-நஜீப் பின் கபூர்-
அரசியல் அரங்கில் பொதுவாக அதிரடி மாற்றங்கள் நடப்பது இயல்பானது. இது நமது நாட்டு அரசியலிலும் அவ்வப்போது நடந்துதான் வந்திருக்கின்றது. அந்த வகையில் அரசியல் பல்டிகள் கூட்டணிகளும் நமக்குப் புதிய விவகாரம் அல்ல. ஆனால் நாம் இங்கு பேசப் போவது அதற்கு சற்று மாற்றமான கதைகள் தொடர்பான தகவல்களாகவே காணப்படுகின்றன. மொட்டுக் கட்சியை அதிகாரத்துக்குக் கொண்டு வருவதற்காக சதிகள் மோசடிகள் கட்டுக் கதைகள் படுகொலைகள் என்ற எல்லைகளையும் கடந்து சென்றிருந்தன என்று பரவலான குற்றச்சாட்டுக்கள் இருந்து வருகின்றன. இவற்றிற்க்கு ஊடகங்களும் பாதாள உலகமும் மற்றுமன்றி மதமும் ஒத்துழைத்திருப்பதும் தெரிய வந்திருக்கின்றன.
இன்றும் அதே போன்ற ஒரு பின்னணியே புதிய பல கோணங்களில் இருந்து செயல்பட ஆரம்பித்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. அது பற்றி குடிமக்களைத் தெளிவூட்டுகின்ற ஒரு முயற்ச்சியைத்தான் நாம் இந்த வாரம் செய்ய இருக்கின்றோம். இதை நாம் ஆளும் தரப்பு எதிரணி என்றும் பார்க்கப்பட வேண்டி இருக்கின்றது. இதனால்தான் அரசியல் அரங்கில் அபூர்வக் காட்சிகள் என்று நாம் இதனை சொல்கின்றோம். இப்போது அரச தரப்பு நாடகங்களைப் இப்போது பார்ப்போம். அதில் மொட்டுக் கட்சி நாடாளுமன்றப் பெரும்பான்மையும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்து ரணில் ஜனாதிபதியாக இருப்பதும் அனைவரும் அறிந்த செய்தி.
ஒரு காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் இன்று நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை வைத்திருக்கின்ற ராஜபக்ஸாக்கள் தலைமையிலான மொட்டுக் கட்சியினரும் சுதந்திரத்துக்குப் பின்னிருந்து இன்று வரை பரம எதிரிகளாக அரசியல் களத்தில் செயலாற்றி வந்திருக்கின்றன. கடைசிய நடந்த தேர்தலிலும் ரணிலும் ராஜபக்ஸாக்களும் அரசியல் எதிரிகளாகவே மக்கள்முன் பரப்புரைகளை மேற்கொண்டு வந்திருந்தனர். ஒரு முறை இதே நாடாளுமன்றத்தில் மஹிந்தவை கள்வர்கள் கள்வர்கள்… என்று ரணில் கோஷமெழுப்ப அவரது சகாக்களும் அந்த கோஷத்தால் நாடாளுமன்றத்தையே அதிர வைத்தனர். அதே போன்று கடந்த பொதுத் தேர்தலில் மத்திய வங்கிக் கொள்ளைக்காக ரணிலைத் தண்டிப்போம் என்று அதிகாரத்துக்கு வந்த மொட்டுக் கட்சியினர் இன்று ரணிலிலை புகழ்பாடிக் கொண்டிருக்கின்றனர்.
