நஜீப் பின் கபூர்
(நன்றி:09.11.2025 ஞாயிறு தினக்குரல்)
இந்த வாரம் இரு தலைப்புக்கள் மக்கள் மத்தியில் பேசுபொருளாக எடுத்துக்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலாவது கடந்த ஏழாம் திகதி நிதி அமைச்சர் என்றவகையில் அணுரகுமார திசாநாயக்க சமர்ப்பித்த வரவு செலவுத்திட்டம். சுதந்திர இலங்கையில் இது 80வது வரவு செலவுத்திட்டம்.

பொதுவாக வரவு செலவுத்திட்டங்களை சமர்ப்பிக்கின்ற தரப்பு குறிப்பாக ஆளும் தரப்பு அதன் ஆரோக்கியம் பற்றிக்கூவிக் கொண்டிருக்கும். ஏறக்குறைய புகழ்பாடுவதுதான் நமது நாட்டில் வழக்கம். அதே போன்று என்னதான் நல்ல வரவு செலவுத்திட்டமாக இருந்தாலும் அதில் குறை தேடுவது அல்லது முட்டையில் மயிர் பிடுங்குகின்ற வேலை பார்ப்பதுதான் எதிர்க்கட்சிகளின் தொழிலாக இருக்கும். அது பற்றி நமது பார்வையைச் செலுத்துவோம்.
நமது இரண்டாவது தலைப்பு வருகின்ற இருபத்தி ஓரம் திகதி நடைபெற இருக்கின்ற என்பிபி. அரசுக்கு எதிரான பொதுக் கூட்டணி என்ற பெயரில் நுகேகொடவில் நடக்க இருக்கின்ற பேரணி. இந்தப் பேரணி பொது எதிரணி என்று தன்னை அழைத்துக் கொண்டாலும் அது மொட்டுக் கட்சியை மையப்படுத்திய ஒரு கூட்டணியாகத்தான் இருக்கின்றது.
ஐக்கிய தேசியக் கட்சிதான் அவர்களின் பிரதான கூட்டாளியாக நமக்குத் தெரிகின்றது. பிரதான எதிரணியான சஜித் தலைமையிலான அணியினர் ஒன்றுக் கொன்று முரணான கதைகள் இது பற்றி சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த பேரணி பற்றி பல சுவையான தகவல்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன அதுபற்றியும் பார்ப்போம்.
கடந்த 2025ம் ஆண்டு அணுர தலைமையிலான அரசு ஒரு வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்திருந்தது. அது ஒரு இடைக்கால வரவு செலவுத்திட்டமாகத்தான் இருந்தது. ஆனால் 2026-இந்த வரவு செலவுத்திட்டத்தை தயாரிக்க அவர்களுக்குப் போதியளவு காலமும் நேரமும் இருந்தது.
கடந்த முறை தயாரிக்கப்பட்ட வரவு செலவுதிட்டம் ஒரு இடைக்கால வரவு செலவுத்திட்டமாக இருந்தாலும் அதனை ஒரு வரம்புக்குள் வைத்துக் கொண்டதில் இவர்கள் சாதித்திருக்கின்றார்கள் என்றுதான் தெரிகின்றது. ஐஎம்எப்.பையும் சமாளித்து குடிமக்களையும் நெருக்கடியில் தள்ளாது ஒரு கயிற்றில் நடக்கின்ற ஒன்றாகத்தான் அது இருந்தது. குறிப்பாக அரச செலவுகளில் ஒரு தூய்மையும் புனிதமும் அதில் தெரிந்தது என்பதனை வஞ்சகமின்றி சொல்ல வேண்டும்.
ஜனாதிபதி அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற அனைவரும் தமது செலவில் கணிசமான கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகின்றனர். இந்த ஒரு வருடத்தில் குறிப்பாக ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் நிதிமோசடிகளில் சிக்கிக் கொள்ளவில்லை. அப்படி எவராவது ஏதேனும் தப்புப் பண்ணி இருந்தால் காட்டுங்கள்- பார்க்கலாம் என்று அரசதரப்பினர் சவால் விடுக்கின்றனர்.

