மெக்சிகோவில் செயல்பட்டு வந்த ஆபத்தான போதைப்பொருள் கும்பலான எல் மென்சோ கொல்லப்பட்டுள்ளார். இதனால் மெக்சிகோ நாடு முழுக்க வன்முறை வெடித்துள்ளது. இது அங்குப் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள சூழலில், இதனால் அங்கு நடைபெறும் கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளுக்கும் ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

மெக்சிகோவின் ஜலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல் தலைவர் நெமெசியோ ஓசெகுவேரா செர்வான்டெஸ் கொல்லப்பட்டுள்ளார். எல் மென்சோ என்று பரவலாக அழைக்கப்படும் இவர் மெக்சிகோ ராணுவம் நடத்திய அதிரடி ஆபரேஷனில் கொல்லப்பட்டார்.

மெக்சிகோ தாக்குதல்
மெக்சிகோ தப்பால்பாவில் இந்த அதிரடி ஆபரேஷன் நடந்துள்ளது. எல் மென்சோ எங்கே இருக்கிறார்.. அவருடன் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது குறித்த தகவல்களை அமெரிக்க உளவுத் துறை வழங்கியுள்ளது. அதை அடிப்படையாக வைத்தே மெக்சிகோ ராணுவம் தாக்குதலை நடத்தியுள்ளது.
மெக்சிகோ அதிபர் அதிபர் கிளாடியா ஷெய்ன்பாம் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இது மிக முக்கியமான வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. எல் மென்சோவை உயிரோடு பிடிப்பதே ராணுவத்தின் திட்டமாக இருந்துள்ளது. இருப்பினும், கடைசி நேரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் அவர் காயமடைந்து பிறகு உயிரிழந்தார்.
உயிரிழப்புகள்
இந்த தாக்குதலில் எல் மென்சோ உட்பட கார்டெலை சேர்ந்த ஆறு பேர் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். ராணுவத்தைப் பொறுத்தவரை இரண்டு தேசிய காவல்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், மூன்று வீரர்கள் காயமடைந்தனர். கார்டெல் கும்பலிடம் இருந்து கவச வாகனங்கள், ஹெலிகாப்டர்களையும் சுட்டு வீழ்த்தக்கூடிய ராக்கெட் லாஞ்சர்கள் உள்ளிட்ட கனரக ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வன்முறை
எல் மென்சோ மரணத்தால் மெக்சிகோ கார்டெல்கள் கொந்தளிப்பில் உள்ளது. இதனால் பதிலடி நடவடிக்கையாக மெக்சிகோவில் 9 மாகாணங்களில் போதைப் பொருள் கும்பல் தாக்குதல்களை நடத்தினர். மெக்சிகோ நாட்டின் நாட்டின் இரண்டாவது பெரிய நகரான குவாடலஜாராவில் போர் போன்ற சூழல் நிலவியது. அங்கு முக்கிய சாலைகள், நெடுஞ்சாலைகள் மறிக்கப்பட்டன. வாகனங்கள் சாலையிலேயே தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. வங்கி, வணிக நிறுவனங்கள் தாக்கப்பட்டன. இந்தப் பதற்றமான சூழல் காரணமாக குவாடலஜாரா சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகளும் கூட தடைப்பட்டுள்ளன.
அதேநேரம் அமைதியாக இருக்கும்படி அதிபர் கிளாடியா ஷெய்ன்பாம் கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் அமைதியைக் கொண்டு வரவும் நிலைமையைக் கட்டுக்குள் வைக்கவும் மாகாண அரசுகளோடு இணைந்து தனது அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார். மேலும், இந்த ஆபரேஷனில் படைகளிடையே இருந்த ஒருங்கிணைப்பையும் அவர் பாராட்டினார்.

உலகக் கோப்பைக்கு ஆபத்து
இதற்கிடையே ஜலிஸ்கோவில் நிலவும் ஸ்திரமற்ற சூழல் சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் வரும் ஜூன் மாதம் தொடங்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் மெக்சிகோவிலும் நடைபெற உள்ளது. ஜலிஸ்கோ, மெக்சிகோ நகரம், மான்டேரி ஆகிய 3 நகரங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. எப்போதும் கால்பந்து உலகக் கோப்பைக்கு உலகெங்கும் இருந்து ரசிகர்கள் வருகை தருவார்கள். இந்த நேரத்தில் மெக்சிகோவில் வன்முறை வெடித்துள்ளது, உலகக் கோப்பை தொடருக்கே ஆபத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
இதற்கு மெக்சிகோவில் உள்ள இந்தியர்கள் கவனமாக இருக்கும்படி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் எச்சிக்கை விடுத்துள்ளது. அங்கு மோசமான சூழல் இருப்பதால் கவனமாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமின்றி, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளும் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.





