“எனது கைது எதிர்பார்க்கப்பட்டதே”-இம்ரான் 

தனது கைது எதிர்பார்க்கப்பட்டதே என்றும், கட்சித் தொண்டர்கள் உறுதியான எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்றும் பாகிஸ்தான் தெரீக் இ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து இஸ்லாமாபாத் விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து இம்ரான் கான் உடனடியாக கைது செய்யப்பட்டார். மேலும், அவர் அரசியலில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எவ்வித தேர்தலிலும் போட்டியிட இயலாத வண்ணம் தகுதியிழந்துள்ளார்.

 

இந்நிலையில், கைது ஆவதற்கு முன் இம்ரான் கான் பேசிய வீடியோ தற்போது வெளியிடப்பட்டு வைரலாகி உள்ளது. அதில் அவர் கூறி இருப்பதாவது: “இந்த வீடியோ உங்களை வந்தடையும்போது நான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பேன். எனவே, உங்கள் அனைவருக்கும் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். நீங்கள் வீட்டில் அமைதியாக அமர்ந்திருக்காதீர்கள்.

இதுவரையிலான எனது முயற்சிகள் எதுவும் எனக்கானது அல்ல. எனது மக்களுக்காக, எனது சமுதாயத்துக்காக, உங்களுக்காக. உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக. உங்கள் உரிமைக்கா நீங்கள் உறுதியாக நிற்காவிட்டால் நீங்கள் அடிமை வாழ்க்கையை வாழ நேரிடும். அடிமைகளுக்கு வாழ்க்கை என்று எதுவும் கிடையாது என்பதை மனதில் கொள்ளுங்கள்.” இவ்வாறு அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

பின்னணி: இம்ரான் கான் 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார். அவரது தலைமையிலான கூட்டணியிலிருந்து விலகிய முக்கியக் கட்சி ஒன்று, எதிர்க்கட்சியுடன் இணைந்தது. இதனால் நாடாளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகினார். ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக பொறுப்பேற்றார். பதவி இழப்புக்குப் பிறகு இம்ரான் கான் மீது ஊழல், மோசடி, கொலை மிரட்டல் என பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதில் கடந்த 2018 முதல் 2022 ஆம் ஆண்டு வரை இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது அவர் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டபோது வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகள், விலையுயர்ந்த பொருட்களை விற்று கிடைத்த பணத்தை மோசடி செய்ததாக ஒரு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை இஸ்லாமாபாத் விசாரணை நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்நிலையில் அந்த வழக்கில் இம்ரான் கான் குற்றவாளி என்று உறுதி செய்த நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கியுள்ளது.

ஏற்கெனவே, இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்குச் சொந்தமான காதிர் அறக்கட்டளை மூலம் ரூ.5,000 கோடி ஊழல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது. அந்த வழக்கில் இம்ரான்கானை கைது செய்ய ஊழல் தடுப்பு ஆணையம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். பின்னர் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசுக் கருவூலமான தோஷகானாவிடம் இருந்த பரிசுப் பொருட்களை சட்டவிரோதமாக விற்றதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளி என்று இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பையடுத்து லாகூரில் உள்ள இல்லத்தில் இருந்த இம்ரான் கானை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த இஸ்லாமாபாத் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதி ஹுமாயுன் தில்வார், இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடையும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

இம்ரான் கான் கைது

இம்ரான் கான் மீதான வழக்கின் தீர்ப்பு காரணமாக நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒருதலைபட்சமானது என்று இம்ரான் கானின் கட்சியான தெக்ரீக்-இ-இன்சாப் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ வரலாற்றில் மிக மோசமான இந்த விசாரணையில், ஒருதலைப்பட்சமாக செயல்படும் நீதிபதி நீதியை கொலை செய்ய முயற்சித்துள்ளார், ஒரு குறிப்பிட்ட அஜண்டாவின் கீழ் வழக்கில் உள்ள உண்மைகள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து, இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடை விதிக்கப்படுவதாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர் அம்ஜத் பர்வேஸ் தெரிவித்துள்ளார்.

இம்ரான் கான்

இம்ரான் கான் மீதான வழக்கு என்ன?