கடந்த அரசாங்கங்களுடன் ஒப்பு நோக்கின்ற போது இது பாராட்டத்தக்கது. குடிமக்களும் இவர்கள் தப்புப் பண்ணியதாக எங்கும் முறைப்பாடுகள் தொடுத்ததாக நாம் அறியோம். அந்தவகையில் என்பிபி.க்காரர்கள் கள்வர்களோ கொள்ளையர்களோ மோசடிக்காரர்களே அல்ல என்று சான்றிதழ் கொடுக்கலாம்.
நாம் இந்தக் கட்டுரையைத் தயாரித்துக் கொண்டிருக்கின்ற நேரம் என்பிபி. பேலியகொட நகரசபை உறுப்பினர் ஒருவரின் கணவரான பாடசாலை அதிபர் ஒருவர் போதைப் பொருட்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதாகி இருக்கின்றார். இது பற்றி நாம் பிரிதொரு இடத்தில் பேசி இருக்கின்றோம்.
என்பிபி. வாக்குறுதிகள் கொடுத்தது போல அவர்கள் அந்த இலக்குகளை அடைவதில் அவர்களுக்கு இன்னும் இரண்டொரு வருடங்களைக் கொடுக்க வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகளுக்கு மற்றுக்கருத்துக்கள் இருந்தாலும் நடுநிலையாக சிந்திப்பவர்கள் அந்தவாய்ப்பை வழங்குவதில் இணக்கப்பாட்டில்தான் இன்னும் இருந்து வருகின்றார்கள். கடந்த அரசாங்க காலத்தில் இடைநடுவில் கைவிட்ட வேலைத்திட்டங்களைப் பூரணப்படுத்துவதில் என்பிபி. அரசு கூடிய அவதானம் செலுத்தி வந்திருக்கின்றது.
அரச அதிகாரிகள் ஊழல்கள் மோசடிக்கு முக்கிய காரணம் சம்பளப்பற்றக்குறை என்று அரசு இனம் கண்டு அதனை அதிகரிப்பதில் இந்த வருடமும் கவனம் செலுத்தி வந்திருக்கின்றது. அதே போன்று ஓய்வு பெற்றவர்களின் கொடுப்பனவுகளில் நெடுங்காலமாக இருந்து வந்த முரண்பாடுகளை நீக்குவதிலும் அரசு கவனம் செலுத்தி வந்திருக்கின்றது.
மேலும் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா கொடுப்பனவை வழங்குவதிலும் அரசு தீர்க்கமான முடிவுகளை எடுத்திருக்கின்றது. ரணில் காலத்தில் ஐந்து சதம் கூட சம்பள அதிகரிப்புச் செய்ய முடியாது என்று விற்பண்ணர் பந்துல குணவர்தன சொல்லி இருந்தது நமக்கு மீண்டும்; மீண்டும் நினைவுக்கு வந்து கொண்டிருக்கின்றது.

2026 வரவு செலவுத்திட்டத்திலும் அரசு ஐஎம்எப்.பையும் பகைத்துக் கொள்ளாது குடிமக்களுக்கும் நெருக்கடியைக் கொடுக்காத ஒரு பயணத்தை முன்னெடுப்பதில் சாதிக்கும் என்று தெரிகின்றது. பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதில் அரசு காட்டுகின்ற ஆர்வம் தூய்மை என்பவைகள் தொடர்பாக சர்வதேச நிதி நிறுவனங்களின் நற்சான்றிதழ் இந்த அணுர அரசுக்குத் தொடர்ந்து கிடைத்து வருகின்றது.
