“இந்தியா பிடிக்கும் என்றால் அங்கேயே போங்கள்” -மர்யம் நவாஸ்

இம்ரான் கானுக்கு இந்தியாதான் பிடிக்கும் என்றால் அங்கேயே செல்லுங்கள் என்று கடுமையாகச் சாடியிருக்கிறார் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்நவாஸ் கட்சியின் துணைத் தலைவர் மர்யம் நவாஸ்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தலைவிதியை தீர்மானிக்கும் தேசிய அவையின் (நாடாளுமன்றம்) கூட்டத்தொடர் நீண்ட தாமதத்திற்கு பிறகு இன்று பிற்பகல் மீண்டும் தொடங்கியது.

தொடக்கத்தில் பகல் 12:30 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற அமர்வு, எதிர்கட்சி மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரின் அறையில் கூடி ஆலோசனை நடத்தினர். வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி, ஆளும் பிடிஐ தலைவர் அமீர் டோகர் ஆகியோர் ஆளும் கட்சி சார்பிலும், பிலாவல் பூட்டோ-சர்தாரி, ராணா சனாவுல்லா, அயாஸ் சாதிக், நவீத் கமர் மற்றும் மௌலானா ஆசாத் மஹ்மூத் ஆகியோர் எதிர்கட்சி சார்பிலும் கலந்து கொண்டனர். கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, எதிர்கட்சிகளின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் எதிர்கட்சித் தலைவரின் அறையில் நடைபெற்றது. இதையடுத்து பிற்பகலில் நாடாளுமன்ற அமர்வு கூடியபோது பேசிய பிஎம்எல் நவாஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் கவாஜா சாத் ரஃபீக், இஃப்தாருக்குப் பிறகு நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று சபாநாயகர் உறுதியளித்ததாகக் கூறினார்.

இதற்கிடையே, நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ரத்து செய்த துணை சபாநாயகரின் ஏப்ரல் 3 உத்தரவை ரத்து செய்த தேசிய அவையின் கூட்டத்தை கூட்ட அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து ஆளும் கட்சி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

இந்த விவகாரங்களுக்கு மத்தியில் நாடாளுமன்ற அமர்வு பிற்பகலில் கூடியது.

தாமதமாக தொடங்கிய அமர்வு

முன்னதாக, நாடாளுமன்ற சபாநாயகர் ஆசாத் கெய்சர் இன்று காலை 10:30 மணிக்கு, பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க, புனித குர்ஆன் வரிகளை ஓதி கூட்ட அமர்வை தொடங்கி அவை அலுவலுக்கு தலைமை தாங்கினார். இதைத்தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட அவை, இரண்டு மணி நேர தாமதத்திற்குப் பிறகு மீண்டும் கூடியது. அப்போது அவைக்கு மூத்த உறுப்பினர் அம்ஜத் அலி கான் நியாஜி தலைமை தாங்கினார்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்றைய நாடாளுமன்ற கூட்ட நிகழ்ச்சி நிரலில் நான்காவது விடயமாக இடம்பெற்றது. எதிர்கட்சிகள் முழு பலத்துடன் அவைக்கு வந்திருந்த வேளையில், ஆளும் கட்சி உறுப்பினர்கள் வெகு சிலரை அவையில் இருந்தனர். பிரதமர் இம்ரான் கான் மாலை 5 மணிவரை நிகழ்வில் பங்கெடுக்கவில்லை.

இன்று நண்பகலில் அவை ஒத்திவைக்கப்பட்ட பிறகு நாடாளுமன்ற அமர்வு மீண்டும் தொடங்கியதும், சில உறுப்பினர்கள் பண ஆதாயத்திற்காக தங்களுடைய விசுவாசத்தை மாற்றிக்கொண்டார்கள் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி குற்றம்சாட்டினார்.

“அரசியலமைப்பை உறுதிப்படுத்துவோம் என்று சபதம் எடுத்த அவர்கள் இந்த அவை சந்தை போல ஆவதை பார்க்கவில்லையா?”

