வடகொரியா சமீபத்தில் ராணுவ உளவு சாட்டிலைட் ஒன்றை விண்வெளிக்கு அனுப்பியிருந்த நிலையில், இது தொடர்பாக சில கூடுதல் தகவல்களை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.
இந்த உலகிலேயே மிகவும் மர்மமான ஒரு நாடாக இருப்பது என்றால் அது வடகொரியா தான். அங்கே கிம் ஜாங் உன் என்ற சர்வாதிகாரி ஆட்சி செய்து வரும் நிலையில், உலக நாடுகளிடம் இருந்து அது தனித்தே இருக்கிறது.
இப்படித் தனித்தே இருக்கும் வடகொரியா கடந்த வாரம் உளவு சாட்டிலைட் ஒன்றை அனுப்பி இருந்தது. இந்தச் சூழலில் அது குறித்து சில கூடுதல் தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
உளவு சாட்டிலைட்
வடகொரியா தனது முதல் உளவு சாட்டிலைட்டை சமீபத்தில் செலுத்தி இருந்தது. இந்த உளவு சாட்டிலைட் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையைக் கண்காணித்து வருவதாக வடகொரியா தெரிவித்துள்ளது. அது மட்டுமின்றி அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் மற்றும் அருகிலுள்ள அமெரிக்கக் கடற்படை தளங்களையும் கண்காணித்து வருவதாக வடகொரியா தெரிவித்துள்ளது. மேலும், இந்த இடங்களைக் கண்காணித்து அதை இந்த உளவு சாட்டிலைட் போட்டோவும் எடுத்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் அனுப்பப்பட்ட தனது உளவு சாட்டிலைட் போட்டோ எடுத்ததாகக் கூறப்படும் லிஸ்டை வடகொரியா வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்காவின் முக்கியமான இடங்கள் இடம் பெற்றுள்ளன. வடகொரியா சாட்டிலைட் அனுப்பிய இந்த படங்கள் அதிபர் கிம் ஜாங்கிடமும் காட்டப்பட்டுள்ளது.
சாட்டிலைட் படங்கள்
ரோம், குவாமில் உள்ள ஆண்டர்சன் விமானப்படைத் தளம், பேர்ல் ஹார்பர் மற்றும் அமெரிக்கக் கடற்படையின் கார்ல் வின்சன் விமானம் தாங்கி போர்க்கப்பல் ஆகியவற்றின் படங்களை இந்த உளவு சாட்டிலைட் எடுத்து அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
அதேநேரம் இது வெறுமன பயிற்சிக்கு எடுக்கப்பட்ட படங்கள் தான் என்று தெரிவித்துள்ள வடகொரியா, அந்த உளவு சாட்டிலைட் வரும் டிச. 1ஆம் தேதி முதல் தனது உளவுப் பணியைத் தொடங்கும் என்று தெரிவித்துள்ளது. இப்போது சாட்டிலைட் துல்லியமான படங்களை எடுக்க வைக்கும் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருவதாகத் தெரிவித்த வடகொரியா, இன்னும் ஓரிரு நாட்களில் அந்த பணிகள் நிறைவடையும் என்று தெரிவித்துள்ளது.
உறுதியான தகவல் இல்லை
இருப்பினும், இந்த சாட்டிலைட் வேலை செய்கிறதா என்பதை வேறு எந்தவொரு நாடும் உறுதி செய்யவில்லை. மேலும், உளவு சாட்டிலைட் எடுத்ததாக சொல்லப்படும் போட்டோக்களை வடகொரியாவும் வெளியிடாத நிலையில், அதுவும் உளவு சாட்டிலைட் குறித்த சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது.
ஏனென்றால் உளவு சாட்டிலைட்களை அனுப்பும் அளவுக்கு வடகொரியாவிடம் தொழில்நுட்பம் இல்லை. மேலும், கடந்த காலங்களிலும் சாட்டிலைட் குறித்து வடகொரியா பொய்யான தகவல்களைப் பகிர்ந்துள்ளது. தற்போது அதிபர் கிம் ஜாங்கின் தந்தை ஆட்சிக் காலத்தில், வட கொரியா புரட்சிகர பாடல்களை இசைக்கும் ஒரு சாட்டிலைட்டை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியதாக அறிவித்தது. இருப்பினும், அமெரிக்காவின் ஆய்வில் அப்படி எந்தவொரு சாட்டிலைட்டும் இல்லை என்பது தெரிய வந்தது.
தென்கொரியா சொல்வது என்ன
முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் வடகொரியா அனுப்பி தோல்வியில் முடிந்த உளவு சாட்டிலைட்டை தென் கொரியா மீட்டது. அதை ஆய்வு செய்த தென்கொரியா, அது ராணுவ ரீதியில் உளவு பார்க்கும் அளவுக்குத் தொழில்நுட்ப ரீதியில் முன்னேறியதாக இல்லை என்று தெரிவித்தது. இருப்பினும், வடகொரியா தன்னிடம் அணுகுண்டுகள் இருப்பதாகக் கூறும் நிலையில், இதுபோன்ற உளவு சாட்டிலைட்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.