ஈரான் வெளியுறவு அமைச்சர் பாகிஸ்தான் பயணத்தில் நடந்தது என்ன?  பகிர்ந்த சீக்ரெட்!

பாகிஸ்தானில் இன்று ஈரான் அமெரிக்கா இடையே இரண்டாம் கட்டமாக அமைதி பேச்சுவார்த்தை நடக்க இருந்தது. இந்த நிலையில் திடீரென அமெரிக்காவில் இருந்து பேச்சுவார்த்தை குழுவினர் பாகிஸ்தான் செல்லாமல் திரும்பினர்.

அதே நேரம் ஈரான் குழுவினரும் பாகிஸ்தான் சென்று பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி ஆசிம் முனீர் ஆகியோரை சந்தித்துவிட்டு ஈரான் புறப்பட்டனர். தற்போது இது குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

அமெரிக்காவுக்கும் – ஈரானுக்கும் இடையே கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி போர் ஏற்பட்டது. ஈரானின் முக்கிய கட்டமைப்புகளை குறிவைத்தும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஹார்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான், வளைகுடா நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தியது.

Iran FM Reveals Details After Return What Happened During Pakistan Visit

நேரடியாக பங்கேற்க மாட்டோம்

இதனால், சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது.

பாகிஸ்தான் தலையிட்டு மத்தியஸ்தம் செய்து இந்த போர் நிறுத்தத்தை கொண்டு வந்தது. இதையடுத்து அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

தற்காலிக போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்ட நிலையில், அமெரிக்கா – ஈரான் இடையே இரண்டாவது கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்காவிடம் நேரடியாக பங்கேற்க மாட்டோம் என்று கூறிய ஈரான், பிறகு அந்த நிலைப்பாட்டில் இறங்கி வரும் விதமாக பாகிஸ்தானுக்கு தனது பிரதிநிதிகளை அனுப்பியது.

பாகிஸ்தான் முயற்சிகள் மதிப்புமிக்கவை

ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தலைமையிலான குழு பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டது. பாகிஸ்தானில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி ஆசிம் முனீர் ஆகியோரை சந்தித்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி, ஈரானுக்கு கிளம்பி சென்றார்.

பின்னர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், பாகிஸ்தான் பயணம் பயனுள்ளதாக இருந்தது. அமைதியை கொண்டு வர பாகிஸ்தான் மேற்கொள்ளும் முயற்சிகள் மதிப்புமிக்கவை.

ஈரான் மீதான போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடைமுறைக்கு உகந்த கண்டிஷன்கள் அடங்கிய தொகுப்பை வழங்கியுள்ளோம்.

அமெரிக்கா உண்மையில் தூதரக பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக உள்ளதா என்பதை இன்னும் பார்க்க வேண்டியுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

டிரம்ப் கூறியது என்ன?

ஈரான் வெளியுறவு அமைச்சர் பாகிஸ்தானில் இருந்து மீண்டும் ஈரான் திரும்பிய நிலையில், அமெரிக்காவும் தனது பிரதிநிதிகள் குழுவின் பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்தது. டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

ஈரான் மீதான போர் விவகாரத்தில் அமெரிக்காவின் கையே ஓங்கியிருப்பதாகவும், பேச்சுவார்த்தை குழுவை பாகிஸ்தான் செல்ல வேண்டாம் என்று கூறிவிட்டேன். அவர்கள் (ஈரான்) விரும்பிய நேரத்தில் எங்களை அழைக்கலாம்.

ஆனால் எந்த பயனும் இல்லாமல் அங்கே அமர்ந்து பேசுவதற்காக இனி 18 மணி நேர பயணங்களை மேற்கொள்ளப் போவதில்லை என்றார்.

தற்போதைக்கு இரண்டாவது கட்ட அமைதிப்பேச்சுவார்த்தை ரத்தாகியுள்ள சூழலில் இனி பேச்சுவார்த்தை எப்போது நடைபெறும் அல்லது ஹார்முஸ் ஜலசந்தியில் தனது பிடியை மேலும் இறுக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதா? என பல்வேறு கேள்விகள் எழத்தொடங்கியுள்ளன.

ஏற்கனவே ஈரான் துறைமுகங்களை முற்றுகையிடுவதை கைவிட முடியாது என்று டிரம்ப் திட்டவட்டமாக கூறியிருப்பதால் மேற்காசியாவில் தொடர்ந்து பதற்றமே நிலவி வரும் நிலையில், தற்போது பேச்சுவார்த்தையில் ஏற்பட்டு இருக்கும் தொய்வு மேலும் பதற்றத்தை தூண்டுவதாக அமைந்துள்ளது.

Previous Story

පැය තුනක තීරණාත්මක සාකච්ඡාවක්! සලේ මැලේසියාවට ගිය විශේෂ හේතුවක් එළියට

Next Story

சினிமாவை மிஞ்சும் ரியல் சம்பவம்!