கடந்த ஆண்டு செனட் தேர்தல்களின் போது எப்படி வாக்குகள் வாங்கப்பட்டன மற்றும் விற்கப்பட்டன என்பதை தேசம் நன்கு அறிந்திருப்பதாக குரேஷி கூறினார். “நாங்கள் ஆட்சேபனைகளை எழுப்பினோம் உறுப்பினர்கள் பேரம் பேசப்படும் காணொளிகளை பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தில் (ECP) வழங்கினோம். ஒரு வருடமாக தேர்தல் ஆணையத்தின் கதவுகளைத் தட்டிக் கொண்டே இருந்தோம். நீண்ட இழுபறிக்குப் பிறகு வழக்குகள் முடிவடைந்தன. [ஆனால்] ஓராண்டு கடந்த பிறகும் அவற்றின் மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுவரை எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை, “என்று குரேஷி குறிப்பிட்டார்.

பிரதமரை வீழ்த்தப்போகிறோம்

எதிர்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் பேசுகையில், “நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரிப்பதற்கான துணை சபாநாயகரின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிராகரித்த ‘வியாழக்கிழமையை’ ஒரு வரலாற்றுபூர்வ நாள்” என்று அழைத்தார். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு பாகிஸ்தானின் எதிர்காலத்தை “பிரகாசமாக” மாற்றியுள்ளதாக அவர் கூறினார்.

துணை சபாநாயகரின் தவறான முடிவுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்த பிற எதிர்கட்சித் தலைவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

“இந்த நாடாளுமன்றம் வரலாற்றை எழுதப்போகிறது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு இணங்க நடவடிக்கைகளை சபாநாயகர் மேற்கொள்ள வேண்டும். சபாநாயகர் தனது பங்களிப்பை வழங்கி, “வரலாற்றில் பொன்னான வார்த்தைகளால் எழுதப்பட்ட” பெயரைப் பெற வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

“இந்த தருணத்தை நீங்கள் உறுதியுடனும், முழு இதய சுத்தியுடனும் அணுக வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரின் சொல்படி செயல்பட வேண்டாம், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள் தெளிவாக உள்ளன,” என்று அவர் பேசினார்.

வசை பாடிய மர்யம்

இதேவேளை, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் (பிஎம்எல்-என்) துணைத் தலைவர் மர்யம் நவாஸ் ஷெரீப், இம்ரான் கானின் செயல்பாட்டை கடுமையாகச் சாடி அவர் கருத்துகளை வெளியிட்டுள்ளார். உச்ச நீதிமன்ற உத்தரவை மீறினால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்று அவர் எச்சரித்தார். பிரதமர் இம்ரான் கான் தனக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொள்வதற்கு பயந்து, நாட்டின் ஒட்டுமொத்த அமைப்பையே முடக்கிவிட்டார் என்று மர்யம் கூறினார்.

22 கோடி மக்கள்தொகை கொண்ட நாட்டில் பல வாரங்களாக அரசாங்கமே இல்லை என்று மர்யம் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

மேலும், இம்ரான் கான் ஒரு பிரதமராகவோ அல்லது முன்னாள் பிரதமராகவோ கருதப்படாமல், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஒட்டுமொத்த நாட்டையும் பணய கைதியாக வைத்திருக்கும் மனநோயாளியாக கருதப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். புத்தி இல்லாதவ ஒருவர், முழு நாட்டையும் அழிக்க அனுமதிக்கக் கூடாது என்று அவர் சாடினார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு இந்தியா என்றால் மிகவும் பிடிக்கும் என்றால் அவர் பாகிஸ்தானை விட்டு அங்கேயே செல்ல வேண்டும் என்று மர்யம் கூறினார்.

இந்திய மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வாஜ்பேிய பிரதமராக இருந்தபோது அவரது அரசாங்கம் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறத் தவறிய நேரத்தில், இந்திய அரசியலமைப்பின்படி முன்னாள் இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ராஜிநாமா செய்ததை முன்மாதிரியாகக் குறிப்பிட்டு இம்ரான் கானை கடுமையாக சாடினார் மர்யம் நவாஸ்.

