அமெரிக்காவில் 40 சடலங்களுடன் ட்ரக் மீட்பு: 

அமெரிக்காவில் 40 சடலங்களுடன் ட்ரக் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் சான் அன்டோனியோ நகரில் ஒரு ரயில்வே ஸ்டேஷன் அருகில் இந்த ட்ரக் கேட்பாரற்று நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. போலீஸார் அதனை திறந்தபோது உள்ளே மூச்சுத் திணறி உயிரிழந்த நிலையில் 40 பேர் சடலமாக கிடந்தனர்.

அவர்கள் அனைவரும் மெக்சிகோ நாட்டில் இருந்து அகதிகளாக அமெரிக்காவில் குடியேற முயன்றவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இது குறித்து மெக்சிகோ வெளியுறவு அமைச்சர் மார்செலோ எப்ரார்ட் கூறுகையில், “அமெரிக்காவின் டெக்சாஸில் ட்ரக்கில் சென்ற அகதிகள் மூச்சுத்திணறி உயிரிழந்ததை அறிந்தேன். மிகுந்த மனவேதனை அடைகிறேன். ஆனாலும் அவர்கள் மெக்சிகோவை சேர்ந்தவர்களா என்பது இன்னும் உறுதியாகவில்லை என்றார்.

இந்த சம்பவம் குறித்து சான் ஆண்டோனியோ போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு சமீப காலமாக குடிபெயர முயற்சித்தவர்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றனர். அதுவும் எல்லையைக் கடக்க டிரக்கில் வருபவர்கள் உயிரிழப்பது அதிகமாக உள்ளது.

மெக்சிகோவில் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுகின்றனர். இதைத் தடுக்க சுமார் 650 மைல் தொலைவுக்கு பல்வேறு வகைகளில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சட்டவிரோத குடியேற்றம் தொடர்கதையாக உள்ளது.

Previous Story

நுபுர் சர்மாவின் ஆதரவாளர் படுகொலை! இருவர் கைது!

Next Story

பிரபாகரன் ஆயுதமேந்த காரணம்-அநுரகுமார