அமெரிக்காவின் வாக்காளர்கள் தங்களது அடுத்த அதிபரைத் தேர்வு செய்வதற்காக எதிர்வரும் நவம்பர் 5-ஆம் தேதி வாக்களிக்க உள்ளனர்.
இந்தத் தேர்தல், ஆரம்பத்தில் 2020-ஆம் ஆண்டின் மறு பந்தயமாகவே கருதப்பட்டது. ஆனால் கடந்த ஜூலை மாதம் அதிபர் ஜோ பைடன் விலகி, தனது இடத்தில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுவதற்குத் தனது ஆதரவை உறுதி செய்தபிறகு எல்லாமே மாறிப்போனது.
இப்போதிருக்கும் மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், இந்தத் தேர்தல் முடிவு என்னவாக இருக்கும்? டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்பாரா? அமெரிக்கா தனது முதல் பெண் அதிபரைப் பெறப் போகிறதா?
தேர்தல் நாள் நெருங்கநெருங்க, நாங்கள் கருத்துக்கணிப்புகளை உன்னிப்பாகக் கவனிப்போம். அதிபர் வேட்பாளர்களின் நேருக்கு நேர் விவாதம், அதிபர் மாளிகைக்கான பந்தயத்தின் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதைக் கூர்ந்து கண்காணிக்க உள்ளோம்.
கருத்துக்கணிப்புகளில் முன்னிலை வகிப்பது யார்
பைடன் அதிபர் தேர்தலில் இருந்து விலக முடிவு செய்வதற்குச் சில மாதங்களுக்கு முன்பிருந்தே அவர் டொனால்ட் டிரம்பை விட பின்தங்கி இருப்பதாக கருத்துக்கணிப்புகள் காட்டின. அது ஒரு அவதானிப்பு மட்டுமே என்றாலும், கமலா ஹாரிஸின் செயல்பாடுகளும் இதைவிட அவ்வளவுச் சிறப்பாக இருந்திருக்காது என்று பல கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன.
ஆனால், கமலா ஹாரிஸ் தனது பிரசாரத்தைத் தொடங்கிய பிறகு போட்டி விறுவிறுப்பாக மாறியது. தேசியக் கருத்துக்கணிப்புகளின் சராசரியில் அவர் தனது போட்டியாளரை விடச் ’சிறிய’ முன்னிலையைப் பெற்றார். அவர் அதைத் தொடர்ந்து தக்கவைத்து வருகிறார். இரண்டு வேட்பாளர்களின் சமீபத்திய தேசியக் கருத்துகணிப்புச் சராசரிகள் கீழே காட்டப்பட்டுள்ளன. புள்ளிகள், அருகிலுள்ள முழு எண்ணுக்குத் திருத்தப்பட்டுள்ளன.
கீழே உள்ள கருத்துக்கணிப்பு டிராக்கர் விளக்கப்படத்தில், கமலா ஹாரிஸ் பந்தயத்தில் இணைந்ததிலிருந்து இந்தச் சராசரிகள் எவ்வாறு மாறியுள்ளன என்பதை ’டிரெண்ட் கோடுகள்’ காட்டுகின்றன. தனிப்பட்டக் கருத்துக்கணிப்பு முடிவுகளின் பரவலை ‘புள்ளிகள்’ காட்டுகின்றன.
சிகாகோவில் நடந்த தனது கட்சியின் நான்கு நாள் மாநாட்டின் போது ஹாரிஸின் ஆதரவு 47%-ஐ எட்டியது. மாநாட்டின் இறுதிநாளான ஆகஸ்ட் 22-ஆம் தேதி, எல்லா அமெரிக்கர்களுக்கும் வருங்காலத்திற்கான ஒரு ‘புதிய வழியை’ அளிப்பதற்ன உறுதிமொழியுடன் அவர் தனது உரையை நிறைவு செய்தார். அதன்பிறகு அவரது சராசரியில் பெரிய மாற்றம் இல்லை.
டிரம்பின் சராசரியும் 44%-இல் ஓரளவு நிலையாகவே உள்ளது. சுயேச்சையாக போட்டியிட இருந்த ராபர்ட் எஃப் கென்னடி ஆகஸ்ட் 23-ஆம் தேதி போட்டியில் இருந்து விலகி டிரம்புக்குத் தனது ஆதரவைத் தெரிவித்த போதிலும் டிரம்பின் சராசரியில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏதும் ஏற்படவில்லை.
ஒரு வேட்பாளர் அமெரிக்கா முழுவதும் எவ்வளவு பிரபலமாக இருக்கிறார் என்பதற்கு இந்தத் தேசியக் கருத்துக்கணிப்புகள் பயனுள்ள வழிகாட்டியாக இருந்தாலும், அவை தேர்தலின் முடிவைத் துல்லியமாகக் கணிக்கும் என்று சொல்லமுடியாது.
ஏனென்றால் அமெரிக்கா தனது அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கு ‘எலக்டோரல் காலேஜ்’ முறையைப் பயன்படுத்துகிறது. அதன்படி, மக்களின் வாக்குகளை அதிகம் பெறுவதைவிட அவை எந்த இடத்தில் பெறப்படுகின்றன என்பதே முக்கியம்.
அமெரிக்காவில் 50 மாகாணங்கள் உள்ளன. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை கிட்டத்தட்ட எப்போதுமே ஒரே கட்சிக்குத்தான் வாக்களிக்கின்றன. எனவே இரு வேட்பாளர்களுமே வெற்றிபெற வாய்ப்பு இருக்கும் மாகாணங்களாக ஒருசில மட்டுமே உள்ளன. தேர்தலில் வெற்றி தோல்வியை இந்த மாகாணங்கள்தான் தீர்மானிக்கும் என்பதால் இவை ’போர்க்கள மாகாணங்கள்’ (Battleground states) என்று அழைக்கப்படுகின்றன.
ஏழு மாகாணங்களில் முந்துவது யார்?
இப்போதைய நிலையை பார்த்தால், ஏழு மாகாணங்களில் கருத்துக்கணிப்பு முடிவுகள் மிகவும் நெருக்கமாக உள்ளன. எனவே உண்மையில் யார் பந்தயத்தில் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வது தற்போதைக்குக் கடினம். தேசியக் கருத்துக்கணிப்புகளின் எண்ணிக்கையைவிட மாகாண கருத்துக்கணிப்பு எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. எனவே ஆய்வு செய்ய எங்களிடம் குறைவான தரவே உள்ளது. மேலும், ஒவ்வொரு கருத்துக்கணிப்பிலும் சிறிய பிழைக்கான வாய்ப்பும் உள்ளது. அதாவது ஆதரவு எண்ணிக்கை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம்.
பல மாகாணங்களில் இரண்டு வேட்பாளர்களுக்கும் இடையே ஒன்று அல்லது அதற்கும் குறைவான சதவிகித வித்தியாசமே உள்ளது என்பதைச் சமீபத்தியக் கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன. இதில் பென்சில்வேனியா மாகாணமும் அடங்கும். இது மிக முக்கியமான ஒரு மாகாணம். ஏனென்றால் அதிக எண்ணிக்கையில் எலக்டோரல் காலேஜ் வாக்குகள் இங்கு உள்ளன. எனவே இங்கு வாக்குகள் கிடைத்தால், வெற்றியாளருக்குத் தேவையான 270 வாக்குகளை எட்டுவது மிகவும் எளிதானதாக இருக்கும்.
பென்சில்வேனியா, மிச்சிகன், மற்றும் விஸ்கான்சின் ஆகியவை முன்பு ஜனநாயகக் கட்சியின் கோட்டைகளாக இருந்தன. ஆனால் 2016-இல் குடியரசுக்கட்சிக்கு ஆதரவாக வாக்களித்து இந்த மாகாணங்கள் டிரம்ப் அதிபராவதற்கு வழி அமைத்துத் தந்தன.
