நைஜர் ராணுவ புரட்சிக்கு ஆதரவாக அந்நாட்டிற்குள் ரஷ்யாவின் வாக்னர் படை சென்று உள்ளது. புடின் உத்தரவின் பெயரில் அங்கு சென்று நைஜர் நாட்டு ராணுவத்திற்கு கூடுதலாக பாதுகாப்பு வழங்கி வருகிறது வாக்னர் படை.
ஆப்ரிக்காவில் நைஜர் உள்ளிட்ட நாடுகளில் ராணுவ புரட்சி ஏற்பட்டு உள்ளது. அங்கே பிரான்ஸ், அமெரிக்காவிற்கு கைப்பாவையாக இருந்த அரசுகள் நீக்கப்பட்டு ராணுவ ஆட்சி அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ராணுவ அரசுகள் ரஷ்யாவிற்கு நேரடி ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளன.
உலகிலேயே அதிக தங்கம் உள்ளிட்ட பல்வேறு வளங்களை கொண்ட கண்டம் ஆப்ரிக்கா. இங்கே இருக்கும் ஊழல், அரசியல் காரணமாக பல்வேறு வளங்கள் இருந்தும் ஆப்ரிக்க நாடுகள் எல்லாம் வறுமையின் பிடியில் உள்ளன. அதோடு அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஆப்ரிக்காவின் வளங்களை கொள்ளையடிப்பதற்காக அங்கே பிராக்சி வார்களை நடத்தி வருகின்றன.
ஆப்ரிக்காவில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகளை எதிர்ப்பதாக கூறி அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் இங்கே உள்ள வளங்களை கொள்ளையடித்து வருகின்றன. இதற்கு எதிராக இங்கே அடிக்கடி ராணுவ புரட்சிகள் வெடிப்பது வழக்கம். உதாரணமாக ஆப்ரிக்காவில் உள்ள புர்கினா பாசோ மற்றும் மாலி ஆகிய நாடுகளில் பிரான்ஸ், அமெரிக்கா ராணுவ தளவாடங்களை அமைத்து அங்கிருந்து தங்கம் மற்றும் யுரேனியத்தை கொள்ளையடித்து வந்தது. அங்கே இருந்த அதிபர்களும் இதற்கு துணையாக இருந்தனர்.
இதையடுத்து அங்கே ராணுவ புரட்சி ஏற்பட்டு இரண்டு நாடுகளிலும் ஆட்சி கவிழ்ந்தது. அங்கே ராணுவம் வந்த பின் பிரான்ஸ், அமெரிக்கா புர்கினா பாசோ மற்றும் மாலி ஆகிய நாடுகளில் இருந்து வெளியேறியது. இங்கே ராணுவ புரட்சிகள் நடக்க ரஷ்யா மறைமுக காரணம் என்று கூறப்படுகிறது.
நைஜர் ராணுவ புரட்சி
அதன் ஒரு கட்டமாக நைஜீரியாவிற்கு மேலே இருக்கும் நைஜர் நாட்டில் தற்போது ஆட்சி கவிழ்ந்து உள்ளது. நைஜர் நாட்டில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் மொஹமட் பாஸூமின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அந்நாட்டு ராணுவ தளபதி அப்துரஹ்மானே டிசியானி புதிய அதிபராக பதவி ஏற்று உள்ளார். இதையடுத்து நைஜரில் இருந்து பிரான்ஸ், அமெரிக்க படைகள் வெளியேற்றப்பட்டு உள்ளன. இதையடுத்து நைஜர் ராணுவ புரட்சிக்கு ஆதரவாக அந்நாட்டிற்குள் ரஷ்யாவின் வாக்னர் படை சென்று உள்ளது.
புடின் உத்தரவின் பெயரில் அங்கு சென்று நைஜர் நாட்டு ராணுவத்திற்கு கூடுதலாக பாதுகாப்பு வழங்கி வருகிறது வாக்னர் படை.
யார் இந்த வாக்னர்
அதாவது இவர்கள் தனியார் ராணுவம், இவர்களில் பலர் முன்னாள் ஆர்மி, பலர் முன்னாள் தீவிரவாத கும்பல். உலகம் முழுக்க இப்படி பல எலைட் தனியார் ஆர்மி உள்ளது. ஸ்கெட்ச் போட்டு வெளி உலகிற்கே தெரியாமல் கொல்லும் திறன் கொண்டவர்கள் இவர்கள். அப்படி ஒரு கும்பல்தான் இந்த Wagner Group. 2014ல் உருவாக்கப்பட்டது.