தோஷகானா என்பது அரசு கருவூலம். பிரதமர், அதிபர் அல்லது பிற முக்கியத் தலைவர்கள் விஜயத்தின்போது அளிக்கப்படும் பெறுமதிமிக்க பரிசுகள் இங்கு வைக்கப்படுகின்றன.

எந்தவொரு வெளிநாட்டுப் பயணத்தின்போதும், வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரிகள் தங்களுக்கு அளிக்கப்படும் பரிசுகள், திரும்பி வரும்போது அவை தோஷகானில் வைக்கப்படும்.

தோஷகானில் வைக்கப்படும் பொருட்கள் நினைவுப் பொருட்களாகக் கருதப்படுகின்றன. அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகே இங்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களை விற்பனை செய்ய முடியும்.

பாகிஸ்தானில், இத்தகைய பரிசுப் பொருளின் மதிப்பு 30,000க்கும் குறைவாக இருந்தால், அதை சம்பந்தப்பட்டவர் இலவசமாக வைத்துக்கொள்ளலாம்.

அதற்கு மேல் இருந்தால், அந்த விலையில் 50 சதவீதத்தை டெபாசிட் செய்து வாங்கிக்கொள்ளலாம்.

2020ஆம் ஆண்டுக்கு முன்பு, பொருட்களின் அசல் விலையில் 20 சதவீதம் மட்டுமே டெபாசிட் செய்ய வேண்டும்.

இந்தப் பரிசுகளில் பொதுவாக விலை உயர்ந்த கடிகாரங்கள், தங்கம், வைர நகைகள், விலை உயர்ந்த ஆபரணங்கள், நினைவுப்பொருட்கள், வைரம் பதித்த பேனாக்கள், மண், பீங்கான் போன்றவற்றில் ஆன பாண்டங்கள், தரை விரிப்புகள் ஆகியவை அடங்கும்.

உண்மையில், இம்ரான் கான் ஆட்சியில் இருந்தபோது வாங்கிய பரிசுப் பொருட்கள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையான தகவல் தெரிவிக்கவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இம்ரான் கான்

இம்ரான் கான் வாங்கிய பரிசுகள் என்ன?

பாகிஸ்தான் பிரதமராகப் பதவியேற்ற இரண்டு மாதங்களிலேயே இம்ரான் கான், தோஷகானாவில் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்து பல பரிசுகளை வாங்கியுள்ளார். இதில் சுமார் 85 லட்சம் மதிப்பிலான கைக்கடிகாரம், 60 லட்சம் மதிப்புள்ள கஃப், 87 லட்சம் மதிப்புள்ள பேனா, மோதிரம் ஆகியவை அடங்கும்.

இதேபோல் தோஷகானா நிறுவனத்திடம் இருந்து 7.5 லட்சம் மதிப்புள்ள ரோலக்ஸ் கைக்கடிகாரத்தையும் 15 லட்சம் மதிப்புள்ள ரோலக்ஸ் கடிகாரத்தையும் 2.5 லட்சத்திற்கு இம்ரான் கான் வாங்கியுள்ளார்.

மற்றொரு சந்தர்ப்பத்தில், இம்ரான் கான், 49 லட்சம் மதிப்புள்ள கஃப்லிங்க் மற்றும் கடிகாரங்கள் அடங்கிய பெட்டியை பாதி விலையில் வாங்கினார்.

இதுதவிர, பரிசுப் பொருட்களை வாங்குவதற்கு விற்பதற்கும் 2 கோடி ரூபாய்க்கு பதிலாக 80 லட்சம் ரூபாய் மட்டுமே தோஷகானாவிடம் வழங்கப்பட்டது.

ஆவணங்களின்படி, விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் கைக்கடிகாரமும் தேர்தல் ஆணையத்தின் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.

இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபியின் முதல் சௌதி அரேபிய பயணத்தின்போது பரிசாக இந்தக் கடிகாரம் வழங்கப்பட்டது.

இதன் விலை 85 கோடி எனக் கூறப்படுகிறது. இம்ரான் கான் இந்தக் கடிகாரத்தை 20 சதவீத விலை கொடுத்து வாங்கியுள்ளார்.

Previous Story

உலக கோப்பை 2023: இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளில் மாற்றம்

Next Story

சஜித் ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமற்றவர்- விக்னேஸ்வரன்