2020-இல் பைடன் இந்த மாகாணங்களை தன் பக்கம் திருப்புவதில் வெற்றி பெற்றார். இந்த ஆண்டின் தேர்தலில் கமலா ஹாரிஸாலும் அதைச் செய்ய முடிந்தால் வெற்றிப்பாதையில் அவர் முன்னேறுவார். கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஆனதில் இருந்து போட்டி எப்படி மாறிவிட்டது என்பதற்கான ஒரு அறிகுறி என்னவென்றால், ஜோ பைடன் அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து வெளியேறிய நாளில் அவர் இந்த ஏழு மாகாணங்களில் டிரம்ப்பைக் காட்டிலும் சராசரியாக 5% புள்ளிகள் பின்தங்கி இருந்தார்.
கருத்துக்கணிப்பு சராசரிகள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன?
மேலே உள்ள விளக்கப் படங்களில் நாங்கள் பயன்படுத்தியுள்ள புள்ளிவிவரங்கள், அமெரிக்கச் செய்தி நெட்வொர்க் ஏபிசி நியூஸின் ஒரு பகுதியான வாக்கெடுப்பு பகுப்பாய்வு இணையதளம் 538 மூலம் உருவாக்கப்பட்ட சராசரிகள் ஆகும்.
இவற்றை உருவாக்க, அமெரிக்க தேசிய அளவிலும், முக்கிய மாகாணங்களிலும் பல்வேறு கருத்துக்கணிப்பு நிறுவனங்களால் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளின் தரவுகளை 538 இணையதளம் திரட்டுகிறது.
தரக் கட்டுப்பாட்டின் ஒரு பகுதியாக ‘538’ இணையதளம், சில அளவுகோல்களை பூர்த்திசெய்யும் நிறுவனங்களின் கருத்துக் கணிப்புகளை மட்டுமே தரவுகளுக்காக எடுத்துக்கொள்கிறது. எத்தனை பேர் கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டனர் என்பதில் வெளிப்படைத்தன்மை, எப்போது கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது, எப்படி நடத்தப்பட்டது (தொலைபேசி அழைப்பு, குறுஞ்செய்தி, ஆன்லைன் முதலியன) போன்றவை இவற்றில் அடங்கும்.
கருத்துக்கணிப்பை நம்பலாமா?
தற்போது, தேசிய மற்றும் 7 போர்க்கள மாகாணங்களில் கமலா ஹாரிஸுக்கும், டொனால்ட் டிரம்புக்கும் ஒருசில சதவிகித புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் இருப்பதாகக் கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன. போட்டி இவ்வளவு நெருக்கமாக இருக்கும் போது, வெற்றியாளரைக் கணிப்பது மிகவும் கடினம்.
2016 மற்றும் 2020 ஆகிய இரண்டு தேர்தல்களிலுமே கருத்துக்கணிப்புகள் டிரம்பின் ஆதரவைக் குறைத்து மதிப்பிட்டன. கருத்துக்கணிப்பு நிறுவனங்கள் இந்தச் சிக்கலை சரிசெய்வதற்குப் பல வழிகளில் முயற்சிக்கின்றன. இதில் கலந்துகொண்ட வாக்களிக்கும் உரிமை பெற்ற மக்களின் எண்ணத்தைத் தனது கருத்துக்கணிப்பில் சரியாகப் பிரதிபலிக்கச்செய்வது இதில் அடங்கும்.
அதை அவ்வளவு துல்லியமாகச் செய்வது மிகவும் கடினம். நவம்பர் 5-ஆம் தேதி வாக்களிக்க உண்மையில் யார் வருவார்கள் என்பது போன்ற பிற காரணிகளைப் பற்றிக் கருத்துக்கணிப்பு நடத்துவோர் ஊகம் தான் செய்தாக வேண்டும்.