அரச சொத்துக்களை ரணில் வெளி நாடுகளுக்கு விற்பனை செய்வதையும் தனியார் மயப்படுத்துவதையும் கடுமையாக விர்சனம் செய்து வந்த ராஜபக்ஸாக்களும் மொட்டுக் கட்சியினரும் இன்று ரணிலுடன் சேர்ந்து போட்டி போட்டுக் கொண்டு அந்தக் காரியத்தை செய்து கொண்டிருக்கின்றனர். ஐஎம்எப் கடன் நிபந்தனைக்காக இது இன்று கடுகதி வேகத்தில் போய்க் கொண்டிருக்கின்றது. உண்மையிலே நமது கணிப்புப்படி இதற்கு மொட்டுக் கட்சியில் இருக்கின்ற கணிசமான ஒரு தொகை உறுப்பினர்கள் எதிரான மனநிலையைக் கொண்டவர்களாக இருந்தாலும் இந்த அரசாங்கம் அதிகாரத்தில் இருக்கும் வரை முடியுமான மட்டும் பிழைத்துக் கொண்டு போவோம் என்ற தன்னல அரசியலுக்கு முதலிடம் கொடுத்துக் கொண்டிருப்பதால் அவர்கள் அவற்றைக் கண்டு கொள்ளாமல் இருக்கின்றார்கள். அவை அப்படி இருக்க..
இன்று மொட்டுக் கட்சிக்குள் ஒரு கொந்தளிப்பான நிலை தோன்றி வருவதையும் நாம் அவதானிக்க முடிகின்றது. இது இயல்பாக நடக்கின்றதா அல்லது திட்டமிட்டு மக்களை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்படுகின்றதா என்பது தெளிவில்லாமல் இருக்கின்றது. ஆளும் மொட்டுக் கட்சியில் இருக்கின்ற ஒரு தொகை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஜித் அணியுடன் இணைய இருப்பதாக இரகசியப் பேச்சுவாhத்தைகளில் இறங்கி இருப்பதாகவும் மற்றும் சிலர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுடன் இணைந்து பயணிக்க முயல்வதாகவும் சொல்லப்படுகின்றது.
அதே நேரம் ரணிலை ஹீரோவாக்கி ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்தும் ஒரு முயற்ச்சியும் தற்போது நடந்து கொண்டிருக்கின்றது. இதனால் மொட்டுக் கட்சி இன்று ரணில் ராஜபக்ஸ அணிகள் என்று பிளவுபட்டு நிற்பதாகவும் தெரிகின்றது. நமக்கு மிகவும் தெரிந்த ஒரு மொட்டுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளர் ஒருவர் அண்மையில் மொட்டுக் கட்சிக் கூட்டமொன்றில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக சில தகவல்களை நமக்குச் சொன்னர். அதன்படி ரணிலிடம் அமைச்சுப் பெற்ற பலர் ராஜபக்ஸாக்கள் கூட்டங்களுக்கு அழைத்தால் அவற்றை தவிர்த்து ரணில் அழைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுத்து நடந்து கொள்கின்றார்கள். இதற்கு எதிராக கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் அங்கு பேசி இருக்கின்றார்கள். அத்துடன் தான் விரும்பியவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை ரணில் கொடுப்பதால் அமைச்சரவையிலும் நாடளுமன்றத்திலும் ரணிலுக்கு விசுவாசமான ஒரு அணி மொட்டில் உருவாகி இருப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் வருகின்றன.
மேலும் ஏதாவது காரியங்கள் சாதித்துக் கொள்வதாக இருந்தால் மொட்டுக் கட்சி முக்கியஸ்தர்கள் ரணிலின் கையாட்களான வஜிர சாகல ருவன் ரங்கே அகில பின்னால் சென்றுதான் அவற்றை சாதிக்க வேண்டி இருக்கின்றது. இது பெருத்த அவமானம் என்றும் அந்தக் கூட்டத்தில் தமது அங்கலாய்ப்பை ராஜபக்ஸாக்களிடம் தெரியப்படுத்தி இருக்கின்றார்கள். புதிதாக நியமிக்கபடும் என்று எதிர்பார்க்கின்ற அமைச்சரவை மாற்றத்தின் போது மஹிந்த பசில் சிபார்சுகளை ரணில் உள்வாங்கிக் கொள்வதில் ஆர்வமில்லாது இருப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. இது தொடர்பாக பசில் தனது சிபர்சுகளைக் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணிலை நேரடியாகச் சந்தித்து சொன்ன போதும் அவர் அதற்கு எந்தப் பதிலையும் கொடுக்கவில்லை பார்ப்போம் என்று மட்டு தலையை அசைத்திருக்கின்றார்.