பாகிஸ்தானில் என்ன நடக்கிறதுசில வரிகளில்

  • பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஆளும் இம்ரான் கான் அரசாங்கம் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை எதிர்கொள்வதற்கான விவாதத்தை எதிர்கொண்டு வருகிறது. மூன்று மணி நேரம் ஒத்திவைக்கப்பட்ட இந்த அவை மீண்டும் கூடியது. இந்த அலுவலில் பிரதமர் இம்ரான் கான் மாலை 4.30 மணிவரை கலந்து கொள்ளவில்லை.
  • இம்ரான் கானின் பாகிஸ்தான் டெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி இந்த மாத தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் அதற்குள்ள பெரும்பான்மையை இழந்தது, அப்போது ஒரு முக்கிய கூட்டணிக் கட்சி அதன் ஏழு எம்பிக்களும் எதிர்கட்சியுடன் இணைந்து ஆளும் அரசுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று கூறியது. ஆளும் கட்சியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் தாங்கள் கட்சி மாறி வாக்களிக்கப் போவதாக குறிப்பிட்டுள்ளனர்.
  • 342 உறுப்பினர்கள் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 172க்கும் அதிகமான வாக்குகள் தங்கள்வசம் இருப்பதாக எதிர்கட்சி கூறுகிறது, இதனடிப்படையில் ஆளும் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டுமானால், இந்த பலத்தில் (கோரம் ஒன்றிற்கு கால் பங்கு உறுப்பினர்கள்) கால் பங்கு உறுப்பினர்கள் அவையில் இருக்க வேண்டும். ஆனால், ஆளும் உறுப்பினர்கள் பலரும் அவைக்கு வராததால் நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பை தாமதப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்கட்சி குற்றம்சுமத்தியுள்ளது.
  • கடந்த வெள்ளிக்கிழமை இரவு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய இம்ரான் கான், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க பாகிஸ்தானின் மக்களுக்கு அழைப்பு விடுத்தார். பொதுமக்கள் நாட்டை பாதுகாக்க, ஞாயிற்றுக்கிழமை வீதிகளுக்கு வந்து “இறக்குமதி செய்யப்படும் அரசாங்கத்திற்கு” எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்துமாறு இம்ரான் கான் கேட்டுக்கொண்டார்.
  • வெளிநாட்டு சக்திகள் தனது அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிப்பதாகவும், அதை நிறைவேற்ற பாகிஸ்தானின் சட்டமியற்றுபவர்கள் (எம்பிக்கள்) செம்மறி ஆடுகளைப் போல பேரம் பேசி வருவதாகவும் பிரதமர் கான் குற்றம்சாட்டினார்.
  • முன்னதாக, தன்னை பதவி நீக்கம் செய்ய வகை செய்யும் நாடாளுமன்ற நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பைத் தடுக்கும் வகையில் இம்ரான் கான் மேற்கொண்ட நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை ரத்து செய்தது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆளும் கட்சியைச் சேர்ந்த துணை சபாநாயகர் நிராகரித்தது அரசியலமைப்புக்கு எதிரானது என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. தேசிய அவையை மறுசீரமைக்க ஏதுவாக ஒரு கூட்டத்தை அழைக்கவும் சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
  • நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பில் இம்ரான் கான் தோல்வியுற்றால், அந்நாட்டின் எதிர்கட்சி பிரதமராக ஒருவரை தேர்வு செய்யலாம். அதன் மூலம் 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை எதிர்கட்சியால் ஆளும் அதிகாரத்தை கையில் வைத்திருக்க முடியும், அந்த தேதிக்குள் புதிய தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.
Previous Story

புதிய பிரதமர் டலஸ் அழகப்பெரும?

Next Story

மக்கள் புரட்சிப் போராட்டம்! ஜனாதிபதி செயலகம் முற்றுகை!!