ஷியா மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு..

 தொழுகைக்கு போன 15 பேர் பலி..

பதற்றத்தில் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஷியா இஸ்லாமியர்களின் மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகை நடந்தது. அப்போது திடீரென்று மசூதி வெடித்து சிதறியது. இதில் 15 பேர் பலியான நிலையில் 80 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கை உயரும் என்ற அச்சம் எழுந்துள்ளது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஷெஹ்சாத் டவுன் பகுதியில் தெர்லாய் இமாம்பர்கா என்ற மசூதி அமைந்துள்ளது.

இது ஷியா இஸ்லாமியர்களுக்கான மசூதியாகும். இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏராளமான இஸ்லாமியர்கள் மதிய வேளையில் தொழுகையில் ஈடுபட்டனர். அப்போது திடீரென்று மசூதி வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த சத்தம் கேட்டதும் அங்கிருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர்.

ஏராளமானவர்கள் காயமடைந்து துடிதுடித்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் விரைந்து செயல்பட்டு ஒவ்வொருவராக மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். போலீசார், பயங்கரவாத ஒழிப்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியை துரிதப்படுத்தினர். இருப்பினும் 15 பேர் இறந்தனர். 80 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (Pakistan Institute of Medical Sciences) அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இதில் சிலரின் நிலைமை மோசமாக உள்ளது. இதனால் உயிர் பலி இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதல் எப்படி நடந்தது? என்பது இன்னும் தெரியவில்லை .வெடிகுண்டு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதா? அல்லது தற்கொலை படை தாக்குதலா? என்பது பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாகிஸ்தானில் தற்போது குழப்பமான சூழல் ஏற்பட்டு வருகிறது. பாகிஸ்தான் அரசு, ராணுவத்துக்கு எதிராக பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.குறிப்பாக பாகிஸ்தான் பலுசிஸ்தான் கொந்தளிப்பான சூழலில் உள்ளது. பலுசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பினருக்கும், பாகிஸ்தான் ராணுவத்துக்கும் தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது.

பெண்களே தற்கொலை படை தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் இந்த சம்பவத்தின் பின்னணியில் பலுசிஸ்தான் தனி நாடு கோரும் ஆதரவு அமைப்பினர் இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. அதுமட்டுமின்றி பாகிஸ்தான் என்பது சன்னி இஸ்லாமியர்களின் நாடு. இங்கு வசிக்கும் மக்களில் சுமார் 90 சதவீதம் பேர் சன்னி இஸ்லாமியர்கள். 10 சதவீதம் பேர் மட்டுமே ஷியா இஸ்லாமியர்களாக உள்ளன.

இந்த 2 பிரிவினருக்கும் இடையே கூட பல இடங்களில் பிரச்சனை உள்ளது. இதனால் இந்த தாக்குதலின் பின்னணியை கண்டுபிடிப்பதில் விசாரணை அமைப்புகள் இறங்கி உள்ளன. அதுமட்டுமின்றி பாகிஸ்தானின் தலைநகராக இஸ்லாமாபாத் உள்ளது.

இங்கு கடந்த டிசம்பர் மாதம் நீதிமன்ற வளாகத்தில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 12 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நடந்த அடுத்த 2 மாதத்தில் மீண்டும் இஸ்லாமாபாத்தில் உள்ள ஷியா மசூதியில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது அந்த நாட்டின் தலைநகரில் வசிக்கும் மக்களே பாதுகாப்பு இல்லாத சூழலை எடுத்துரைக்கிறது.

Previous Story

நுரைச்சோலை வீட்டுத்திட்டம் கிழக்கிலிருந்த ஒரு அரசியல்வாதி தடுத்து நிறுத்தினார் - முனீர் முளாஃபர்

Next Story

புதினின் வலதுகரம்.. ரஷ்யாவின் ராணுவ அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு!