உலகின் புதிய 7 அதிசயங்கள் முதலிடத்தில் தாஜ்மஹால் !

உலகின் புதிய ஏழு அதிசயங்கள் பட்டியலில் இந்தியாவின் பெருமை மிகு தாஜ்மஹால் முதலிடத்தைப் பிடித்து இந்தியர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது ஆதிகாலத்தில் அறிவிக்கப்பட்ட 7 அதிசயங்கள் அனைத்துமே 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவை. அவற்றில் இப்போதும் இருப்பது எகிப்தின் பிரமிடு மட்டுமே. இந்த உலக அதிசயங்களை கிரேக்க எழுத்தாளர் ஆன்டிபேட்டர் என்ற தனி நபர் ஒருவராகவே தேர்வு செய்ததாக நம்பப்படுகிறது. இந்த ஏழு உலக அதிசயங்களில் பாபிலோனின் தொங்கும் தோட்டம் உள்ளிட்டவையும் அடக்கம்.

இந்த நிலையில், தற்போதுள்ள கால கட்டத்தின் அடிப்படையில் உலகின் புதிய ஏழு அதிசயங்களை தேர்வு செய்வதற்காக புதிய கருத்துக் கணிப்பு உலகம் தழுவிய அளவில் நடத்தப்பட்டது. இதற்கான முயற்சிகளை ஸ்விட்சர்லாந்தை நாட்டைப் பூர்வீமாகக் கொண்ட கனடா நாட்டவரான பெர்னார்ட் வெப்பர் என்பவர் தொடங்கினார். இந்த உலகளாவிய வாக்கெடுப்பு குறித்து ஆரம்பத்தில் பெரும் சர்ச்சைகள் எழுந்தன. யுனேஸ்கோ அமைப்பு இந்த வாக்கெடுப்புக்கு கண்டனம் தெரிவித்தது.

மேலும், இந்தக் கருத்துக் கணிப்பு மூலம் பெருமளவில் பண முறைகேடுகள் நடப்பதாகவும், மக்களின் பணத்தை சுரண்டும் முயற்சி என்றும் சர்ச்சைகள் கிளம்பின. இருப்பினும் இதைப் பொருட்படுத்தாமல், உலகின் புதிய ஏழு அதிசயங்களை தேர்வு செய்வதற்காக உலக அளவில் இணையதளம் மூலமாகவும், எஸ்.எம்.எஸ். மூலமாகவும் வாக்கெடுப்பு நடந்து வந்தது. இந்தப் பட்டியலில் ஆரம்பத்தில் ஏராளமானவை போட்டியில் இருந்தன. உலகம் முழுவதிலுமிருந்து 10 கோடி பேர் www.new7wonders.com என்ற இணைய தளம் மூலம் ஆன்லைன் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்தனர்.

இந்தியாவிலிருந்து தாஜ்மஹால், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், குதுப்மினார் உள்ளிட்ட பல கட்டட அதிசயங்கள் இடம் பெற்றிருந்தன. இறுதியில், தாஜ்மஹால் உள்ளிட்ட 21 கட்டடங்கள், அதிசய சின்னங்கள் இறுதிப் பட்டியலுக்குத் தேர்வு செய்யப்பட்டன. இவற்றிலிருந்து ஆறு மட்டுமே உலக அதிசயங்களாக சேர்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. எகிப்தில் உள்ள பிரமிடுகளின் காலம், பெருமை உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு அது உலக அதிசயமாக வாக்கெடுப்பின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பெரும் திரளாக கூடியிருந்தவர்கள் மத்தியில் ஆறு உலக அதிசயங்களும் ஒன்றன் பின் ஒன்றாக அறிவிக்கப்பட்டன. லிஸ்பனில் உள்ள பென்பிசியா ஸ்டேடியத்தில் நடந்த வண்ணமிகு நிகழ்ச்சியில் ஆறு உலக அதிசயங்களும் அறிவிக்கப்பட்டன. அதன்படி உலகின் புதிய ஏழு அதிசயமாக அறிவிக்கப்பட்டவற்றின் பட்டியல்,