ரஷ்ய அரசுக்கு மிகவும் நெருக்கமாக பார்க்கப்படும் பிரைவேட் ஆர்மி. ரஷ்யா அரசால் நேரடியாக செய்ய முடியாததை இந்த குழு மறைமுகமாக செய்யும். கொஞ்சம் மூச்சை பிடித்துக்கொள்ளுங்கள்.. 2017 கணக்குப்படி இந்த குழுவில் ஒன்றல்ல.. இரண்டல்ல.. மொத்தம் 6000 கொலைகாரர்கள் இருக்கிறார்கள். கேட்கவே அதிர்ச்சியாக இருக்கிறதா!
ஐரோப்பாவில் தடை செய்யப்பட்டது இந்த அமைப்பு. இன்னும் பல சின்ன சின்ன நாடுகளில் இந்த அமைப்பு தடை செய்யப்பட்டு உள்ளது. ரஷ்யா அரசு மூலம் பல illegal கொலைகளுக்கு இந்த குழுதான் அணுகப்பட்டு வருகிறது. முக்கியமாக லிபியா, சிரியா, மாலி, மொசாம்பி, சூடான், ஆப்ரிக்கா போன்ற போர்கள் நடக்க கூடிய நாடுகளில் எல்லாம் இந்த குழு ரஷ்யா மூலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தங்களுக்கு எதிராக இருக்கும் குழுக்களை போட்டுத்தாக்க, அரசியல் தலைவர்களை கொலை செய்ய இந்த Wagner Group குழு பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி – புதின் தொலைபேசியில் பேச்சு.. வாக்னர் குழு கலகம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை 2015 -2018 வரை சிரியாவில் ரஷ்யா மற்றும் அந்நாட்டு அதிபர் பாஷர் அல் ஆசாத் குழுவிற்கு உறுதுணையாக ராணுவ ஆபரேஷனை இவர்கள் செய்து வருகின்றனர்.
இவர்களின் குழுவில் இருக்கும் 6000 பேரில் எல்லோருமே ஒன்று ராணுவத்தில் இருந்தவர்கள் அல்லது உளவுப்படையில் இருந்தவர்கள். இந்த குழுவை உருவாக்கியது டிமிர்ட்டி உட்கின் என்பர். இவர் ரஷ்யாயாவின் ராணுவத்தில் இருந்தவர். அதன்பின் அந்நாட்டு உளவுப்படையில் இருந்தவர்.
அமெரிக்காவும் இது போன்ற தனியார் ராணுவத்தை பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக அமெரிக்கா 2007 ஈராக்கில் பிளாக்வாட்டர் என்ற தனியார் ராணுவத்தை பயன்படுத்தியது. ஆனால் இவர்கள் ஒப்பந்தத்தை மீறி அங்கு பொதுமக்களையே சுட்டுக்கொண்டனர். அதேபோல் Wagner Group அமைப்பும் பல இடங்களில் பொது மக்களை கொன்றுள்ளது.
ஐரோப்பாவில் இவர்கள் நடத்திய ஆபரேஷன் காரணமாக பலர் கொலை செய்யப்பட்டனர். இவர்களின் கிளை அமைப்பு மூன்றும் இங்கே தொடங்கப்பட்டது. தற்போது இந்த அமைப்பை பிரிகோஜின் கட்டுப்படுத்தி வருகிறார்.
இவர் புடினுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். அவரின் வீட்டில் சமையல்காரராக இருந்து அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அவரின் நம்பிக்கையை பெற்று கடைசியில் இந்த தனியார் ராணுவத்தை நிர்வகிக்கும் பொறுப்பை புடின் வழியாக பெற்றார். இந்த அமைப்புதான் தற்போது நைஜர் ராணுவ புரட்சிக்கு ஆதரவாக அந்நாட்டிற்குள் சென்று நைஜர் நாட்டு ராணுவத்திற்கு கூடுதலாக பாதுகாப்பு வழங்கி வருகிறது.