்த மாதம் ரஷ்யா எண்ணெய் விற்க உள்ளது. அதிலும் நல்ல வருமானம் பார்க்க ரஷ்யா திட்டமிட்டு உள்ளது.
ஜி-7 நாடுகள் முடிவு:
எண்ணெய் விலை உயர்வைக் கட்டுப்படுத்த “தேவையான நடவடிக்கைகள்” எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளன.
போர் தொடங்குவதற்கு முன் ஐரோப்பாவின் 40% எரிவாயு தேவையை ரஷ்யா பூர்த்தி செய்தது. தற்போது அது 13% ஆகக் குறைந்துள்ளது.
ஈரானில் உள்ள பள்ளிக் கூடங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் ஹிஸ்புல்லாவின் ட்ரோன் தாக்குதல்கள் போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.
உலகமே ஒரு போரின் விளிம்பில் நிற்கும்போது, எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் சாமானிய மக்களின் பாக்கெட்டுகளைப் பதம் பார்க்கப்போவது மட்டும் உறுதி.



