மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. அமெரிக்கா ஈரானுக்கு எதிராக நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஈரான் புரட்சிகர காவல் படை (IRGC) அமெரிக்க ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் இரு நாடுகளுக்கு இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் மீது கேள்வி எழுப்பியுள்ளது. இதோடு ஈரானின் பதிலடி தாக்குதல் மூலம் கச்சா எண்ணெய் விலை தடாலடியாக உயர்ந்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் 3.01 சதவீதம் உயர்ந்து 99.03 டாலராக உள்ளது.

ஈரான் படைகளின் தாக்குதல் நடவடிக்கை ஈரானின் புரட்சிகர காவல் படை (IRGC) அமெரிக்காவின் MQ-9 ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாகவும், F-35 போர் விமானம் மற்றும் RQ-4 ட்ரோன் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை அமெரிக்கா ஈரானுக்கு எதிராக நடத்திய தாக்குதல்களுக்கு எதிரான பதிலடியாகும்.
இதில் எப்-35 ரக போர் விமானம் உலகிலேயே சக்திவாய்ந்த விமானமாகும். ஈரான் ஏற்கனவே எப்-35 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளது. அமெரிக்க நடவடிக்கையை “போர் நிறுத்தத்தை மீறிய செயல்” என்று ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. மேலும், தனக்கு மேலும் பதிலடி கொடுக்க உரிமை உள்ளதாக ஈரான் வலியுறுத்தியுள்ளது.
கமேனியின் கடும் எச்சரிக்கை ஈரான் உச்ச தலைவர் முஜ்தபா கமேனி தனது தனி அறிக்கையில், வளைகுடா நாடுகள் இனி அமெரிக்க ராணுவ தளங்களுக்கு கேடயமாக இருக்காது என்றும், அமெரிக்காவுக்கு இப்பகுதியில் பாதுகாப்பான இடம் இல்லை என்றும் கடுமையாக எச்சரித்துள்ளார்.
கமெனியின் இந்த அறிக்கை வளைகுடா பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. ஏற்கனவே அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது மீண்டும் தாக்குதலை துவங்குவதற்காக திட்டமிட்டு வந்தது. கடந்த 3 நாட்களாக அமைதி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் வழக்கம் போல் தோல்வியில் முடிந்தது.

வழக்கமாக அமெரிக்கா தான் ஈரானின் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவிக்கும், ஆனால் இந்த முறை டிரம்ப் அரசு ஈரானின் சில கோரிக்கைகளை ஏற்க தயாராக இருந்தாலும் இப்போரில் அமெரிக்க கூட்டணி நாடுகள் கடுமையாக மறுப்பு தெரிவித்தது.
அமெரிக்காவின் தாக்குதல் அமெரிக்கா திங்கள்கிழமை ஈரானின் தெற்குப் பகுதியில் புதிய தாக்குதல்களை நடத்தியது. ஈரானிய ஏவுகணை தளங்கள் மற்றும் கடலில் கன்னிவெடி வைக்க முயற்சிக்கும் படகுகளை குறிவைத்து தாக்குதல் நடைபெற்றதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க மத்திய தளபதி (Centcom) இந்த தாக்குதல்கள் “தற்காப்பு நடவடிக்கை” என்றும், ஈரானிய படைகளால் தங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தலைத் தடுக்கவே இந்த தாக்குதலை நடத்தப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார். மேலும், போர் நிறுத்தத்தின் போதும் தங்களது படைகள் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு வருவதாக அமெரிக்கா கூறியுள்ளது.
இரு தரப்பும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டும் நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான இந்த மோதல் எண்ணெய் வர்த்தகம், கப்பல் போக்குவரத்து மற்றும் பிராந்திய பாதுகாப்பை பெரிதும் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது. இதேவேளையில் இந்த தாக்குதல் முழு போராக மாறுகிறதா என்ற அச்சமும் எழுந்துள்ளது.