எல்லாவற்றையும்விட இந்தியாவையாவுடன் நல்லுறவை முன்னெடுத்து சீனாவுடனும் நெருக்க உறவை வைத்திருப்பது என்பது சர்வதேச பிராந்திய அரசியலில் ஒரு சிக்கலான பணி. அதில் கூட அணுர அரசு வெற்றி கொண்டு வருகின்றது என்பதுதான் எமது கருத்து. அரச வரவு செலவுத்திட்டத்தில் இந்திய மற்றும் சீனாவின் ஆதிக்கமும் செல்வாக்கும் தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்தி வருவது தெரிந்ததே. கடந்த ஒரு வருடமாக டொலரை முன்னூறு ரூபா என்ற எல்லைக்கோட்டுக்குள் வைத்திருந்ததும் அணுர அரசின் முக்கியமான ஒரு நடவடிக்கை என்று சொல்ல வேண்டும்.
1.இந்த வரவு செலவுத்;திட்டத்தில் மக்களுக்கு மேலதி வரிகள் ஏதும் இருக்கப்போவதில்லை.
2.ஒரு 75000 பேருக்கு புதிய வேலைவாய்ப்புக்கிடைக்க இருக்கின்றது.
3.மாகாணசபைத் தேர்தலுக்கு நிதி ஒதுக்கி இருப்பதாக சமன்சிரி ரத்னாயக்க உறுதி செய்திருந்தார்.
4.சமூக நலத்திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
5.துண்டு விழும் தொகை கனிசமாக குறைந்த ஒரு வரவு செலவுத்திட்டமாகவும் இது அமைந்துள்ளது.

இப்போது 21ம் திகதி நடக்க இருக்கின்ற அரசுக்கு எதிரான பேரணிபற்றி சற்றுப் பார்ப்போம். ரணில் கைதைத் தொடர்ந்து தமக்குள் நல்லுறவை வளர்த்துக் கொண்ட ஒரு தரப்பினர் சந்தித்த இடதில்தான் அரசுக்கு எதிரான பேரணி நடாத்துவது பற்றி ஆலோசனையை உதய கம்மன்பில முன்வைத்திருக்கின்றார்.
அதற்கு இப்படி ஒரு தலைப்பைக் கொடுக்க வேண்டும் என்று ரணில் சிபார்சு செய்திருக்கின்றார். அணுரவின் ஹிட்லர் போக்குக்கு எதிரான பேரணி என வைக்குமாறு அவர் அங்கு கேட்டிருக்கின்றார். மேலும் இது மாபெரும் பேரணி என்றும் சொல்லப்பட்டது. அந்த நாட்களில் சஜித் அணியில் இருந்த சிலரும் அதில் பங்கு கொண்டிருந்த தெம்பில்தான் மாnரும் பேரணி என்ற நாமம் சூட்டப்பட்டிருக்க வேண்டும்.
இந்தக் கூட்டத்தில் ரணிலும் வந்து மஹிந்தவும் வந்தால் அங்கு சஜித் காணாமல் போய்விட இடமிருந்தது. அதனால்தான் சஜித் கூட்டத்துக்கு வருவதைத் தவிர்க்கின்றார் என்ற ஒரு கருத்தும் இருக்கின்றது. இதனால் சஜித்தை கூட்டத்தில் ஒரு ஹீரோவாக்கி சனத்தை கூட்டுக்கின்ற ஒரு ஏற்பாடாகத்தான் முன்னாள் ஜனாதிபதிகள் எவரும் இதில் பங்கு கொள்ள மாட்டார்கள் என்ற இசு தற்போது பெரிய விளம்பரமாகக் காட்டப்படுகின்றது.

அப்படிச் சொல்லி சஜித்தை மேடையேற்றும் திட்டமும் வெற்றி பெற்றதாகத் தெரியவில்லை. எனவே சஜித் இந்தக் பேரணியைப் பகிஸ்கரித்தது யதார்த்தமானது இராஜதந்திரமானது என்பது நமது கருத்து. இதற்கு முன்னரும் இதனை நாம் சொல்லி இருந்தோம்.