புதிய அமைச்சுக்களை ரணில் நியமனம் செய்யும் போது தனக்கும் இடம் வேண்டும் என்று டசன் கணக்கானவர்கள் எதிர்பார்ப்பதால் இவர்கள் இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது தமக்கு பதவிகள் கிடைக்காவிட்டால் ரணிலுக்கு எதிரான நிலைப்பாட்டை நாடாளுமன்றத்தில் எடுக்க இருப்பதாகவும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற கதையும் வேறு இருக்கின்றது. இதனால் அமைச்சுக் கொடுப்பதில் நிறையவே ஆளும் தரப்புக்குள் குறிப்பாக ரணில்-ராஜபக்ஸ தரப்பினர் இடையே முறுகல் போக்கு ஏற்பட்டிருக்கின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது. ரணில்-ராஜபக்ஸ அதிகார அரசியலில் இருக்கும் வரை அவர்களுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் நிலைப்பாட்டில்தான் பெரும் தொகையான மொட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்து வருகின்றார்கள்.
தமக்குக் கிடைத்திருக்கின்ற இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சியை மீண்டும் நிமிர்த்தி பார்க்க அதன் முக்கியஸ்தர்கள் முனைக்கின்றார்கள் இது வலைந்து கிடைக்கின்ற வலை மரத்துக்கு முட்டு வைப்பது போல ஒரு பணி. நமது கணக்குப்படி முறிந்து விட்ட மரத்துக்குத்தான் அவர்கள் இப்போது முட்டு வைக்க முயல்கின்றார்கள். அது எப்படி வெற்றியளிக்கும்? ஆனால் அவர்கள் சொல்லவது போல சஜித் அணியில் பலர் ரணிலுடன் இணைந்து அரசுக்கு ஒத்துழைப்புக் கொடுக்கும் நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள் என்பதும் வெளிப்படை. ஆளும் தரப்பு மிகவும் பலயீனமாக இருக்கின்ற இந்த நேரத்தில் அவர்கள் இப்படி நடந்து கொள்வது சஜித்தின் ஆளுமை தொடர்பான பிரச்சனை என்பது நமது கருத்து.
இந்த அரசாங்கத்தை பதவிக்குக் கொண்டு வருவதற்கு கடந்த காலங்கள் நடத்தப்பட்ட நடாகங்களைப் போல பல கதைகளை இப்போது ஊடகங்கள் பேச ஆரம்பித்திருக்கின்றன. மீண்டும் மஹிந்தவை பிரதமராக்குவது. ரணில்தான் அரச சொத்துக்களைவிற்க முனைக்கின்றார். நாம் அவற்றை ஒத்துக் கொள்ள மாட்டோம் என்று ஆளும் தரப்பிலுள்ள பலர் இப்போது பேசி வருகின்றார்கள். கோட்டா பிழையான ஒரு மனிதனல்ல அவர் எடுத்த சில தீர்மானங்கள்தான் தவறு என்றும் இல்லை கோட்டாவை இந்தப் பதவிக்கு கொண்டு வந்தது தவறு என்று இன்னும் சிலரும் பேசுகின்றார்கள்.
நேரடியாகவே மொட்டுக் கட்சிக் கூட்டங்களில் தற்போது அரசியல் போக்கையும் ரணிலையும் மொட்டுக் கட்சியில் உள்ள பின்வரிசை உறுப்பினர்கள் விமர்சிக்கின்றார்கள். ஆனால் அதிலுள்ள பெரும்பாலனவர்கள் மதில் மேல் பூனை விளையாட்டில்தான் இருக்கின்றார்கள். என்றோ ஒரு நாள் மக்கள் முன்வந்துதான் ஆக வேண்டும் என்பதை அவர்களில் பலர் குறிப்பாக ராஜபக்ஸாக்கள் உணர்ந்திருக்கின்றார்கள். அதனால் சம்பலில் இருந்து ஒரு முறை பறக்க முயன்றார்கள் அது எடுபடவில்லை. இப்போது மொணராகலையில் இருந்து கட்சியை மக்கள் முன்கொண்டு வருவது என்று முடிவெடுத்திருக்கின்றார்கள். ஆனால் அதற்காக ஒரு நிகழ்ச்சி நிரல் இன்றுவரை தயாராகவில்லை.
