-நஜீப்-
தேர்தலுக்கு தயாராகுங்கள்!
ஐக்கிய தேசியக் கட்சி அரசியல் செயல்பாட்டாளர்களின் சந்திப்பொன்று அண்மையில் நடைபெற்றது. அப்போது அதில் பங்கு பற்றிய அதன் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் இனியும் பிடித்துக் கொண்டிருக்க முடியாது. தேர்தலுக்கு செல்வதைத் தவிர வேறு மார்க்கங்கள் தனக்குத் தெரியவில்லை. எனவே தேர்தலுக்குத் தயாராகுமாறு அவர் தமது கட்சி செயல்பாட்டாளர்களை கேட்டுக் கொண்டார்.
அவர் கதையில் இருந்து பார்க்கும் போது முதலில் வரப்போவது பொதுத் தேர்தல் என்றுதான் நமக்குப் புரிகின்றது. இப்போது ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்கள் தாம் எந்த அணியுடன் கூட்டுச் சேர்வது என்ற விடயத்தில் குழப்பத்தில் இருக்கின்றார்கள்.
இதில் இன்று ஜனாதிபதி ரணிலுக்கு நெருக்கமாக செயலாற்றும் ஐதேக. முக்கியஸதர்கள் சிலர் மொட்டுக் கட்சியுடன் கூட்டணி சமைத்த தாம் அந்த அணியின் தேசியப் பட்டியலில் வருவது பற்றி இப்போது கனவு கண்டு கொண்டிருக்கின்றார்கள்.
இன்னும் பலர் எப்படியாவது ஐதேக.வை சஜித் அணியுடன் இணைத்துக் கூட்டணி போடுவது பற்றிய முயற்சியில் இருக்கின்றார்கள்.
தொடரும் நாமல் நாடகங்கள்!
இந்தப் பகுதியில் நாம் நாமல் பற்றி பல குறிப்புக்களைச் முன்பு சொல்லி இருந்தோம். அதில் அப்பாவும் மகனும் நடத்துகின்ற நாடகம் பற்றியும் நாம் சுட்டிக்காட்டி இருந்தோம். அத்துடன் 2024 வரவு செலவுத் திட்டம் தொடர்பான வாக்கெடுப்பின் போது மஹிந்த ராஜபக்ஸ ரணிலுக்கு துணைக்கு வருவார்.
சிங்கம் போல இன்று ரணில் வரவு செலவுத் திட்டத்தை விமர்சிக்கும் ராஜபக்ஸாக்களின் அரசியல் வாரிசு வாக்கெடுப்பின் போது தலைமறைவாவார் என்றும் சுட்டிக் காட்டி இருந்தோம். அது அச் சொட்டாக நடந்திருக்கின்றது. இது பற்றி ஊடகங்களிடம் பேசிய நாமல் மக்களுக்கு சுமையைக் கொடுக்கின்ற வரவு செலவுத் திட்டத்திற்கு தனக்கு ஆதரவு கொடுக்க முடியாது என்று அங்கு பேசி இருந்தார்.
அப்படியாக இருந்தால் மொட்டுக் கட்சியில் இருக்கின்ற 122 பேரும் ரணில் மக்களுக்கு சுமத்தியுள்ள இந்த வரவு செலவுத் திட்டத்திற்க ஆதரவு கொடுத்திருக்கின்றார்களே! அப்படியானால் மொட்டுக் கட்சியில் நாமல் தனிவழி என்று நாம் இதனை எடுத்துக் கொள்ள முடியும்.! இந்த சுற்றில் மக்கள் இதற்குப் பதில் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியும்.
கல்வியின் தலை தப்பியது.!
கேகல்லை மொட்டுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுதாத் மஞ்சுல. இவர் தற்போது ஆளும் தரப்பில் இருந்து வெளியேறி சுதந்திர உறுப்பினராக செயலாற்றிக் கொண்டிருக்கின்றார். இவர் தனது பிரதேசத்திலுள்ள ஒரு மாணவரின் பிரச்சினையொன்று தொடர்பாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்திடம் நாடாளுமன்றத்தில் வைத்து ஒரு கடிதத்தை கையளித்திருக்கின்றார் மஞ்சு.
அப்போது கல்வி அமைச்சர் ஒவ்வொருவரும் தருகின்ற கடிதங்களுக்கு தான் வேலை செய்யத் தயாரில்லை என்று அந்தக் கடிதத்தை நிராகரித்திருக்கின்றார். இதனால் கோபமடைந்த சுதாத் மஞ்சு கல்வி அமைச்சரைத் தூசனவார்த்தைகளில் கடுமையாகத் திட்டியதுடன் துரத்திப் போய் தாக்குவதற்கும் தயாராகி இருக்கின்றார்.
இதனால் அங்கிருந்தவர்கள் கல்வி அமைச்சரை பாதுகாத்துக் கொண்டு போய் காப்பாற்றி நாடாளுமன்றத்தில் ஓரிடத்தில் மறைத்து வைத்துப் பாதுகாத்திருக்கின்றார்கள் அவரது சகாக்கள். இதனால் கல்வி அமைச்சரின் தலை தப்பி இருக்கின்றது.
அணுர அதிரடி நடவடிக்கை!
பிரித்தானிய உயர் ஸ்தானிகருடன் ஜேவிபி அலுவலக்கத்தில் நடந்த சந்திப்பில் கலந்து கொள்ள போய் இருந்த அணுரகுமார நாடாளுமன்றத்துக்கு அதிரடியாக வந்து முன்னாள் ஜனாதிபதிகளுக்கு நிதி ஒதுக்கும் விவாதத்தில் வாக்கெடுப்பு வேண்டும் என்று சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டார்.
ஆளும் தரப்பில் ஆறுபத்தி ஆறு பேர்வரை அமர்ந்திருந்தனர். இதில் வெற்றி பெற முடியாது என்று தெரிந்தும் அவர் அங்கு வாக்கெடுப்பை கோரினார். அதன்படி நடந்த வாக்கெடுப்பில் ஜேவிபி. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூன்று பேர் மட்டுமே எதிர்த்து வாக்களித்திருந்தனர்.
சஜீத் அணியில் இரண்டு மூன்றுபேர் அங்கு அமர்ந்திருந்த போதும் அவர்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட சமயத்தில் அங்கிருந்து ஸ்கெப்பாகி விட்டார்கள். இதற்குக் காரணம் முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்படுகின்ற வரப்பிரசாதங்களில் சஜித் தாயார் ஹேமா பிரேமதாசாவுக்கு சுகபோகங்கள் கிடைப்பதால் அவர்கள் இதனைத் தவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: 26.11.2023 ஞாயிறு தினக்குரல்