இன்று (ஜனவரி 1ஆம் தேதி, சனிக்கிழமை) காலை, இந்தியாவின் நிர்வாகத்துக்கு உட்பட்ட ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி கோயிலில் மக்கள் நெருக்கடி காரணமாக 12 பேர் வரை இறந்திருப்பதாகவும், 13 பேருக்கு காயம் ஏற்படிருப்பதாகவும் அப்பிரதேசத்தின் டிஜிபி தில்பாக் சிங் ஏ.என்.ஐ முகமையிடம் கூறினார்.
இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோதி, இந்த சோக சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்ததோடு, உயிரிழந்தோருக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையும், காயமடைந்தோருக்கு 50,000 ரூபாயும் பிரதமர் நிவாரன நிதியிலிருந்து வழங்கவிருப்பதாக அறிவித்துள்ளார். இந்த சம்பவம் இன்று காலை சுமார் 2.45 மணிக்கு நடந்ததாக ஏ என் ஐ முகமையில் கூறப்பட்டுள்ளது. காயமடைந்தோர் நரைனா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
டெல்லி, ஹரியானா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் என பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தோர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக அப்பகுதியின் மருத்துவ அலுவலர் கோபல் தத் கூறினார்.