தற்போது ஐஎம்எப் விதி முறைகளை அமுல்படுத்துகின்ற போது ஆளும் மொட்டுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் உண்மையான உருவம் தெரியவரும். தற்போது நடக்கும் பெற்றோலியப் போராட்டத்தின் போது ஆளும் மொட்டுக் கட்சி முக்கிய தலைவர்கள் பலர் அந்தக் கட்சி முடிவுகளுக்கு மாற்றமாக எதிரணி தொழிற்சங்கங்களுடன் இணைந்து கொண்டிருப்பது அரசுக்கு நெருக்கடியைக் கொடுத்து அந்த கட்சி உறுப்பினர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தை நியாயப்படுத்தி துறைக்குப் பொறுப்பான அமைச்சர் கஞ்சன ஊடகங்களிடத்தில் கருத்து சொன்னாலும் மொட்டுக் கட்சி செயலாளர் காரியவாசம் அதற்கு மாற்றமான கருத்தை சொல்லி இதுதான் நமது கட்சியில் இருக்கின்ற ஜனாநாயகம் என்று பூசிமொழுகி இருக்கின்றார். இப்படி ஆளும் தரப்பு நாடகங்களும் அரசியல் இருப்புக்கான சதிகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்ற போது இப்போது எதிரணி பற்றிப் பார்ப்போம்.
தேர்தல் அறிவிப்பு வந்த போது உற்சாகத்தில் இருந்த சஜித் அணி அது நடக்காததால் சேர்வடைந்து காணப்படுகின்றார்கள். இன்னும் இரண்டு வருடங்களுக்குக் குறையாமல் ரணில் பதவியில் இருப்பார் என்ற நம்பிக்கையில் அந்தக் கட்சியில் இருக்கின்ற பலர் நாம் முன்பு சொன்னவாறு பல்டிக்குத் தயாராகத்தான் இருக்கின்றார். இதற்குக் காரணம் ரணிலைப் போல தனக்கு வேண்டிய சிலரை வைத்துக் கொண்டு சஜித் தீர்மானம் எடுப்பது முக்கிய குற்றச்சாட்டாக இருக்கின்றது. அதனால்தான் அந்தக் கட்சி முக்கியஸ்தர்கள் பலர் சஜித்தை பகிரங்கமாக விமர்சிக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். இது ஒரு ஆரோக்கிய நிலை அல்ல.
அணுரகுமார திசாநாயக்க தலைமையிலான அணி இன்னும் பிடியை விடாமல் முன்னெடுத்துக் கொண்டு வந்தலும் அவரது ஆதரவாலர்கள் அதாவது புதிய வரவுகள் சலித்துப் போய் இருப்பதாகவும் தெரிகின்றது. இந்த அரசுக்குப் பாடம் கற்றுக் கொடுக்க ஒரு வாய்பை எதிர்பார்த்திருந்த இளைஞர்களுக்கு தேர்ல்தல் தள்ளிப் போனது பெருத்த ஏமாற்றமாகத்தான் இருக்கின்றது. இதற்கிடையில் அணுரகுமார இன்னும் சில நாட்களுக்குள் தென் கொரியாவில் நம்மவர்களால்; ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்ற பேரணிகளில் கலந்து கொள்ள அங்கு போக ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கின்றார். அவருக்கு அங்கு பெரும் வரவேற்புக் கிடைக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.
இப்போது சில்லறைகள் பற்றிப் பார்ப்போம். சுதந்திரக் கட்சி இன்று பல துண்டுகளாக சிதறி இருக்கின்றது. அதில் சிரிசேன தரப்பில் இருந்தவர்கள் பலர் ஆளும் தரப்புடன் இணைந்து அதிகார அரசியலில் பதவிகளை பெற்றிருக்கின்றனர். இன்னும் எஞ்சி இருப்பவர்கள் பலர் ஆளும் தரப்புடன் இணைந்து கொண்டு பதவிகளை பெற்றுக் கொள்வதற்காக பேச்சுவார்த்தைகளில் இருக்கின்றார்கள் என்ற கதையிலும் உண்மை இல்லாமல் இல்லை. சுந்திரக் கட்சி தலைமையிலான அணியில் வெல்கம அணிக்கும் அங்குள்ள இளைஞர்கள் தரப்பினருக்கமிடையே லடாய் என்று கேள்வி. வெல்கமவின் ரணில் விசுவாச கருத்துக்கள்தான் இதற்குக் காரணமாம்.
டலஸ் வாசு விமல் கம்மன் பில அணி முறுங்கை மரக் கிளை போன்ற ஒரு கூட்டணியைத்தான் அமைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த அணியிலுள்ள விமல் கம்மன் பில போன்றவர்கள் மீண்டும் மஹிந்த அணியுடன் இணைந்து கொள்ளும் பேச்சுவார்த்தைகளும் தற்போது திரை மறைவில் நடந்து கொண்டிருக்கின்றது. இவர்கள் இப்போதைக்கு அரசுடன் பகிரங்கமாக இணையாவிட்டாலும் ஒரு பொதுத் தேர்தலின் போது நிச்சயம் இவர்கள் மஹிந்த அணியுடன் இணைந்து கொள்ள அதிக வாய்ப்புக்கள் என்பது நமது நிலைப்பாடு.
சிறுபான்மை அரசியல் தலைமைகள் தான் சார்ந்த சமூகங்களின் அரசியலைச் செய்வதாக இருந்தால் அவர்கள் ஓயாத அலைகள் போல் செயல்பட வேண்டும். இவர்கள் அரசியல் வர்த்தகர்களாக இருப்பதால் தேர்தல் காலங்களில் தான் இவர்களுக்கு சமூக உணர்வு பீரிக் கொண்டு வரும். இன்று வடக்குக் கிழக்கில் நடக்கின்ற ஆக்கிரமிப்புக்களை இவர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதும் இதனால்தான்.
முஸ்லிம் தனித்துவ அணிகளின் தேர்தல் ஆசனங்களுக்காக சஜித் அணியில் ஒட்டிக் கொண்டிருக்கின்றார்கள். விரட்டினாலும் ஒருபோதும் அங்கிருந்து வெளியேற மாட்டார்கள். வெற்றி பெற்றபின் இன்று போல் ஆளும் தரப்பில் போய் நிற்பார்கள். அதற்கு கட்சி எந்த நடவடிக்கைகளையும் ஒரு போதும் எடுக்காது. மலையக கட்சிகளின் அரசியல் செயல்பாடுகளும் பெரும்பாலும் அப்படித்தான். பெரிய வித்தியாசங்கள் கிடையாது.
அனைத்துமே நாடகங்கள் ஏமாற்றுக்கள். பொது மக்கள இப்போது மிகுந்த எச்சரிக்கையுன் நடந்து கொள்ள வேண்டும். புதிய புதிய காட்சிகள் கதைகள நிச்சயமாக அரசியல்வாதிகளும் ஊடகங்களும் சந்தைக்குக் கொண்டு வருவார்கள். மக்கள் கடந்த காலங்களில் அவர்கள் நம்மை ஏமாற்றி விட்டார்கள். இது நமக்கு முன்பே தெரிந்திருந்தால் நாம் எமது தலைகளில் மண்ணை வாரிப் போட்டிருக்க மாட்டோம் என்று சொல்வதை மீண்டும் உச்சரிக்கமல் இருக்க கற்றுக் கொண்டால் ஓகே.
நன்றி: 02.04.2023 ஞாயிறு தினக்குரல்