வங்கதேசத்தில் ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா திங்கட்கிழமை (ஆகஸ்ட் 5) மாலை டெல்லி வந்தடைந்தார்.வங்கதேசத்தில் மாணவர்கள் முன்னெடுத்த போராட்டம் பெரிதாகி, லட்சக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்தது மட்டுமல்லாமல், தனது சகோதரியுடன் நாட்டை விட்டு வெளியேறினார்.
ஷேக் ஹசீனா வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு ஹெலிகாப்டர் மூலம் வருவதை அறிந்த இந்திய விமானப்படை, பலத்த பாதுகாப்புடன் அவரை டெல்லிக்கு அழைத்து வந்ததாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் நடக்கும் அனைத்து சம்பவங்களையும் இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.திங்கட்கிழமை (ஆகஸ்ட் 5) நிலைமை மோசமடைந்த போது இந்தியா `அலர்ட்’ செய்யப்பட்டது. எந்த ஒரு விளைவையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக இருப்பதாக ஏஎன்ஐ இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவின் வான்வழி கண்காணிப்பு
இந்திய விமானப்படையின் ரேடார்கள் வங்கதேசத்தின் வான்வெளியை அவ்வப்போது கண்காணித்து வருவதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
“இந்திய விமானப்படை திங்கள்கிழமை பிற்பகல் 3 மணியளவில், தாழ்வாகப் பறக்கும் ஹெலிகாப்டர் ஒன்று இந்தியாவை நோக்கி வருவதைக் கண்டது. அந்த விமானத்தில் வருவது யார் என்ற தகவல் விமானப்படை வீரர்களிடம் இருந்ததால் விமானம் இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டது” என்று ஏஎன்ஐ முகமை கூறியுள்ளது.
ரஃபேல் போர் விமானங்களின் பாதுகாப்புடன் வந்திறங்கிய ஹசீனா
ஏஎன்ஐ செய்தி அறிக்கையின்படி, வங்கதேசத்தில் இருந்து வந்த விமானம் மேற்கு வங்காளத்தில் உள்ள ஹஷிமாரா விமானப்படை தளத்தில் இருந்து இரண்டு ரஃபேல் போர் விமானங்கள் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டது.
பிகார் மற்றும் ஜார்கண்ட் வழியாக அந்த விமானம் பயணித்த போது அதன் பாதுகாப்புக்காக ரஃபேல் போர் விமானங்கள் உடன் பறந்து சென்றன.
விமானத்தின் இயக்கம் பாதுகாப்பு ஏஜென்சிகளால் கீழே இருந்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. அவ்வப்போது இந்திய பாதுகாப்பு படையின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்திய விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சௌத்ரி மற்றும் ராணுவ தளபதி உபேந்திர திவேதி ஆகியோர் நிலைமையை உன்னிப்பாக ஆய்வு செய்தனர்.
பின்னர், புலனாய்வு அமைப்பின் தலைவர் ஜெனரல் திவேதி, ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஜான்சன் பிலிப் மேத்யூ ஆகியோர் உயர்மட்டக் கூட்டத்தை ஏற்பாடு செய்து விவாதித்தனர்.
ஷேக் ஹசீனா இலக்கு என்ன?
வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கு செல்ல திட்டமிட்டார், அவரின் இலக்கு என்ன என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
டெல்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகம் பிபிசி பெங்கால் செய்தியாளர் சுப்ஜோதி கோஷிடம், “ஹசீனா இந்தியா வந்தார், ஆனால் அவர் இங்கே நீண்ட நேரம் இருக்க மாட்டார்” என்று கூறியது.
ஷேக் ஹசீனா மற்றும் அவரது சகோதரி ஷேக் ரெஹானா இருவரும் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு இந்தியாவிற்குள் (அல்லது இந்திய வான்வெளியில்) நுழைந்ததாக இந்திய அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.
சர்வதேச விமான கண்காணிப்பு இணையதளமான ஃப்ளைட் ரேடார் (FlightRadar), CJ-130 விமானம், இந்தியாவின் தன்பாத் நகர் (ஜார்கண்ட்) மீது பறப்பதைக் காட்டியது, மாலை 3:30 மணியளவில் வட இந்தியாவை நோக்கிச் சென்றது.
ஆனால் விமானம் எங்கிருந்து புறப்பட்டது? எங்கு செல்கிறது என்பது குறித்த எந்த தகவலும் இல்லை. அது திட்டமிடப்படாத விமானப் பயணம் என்பது புரிந்தது
ஷேக் ஹசீனாவை சந்திக்கும் அஜித் தோவல்
CJ-130 விமானம் டெல்லி அருகே உள்ள ஹிந்தன் ராணுவ விமானப்படை தளத்தில் மாலை 5:45 மணிக்கு தரையிறங்கியதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அவரை சந்தித்ததாக இந்திய பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
வங்கதேசத்தின் தற்போதைய நிலைமை மற்றும் அவரது எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஒரு மணி நேரம் ஹசீனாவுடன் அவர் கலந்துரையாடினார்.
பின்னர், பிரதமர் மோதி தலைமையிலான பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவிடம் நிலைமையை விளக்கினார்.
இருப்பினும், ஷேக் ஹசீனாவின் இறுதி இலக்கு டெல்லி இல்லை என்றும், அது ஒரு இடைநிறுத்தம் மட்டுமே என்றும் டெல்லியில் உள்ள ராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன. அவர் பிரிட்டனுக்கு செல்ல வாய்ப்பிருப்பதாக அவர்கள் கூறினர்.
இந்தியாவில் அவர் இன்னும் எவ்வளவு நேரம் தங்கியிருப்பார் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.
வங்கதேசத்தில் இருந்து வந்த ஹெலிகாப்டர், ஷேக் ஹசீனா இல்லாமல் திரும்பிச் சென்றதாகவும், அதில் ஏழு வங்கதேச ராணுவ அதிகாரிகள் மட்டுமே இருந்தார்கள் என்றும் ஏஎன்ஐ செய்தி முகமை கூறியுள்ளது.
ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் அளித்தது ஏன்?
வங்கதேசத்தில் சிறுபான்மை சமூகத்தினரின் வணிக நிறுவனங்கள் மற்றும் கோயில்கள் குறி வைக்கப்படுவது மிகப்பெரிய கவலையாக உள்ளது என இந்திய வெளியுறத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
வங்கதேச பிரச்னை குறித்து மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்.
”வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரின் நிலை குறித்து கவனத்தில் கொண்டுள்ளோம். எல்லையில் இந்தியா கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் 19 ஆயிரம் இந்தியர்கள் வசித்தனர். அவர்களில் ஜூலை மாதமே 10 ஆயிரம் இந்தியர்கள் அங்கிருந்து வந்துவிட்டனர். அங்கிருந்த பெரும்பாலான மாணவர்கள் இந்தியா திரும்பிவிட்டனர்” என்றார் ஜெய்சங்கர்
”ஆகஸ்ட் 5-ம் தேதி ஷேக் ஹசீனா ராஜினாமா செய்தார். அவர் பயணம் செய்த விமானம் இந்தியாவிற்கு வர மிகக் குறுகிய அவகாசத்தில் அனுமதி கோரப்பட்டது. நேற்று மாலை அவர் இந்தியா வந்தார்” எனவும் ஜெய்சங்கர் கூறினார்.
இதற்கு முன்னதாக அனைத்துக் கட்சி கூட்டத்தில், வங்கதேச விவகாரம் குறித்து ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்.