ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அதன் எதிரொலி வளைகுடா நாடுகள் முழுவதும் பரவும் என்று தான் முன்னரே அமெரிக்காவுக்கு எச்சரித்திருந்ததாக கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் கூறியிருக்கிறார்.
கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சரும், ‘கத்தார் எனர்ஜி’ நிறுவனத்தின் சிஇஓ-வுமான சாத் அல்-காபி, ஈரானுடனான போரால் கத்தாரின் எரிசக்தி கட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து விவரித்துள்ளார்.
எச்சரிக்கை கொடுத்த கத்தார்: ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், “எங்களுடன் கூட்டு வைத்திருக்கும் எண்ணெய் மற்றும் எரிவாயு நிர்வாகிகளுக்கும், அமெரிக்க எரிசக்திச் செயலருக்கும் நான் தொடர்ந்து எச்சரித்துக் கொண்டிருந்தேன்.
ஈரான் போர் எங்களுக்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்று நான் எச்சரித்தேன். அவர்களுக்கு இந்த அச்சுறுத்தல் முன்கூட்டியே தெரிந்திருந்தது. எண்ணெய் மற்றும் எரிவாயு கட்டமைப்புகள் மீது, தாக்குதல் நடத்தாமல் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நான் கிட்டத்தட்ட தினமும் அவர்களுக்கு நினைவூட்டினேன்” என்று கூறியிருக்கிறார்.
ராஸ் லப்பான் சுத்திகரிப்பு மீது அட்டாக்:ஆனால், இந்த எச்சரிக்கையை மீறிதான் ஈரானின் மிக முக்கியமான இயற்கை எரிவாயு வயலான, தெற்கு பார்ஸ் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் இணைந்து தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடி கொடுக்கம் விதமாக, ஈரானும் கத்தாரின் ராஸ் லஃப்பான் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கியிருக்கிறது.
அசால்டாக பதில் சொன்ன அமெரிக்கா: இந்த விவகாரம் குறித்து அமெரிக்கா, அசால்டாக பதில் கொடுத்திருக்கிறது. வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டெய்லர் ரோஜர்ஸ், இது குறித்து கூறுகையில், “ஈரான் போர் காரணமாக, எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் குறுகிய கால இடையூறுகள் இருக்கும் என்ற நிதர்சனத்தை அதிபர் டிரம்ப் மற்றும் அவரது ஒட்டுமொத்த எரிசக்தி குழுவும் அறியாதவர்கள் அல்ல.
எதிர்பார்க்கப்பட்ட தற்காலிக இடையூறுகளுக்கு வளைகுடா நாடுகள் முன்னெச்சரிக்கையாக திட்டத்தை வைத்திருந்தன. ஈரான் கொடூர ‘அட்டாக்’.. உலகிலேயே மிகப்பெரிய கத்தார் எல்என்ஜி கேஸ் ஆலையில் ஏவுகணை தாக்குதல்
மிகப்பெரிய பாதிப்பு: அமெரிக்க-இஸ்ரேல் இடையிலான ஈரானுடனான போர் தொடங்கி மூன்று வாரங்கள் ஆன நிலையில், ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் எண்ணெய் கப்பல்கள்,
சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் பிற முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்புகளை சேதப்படுத்தியுள்ளன. இதுவரை ஏற்பட்ட மிகப்பெரிய தாக்கம் கத்தர் எனர்ஜியின் ராஸ் லஃப்பான் மீது பதிவாகியுள்ளது.
5 ஆண்டுகள் வரை பாதிப்பு உலகின் மிகப்பெரிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) வளாகமான ராஸ் லஃப்பானில் ஏற்பட்ட சேதம் குறித்து அல்-காபி வியாழக்கிழமை ராய்ட்டர்ஸிடம் பேசினார்.
இந்தக் கட்டமைப்புகளை உருவாக்க 26 பில்லியன் டாலர் செலவானது என்றும், ஐரோப்பா மற்றும் ஆசியாவிற்கான LNG விநியோகத்தில் ஐந்து ஆண்டுகள் வரை பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
உலக நாடுகளுக்கு பாதிப்பு: கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மட்டுமல்லாமல், ஜெட் எரிபொருள் மற்றும் சமையல் LPG போன்ற விநியோகமும் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த போர் காரணமாக, ராஸ் லஃப்பானில் விரிவாக்கப் பணிகள் தாமதமாகும். இது 2027 வரை பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கப்படும் எரிவாயு விநியோகத்தைப் பாதிக்கும்.
கடல் பகுதிகளிலிருந்து அனைவரையும் வெளியேற்றுவது எளிதான காரியம் அல்ல. போர் காரணமாக, 24 மணி நேரத்திற்குள் 10,000 பேர் வெளியேற்றப்பட்டனர். எண்ணெய் உற்பத்தி உட்பட அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.