மொட்டுக் கட்சி செயலாளர் சாகர காரியவாசம் கூட்டத்துக்கு வராதாவர்கள் அணுராவுடன் ஏதோ இரகசிய உறவில் இருக்கின்றார்கள் அல்லது கொடுக்கல்வாங்களில் இருக்கின்றார்கள் என்று மறைமுகமாக சஜித்தைக் குற்றம்சாட்டி இருக்கின்றார்.

ஜனாதிபதித்தேர்தலில் ரணிலுடன் அணுராவுக்கு இப்படி ஒரு உறவு இருப்பது பற்றி சஜித்தும் பேசி இருந்தார். அதே நேரம் சஜித் இது கொள்ளையர்கள் கூட்டணி அவர்களின் சின்னம் கைவிலங்கு என்று கிண்டலடித்து இந்தப் பேரணி ஏற்பாட்டாளர்களை விமர்சித்திருந்தார்.
அதே நேரம் இந்தக் பேரணிiயில் தமது தரப்பிலுள்ளவர்கள் சிலர் பங்கு பற்றுவர்கள் கூட்டத்துக்கு எமது ஆதரவு இருக்கின்றது என்று சஜித் தரப்பில் சிலர் பேசி வருகின்றார்கள். எனவே அங்கு சஜித் நிலைப்பாட்டை ஆதரிப்போரும் எதிர்ப்போர் என்று இரு குழுக்கள் இருக்கின்றன. பொது எதிரணிக் கூட்டத்துக்குப் போன மனோ காணேசன் அணுர எனது நல்ல நண்பர் என்று சொல்லி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
சஜித் அணியில் இருக்கும் மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகளுக்கு குறிப்பாக ஹக்கீம் ரிசாட் போன்றவர்களுக்கு இந்த அரசு விரைவில் கவிழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கின்றது. இந்த அரசு இருக்கும் வரை நமக்கு அமைச்சுப் பாதவிகளுக்கு வாய்ப்புக்கள் இல்லை என்பது அவர்களுக்குத் தெரியும்.
அதனால் அவர்கள் அரச வீழ்ச்சியை எதிர்பார்க்கின்றார்கள். ஆனால் அது சாத்தியமில்லாத ஒரு எதிர்பார்ப்பு என்பதும் அவர்களுக்குத் தெரியும். எனவேதான் துவக்கத்தில் பொது எதிரணியில் ஆர்வம்காட்டிய அவர்கள் இப்போது ஸ்கெப்பாகி நிற்க்கின்றார்கள்.
அண்மையில் ஜீ.எல்.பீரிஸ் வீட்டில் நடந்த ஒரு கூட்டத்தில் பொதுக் கூட்டணி பற்றி மீண்டும் பேசி இருக்கின்றாhகள். அங்கு பலர் அரசுக்கு எதிரான பேரணியை அல்லது கூட்டத்தை நடத்துவற்கு இது பொறுத்தமான நேரம் அல்ல என்று நேரடியாக பலர் கூறி இருக்கின்றார்கள். இன்னும் சிலர் அங்கு போவதா இல்லையா என்ற குழப்பத்தில் இருக்கின்றார்கள்.

விமல் வீரவன்ச சம்பிக்க ரணவக்க மற்றும் திலித் போன்றவர்கள் கூட்டத்தில் பங்குகொள்வதில்லை என்பது உறுதி. எனவே ஒட்டுமொத்தமாக சனத்தை கூட்ட வேண்டிய கட்டாயம் நாமல் தலையில்தான். ஜேவிபி. தமக்கு வெறும் மூன்று நான்கு சதவீதம் ஆதரவு இருந்த நேரத்தில் காலிமுகத்திடலை நிறைத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அப்படி ஒரு சாவல்தான் இன்று மொட்டுக்கட்சிக்கு ஏற்பட்டிருக்கின்றது. கூட்டத்துக்கு வர ரணில் கட்சியில் என்ன ஆட்களா இருக்கின்றார்கள். இந்த பொதுக் கூட்டமைப்பில் இருபத்தி ஐந்து முப்பது கட்சிகள் இருந்தாலும் அவை கடிதத்தலைப்பை மட்டும் வைத்திருக்கும் கட்சிகள் அல்லது திரிவில் கட்சிகள்.
கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மொட்டுக் கட்சிக்கு ஒரு ஏழு சதவீத வாக்குகள் கிடைத்தது. அதனால் அந்தக் கட்சியில் உள்ளவர்கள் மனம் வைத்தால் ஒரு பத்தாயிரம் பேரையாவது கூட்ட முடியும். அதற்கு நிறையவே காசை அள்ளி வீச வேண்டி வரும். இப்போது அவர்களுக்கு காசு வீச ஆட்கள் இருக்கின்றார்களா என்பது நமக்குத் தெரியாது.

ஆனால் இந்தக் கூட்டத்தில் பேச அவர்களுக்குக் கவர்ச்சிகரமான ஆட்களும் கிடையாது. இருக்கின்ற ஒரு ஆள் சாமர சம்பத் மட்டும்தான். அந்தளவுக்கு அங்கு வங்குரோத்து நிலை. எடுத்த எடுப்பிலே பார்க்கின்ற போது சஜித் சொல்வது போல இந்த பேரணி விவகாரத்தில் ஆர்வத்துடன் இருக்கின்றவர்கள் அனைவரும் போல ஏதாவது குற்றச்சாட்டுக்களுக்கு ஆளானவர்கள் அல்லது சிறைக்குப்போக நாட்களை எண்ணிக் கொண்டிருப்பவர்கள்.
இதிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ளும் அவசரமும் தேவையும் அவர்களுக்குதான் இருக்கின்றது. எனவே இது பொதுமக்களின் தேவைகளுக்காகவோ அவசியத்துக்காகவோ நடக்கின்ற ஒரு கூட்டமும் கிடையாது என்பதுதான் பொதுவான கருத்து. இதனை ஐக்கிய மக்கள் சக்தித்தலைவர் சஜித் நன்கு உணர்திருக்கின்றார்.
அமைச்சுக்களை எதிர்பார்க்கின்ற சிறுபான்மைத் தலைவர்களைப் போல இந்த அரசை வேகமாக வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற பலர் சஜித் அணியில் இருக்கின்றார்கள். சஜித் குறிப்பிடுவது போல இந்த அரசுக்கு எதிராக மக்களை ஒன்று கூட்ட இது பொறுத்தமான நேரம் அல்ல என்பது முற்றிலும் நியாயமானது.
இதனை எதிரணியில் இருப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாம் முன்பு சொன்ன அவசரத்தில் இருப்பவர்களும் பதவிகளை விரைவாக எதிர்பார்க்கின்றவர்களும் இது விடயத்தில் நம்முடனும் சஜித்துடனும் இணங்க மாட்டார்கள் என்பது நமக்குத்தெரியும். மறுபுறத்தில் இந்தக்கூட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் ஒன்று கூடுவதை சஜித் விரும்பவும் மாட்டார். அதற்கு என்ன காரணம் என்பது அரசியல் அரிச்சுவடி அறிந்தவர்களுக்குப் புரியும்.
நாமல் தரப்புக்கு வருகின்ற 21ம் திகதி ஒரு சோதணைமிக்க நாளாக அமையும். அமைப்பாளர்களும் தொண்டர்களும் தியாகம் பண்ணமுடியுமாக இருந்தால் சாதிக்கவும் முடியும். எப்படி இருந்தாலும் தெற்கைப் பொறுத்தவரை இன்று எதிரணியில் இரு முகாம்கள் இருக்கின்றன. நம்பர் வன் சஜித். நம்பர் டூ நாமல். அவற்றின் ஆதிக்கமும் முரண்பாடுகளும் இந்தப் பேரணியிலும் தெளிவாகத் தெரிகின்றது.