  1. இந்தியாவின் தாஜ்மஹால்.
  2. சீனப் பெருஞ்சுவர்.
  3. ஜோர்டானின் பெட்ரா.
  4. பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில்,  இயேசு நாதர் சிலை.
  5. பெருவின் மச்சு பிச்சு.
  6. மெக்ஸிகோவின் மயன் கட்டடங்கள்.
  7. ரோம் நகரின் கொலோசியம். நவீன ஏழு அதிசயங்களில் ஐரோப்பாவிலிருந்து இடம் பெற்றுள்ள ஒரே இடம் ரோம் நகரின் கொலோசியம்தான். இந்தப் போட்டியில் பிரான்ஸின் ஈபிள் டவர், அக்ரோபோலிஸ் ஆகியவையும் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஏழு அதிசயங்கள் தேர்வு குறித்து இந்த வாக்கெடுப்புக்ககான கமிஷனராக செயல்பட்ட முன்னாள் போர்ச்சுகல் வெளியுறவு அமைச்சர் ஜோஸ் பெரேடஸ் டோ அமரல் கூறுகையில், உலக அளவில் நடந்த மிகப் பெரிய வாக்கெடுப்பு இதுதான் என்பதில் புதிய வரலாறு படைத்துள்ளோம். இந்த நிகழ்வு சிறப்பான முறையில் முடிந்துள்ளது மகிழ்ச்சி தருகிறது என்றார். ஏழு உலக அதிசயங்களை அறிவிக்கும் நிகழ்ச்சி படு ரசனையுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது. பாப் ஸ்டார் ஜெனீபர் லோபஸ் கலந்து கொண்ட கலக்கல் ஆடல், பாடல் நிகழ்ச்சி ரசிகர்களை குஷிப்படுத்தியது. உலக அதிசயங்களாக அறிவிக்கப்பட்டவுடன் ரியோ டி ஜெனீரோ, பெரு, மயன் கட்டடங்கள் அமைந்துள்ள சிச்சேன் இட்ஸா ஆகிய நகரங்களில் மக்கள் வீதிகளில் ஆடிப் பாடி மகிழ்ந்தனர். ரியோ டி ஜெனீரோவில் உள்ள பிரமாண்ட இயேசு நாதர் சிலை உலக அதிசயமாக அறிவிக்கப்பட்டதை பிரேசில் மக்கள் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடினர்.

ரியோ நகரின் தெருக்கள் எல்லாம் மக்கள் தலைகளாக தென்பட்டது. இந்த கருத்துக் கணிப்பின் மூலம் வசூலான பணத்தின் பாதியைக் கொண்டு ஆப்கானிஸ்தானின் பாமியான் மலைத் தொடரில் உள்ள புத்தர் சிலையை மறு சீரமைப்பது உள்ளிட்ட செயல்களுக்காக பயன்படுத்தப் போவதாக வெப்பர் ஏற்கனவே அறிவித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம். பண்டைய உலகின் ஏழு அதிசயங்கள்: பண்டைய உலக அதிசயங்களாக அறிவிக்கப்பட்டவற்றில் இப்போதும் இருப்பது எகிப்தின் பிரமிடுகள்தான். பண்டைய உலக ஏழு அதிசயங்கள் பட்டியல்,

  1. எகிப்து மன்னர் பாரோ கூபுவின் சமாதி அடங்கியுள்ள கிஸா பிரமிட்.
  2. பாபிலோனியா நகரில் அமைந்திருந்த தொங்கும் தோட்டம்.
  3. ஆர்ட்டிமிஸ் கோவில்.
  4. ஒலிம்பியாவில் அமைந்திருந்த ஜீயஸ் கடவுளின் சிலை.
  5. மாசோலஸ் மசோலியம்.

6.ரோட்ஸ் சிலை.

7.அலெக்சாண்ட்ரியா:கலங்கரைவிளக்கம்.

Previous Story

சூரியனின் மண்டலத்திற்குள் நாசா!

Next Story

நாட்டு மககள் துயரத்தில் அமைச்சர்கள் உல்லாசனம்!