ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க ஆர்வம் காட்டுகிறது. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேச்சுவார்த்தைக்கு ஈரானை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைத்துள்ளார். அதற்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தான் ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆதரவு தெரிவித்துள்ளார். இது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் நீண்டகாலமாக மோதல் உள்ளது. குறிப்பாக டொனால்ட் டிரம்ப் முதல் முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பு வகித்தபோது ஈரானை கடுமையாக எதிர்த்தார். பொருளாதார தடைகளை விதித்தார்.
அதோடு ஈரான் – அமெரிக்கா இடையேயான அணுசக்தி திட்டத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்தார். ஆனாலும் ஈரான் கவலையடையவில்லை. ஈரான் தொடர்ந்து அணுசக்தி திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் தான்.
இந்த 2 நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் உள்ளது. மேலும் தற்போது அமெரிக்க அதிபராக மீண்டும் டொனால்ட் டிரம்ப் வந்துள்ளார். டொனால்ட் டிரம்பை ஈரான் கொல்ல முயன்றதாக குற்றச்சாட்டுகள் உள்ளது.
இதனால் எப்போது வேண்டுமானாலும் அமெரிக்காவால் ஆபத்து வரலாம் என்று ஈரான் நினைக்கிறது. அதேபோல் இஸ்ரேலுடன் ஈரானுக்கு பகை உள்ள நிலையில் அமெரிக்கா அந்த நாட்டுடன் நெருங்கிய நட்பில் உள்ளது. இதனால் இஸ்ரேலையும், அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் ‛அட்டாக்’ செய்யலாம் என்பதால் ஈரான் தலைவர்கள் தனது நாட்டின் பாதுகாப்பை மனதில் வைத்து அணுசக்தி திட்டத்தை தீவிரமாக்கி உள்ளனர்.
இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதுமட்டுமின்றி அணுசக்தி திட்டம் தொடர்பான புதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து டொனால்ட் டிரம்ப் சார்பில் ஈரானுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. ‛‛அணுசக்தி திட்டம் தொடர்பான புதிய ஒப்பந்தத்திற்கு உடன்பட வேண்டும்.
இந்த பேச்சுவார்த்தையில் இணையவில்லை என்றால் ஈரான் அணுஆயுதங்கள் தயாரிப்பதை அமெரிக்கா தடுக்கும்” என்று வார்னிங் செய்யப்பட்டது. இதற்கு ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன், ‛‛அமெரிக்கா உத்தரவுகளை பிறப்பித்து அதன் வழியாக எங்களை மிரட்டுவததை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
நாங்கள் ஒருபோதும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு போகமாட்டேன். அமெரிக்கா விரும்பியதை செய்யட்டும்” என்று பதிலடி கொடுத்தார். இதனால் இருநாடுகள் இடையே பிரச்சனை என்பது இன்னும் முற்றியுள்ளது. இதற்கிடையே தான் ஈரானின் அணு ஆயுதம் தயாரிக்கும் திட்டத்துக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆதரவு தெரிவித்துள்ளார்.
கடந்த 18 ம் தேதி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசினார். அப்போது உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தினார். அதேபோல் இன்னொரு முக்கியமான விஷயத்தை இருவரும் பேசினர்.
அது என்னவென்றால் ஈரான் விவகாரம். அதாவது அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் பிரச்சனை உள்ளது. அதேபோல் ஹமாஸ் அமைப்புக்கு எதிரான காசா மீதான போர் நடவடிக்கையால் இஸ்ரேல் – ஈரான் இடையே பிரச்சனை உள்ளது. இஸ்ரேல் மீது ஈரானும், ஈரான் மீது இஸ்ரேலும் நேரடியாக தாக்குதலை நடத்தி உள்ளன.
இருதரப்பு இடையே மோதல் வலுத்து வருகிறது. இதற்கிடையே தான் டொனால்ட் டிரம்ப் – விளாடிமிர் புதின் இடையேயான பேச்சுவார்த்தையில், இஸ்ரேலை அழிக்கும் முடிவை ஈரான் ஒருபோதும் எடுக்க கூடாது என்று டிரம்ப் கூறினார். அதற்கு விளாடிமிர் புதினும் ஓகே கூறினார்.
இதனால் நட்பு நாடான ஈரானை கைவிட்டு ரஷ்யா, அமெரிக்காவுடன் கைகோர்த்துவிட்டதா? என்ற கேள்வி எழுந்தது. இதற்கிடையே தான் இன்று ரஷ்ய செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவிடம் இதுபற்றி கேள்வி கேட்கப்பட்டது.
அதாவது ‛‛ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான உள்கட்டமைப்பு மீது அமெரிக்கா அல்லது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் ரஷ்யாவின் பதில் என்னவாக இருக்கும்?” என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு ரஷ்ய செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோ, ‛‛ஈரானின் அணுசக்தி திட்டம் என்பது அமைதியான அரசியல் மற்றும் ராஜதந்திரம் வழியாக மட்டுமே தீர்க்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதற்கு தேவையான அனைத்து சூழலும் ஏற்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.
பிற எல்லா நாடுகளை போலவே அமைதியான அணுசக்தி துறையை வளர்க்க ஈரானுக்கும் உரிமை என்பது உண்டு. இதனை நம்மால் மறுக்க முடியாது. இதனால் அதற்கான நடவடிக்கைகளை ஈரான் எடுக்கிறது.
இத்தகைய நடவடிக்கை என்பது சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் கண்டிப்பாக இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்கா – ஈரான் இடையே அணுசக்தி ஒப்பந்தம் என்பது செய்யப்பட்டது. ஆனால் டொனால்ட் டிரம்ப் முதல் முறை அதிபராக இருந்த காலத்தில் அவருக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
ஈரான் மீது கடும் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டது. அணுசக்தி ஒப்பந்தம் என்பது ரத்து செய்யப்பட்டது. இப்படியான சூழலில் தான் மீண்டும் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த ஈரானுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடிதம் எழுதியிருந்தார். ஆனால் அதற்கு ஈரான் சம்மதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.