வங்கதேசத்தில் மீண்டும் தீவிரமடைந்துவரும் போராட்டங்களில் குறைந்தது 90 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். காவல்துறைக்கும், பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலகக் கோரி அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்தி வருவோருக்கும் இடையே மோதல் வெடித்தது.
சமீபத்தில் மாணவர் தலைவர்கள் அரசுக்கு எதிராக ஒத்துழையாமை அறிவித்துள்ளதால், பதற்றம் இக்கட்டான கட்டத்தை எட்டியுள்ளது.
சிராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு காவல்நிலையத்தை ஆயிரக்கணக்கான மக்கள் தாக்கியதாகவும், இதில் 13 காவல் அதிகாரிகள் உயிரிழந்ததாகவும் காவல்துறை கூறியுள்ளது.
வங்கதேசத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க காவலர்கள் கண்ணீர்ப் புகை குண்டு, ரப்பர் தோட்டாக்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் 200-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
வங்கதேசத் தலைநகர் டாக்காவில் மொபைல் மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இணைய சேவை அளித்துவரும் நிறுவனங்கள், உள்ளூர் ஊடகங்களில் இது அரசின் அறிவிப்பின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை எனத் தெரிவித்துள்ளனர்.
வங்கதேசத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய (BTRC) அதிகாரி ஒருவர் பிபிசி வங்காள மொழிச் சேவையிடம் பேசுகையில், டாக்கா நகரில் இப்போதைக்கு 4G இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பிராட்பேண்ட் இணைய சேவைகள் எப்போதும் போலத் தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.
4G மற்றும் 3G சேவை இல்லாமல் மொபைல் போன்களில் மக்களால் இணைய சேவையைப் பயன்படுத்த முடியாது. மேலும், கிடைக்கப்பட்ட தகவலின்படி, இணைய சேவைகள் மீண்டும் எப்போது இயல்பு நிலையில் வழங்கப்படும் என்பது குறித்து தெரியவில்லை.
காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு
வங்கதேசத்தின் வடக்கு மாவட்டங்களான போக்ரா, பாப்னா மற்றும் ரங்பூர் போன்ற ஊர்கள் உட்பட நாடெங்கிலும் இறப்பு மற்றும் காயமடைந்தோர் எண்ணிக்கை பதிவாகி வருகிறது என வங்கதேச ஊடகம் மற்றும் ஏ.எஃப்.பி செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிறு (ஆகஸ்ட் 4) மாலை 6 மணியளவில் இருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் செய்திகளில் வெளியான தகவலின் படி, இந்த ஊரடங்கு உத்தரவு காலவரையின்றி நீடிக்கும் எனத் தெரியவருகிறது.
பிரதமர் பதவி விலகக் கோரி போராட்டம்
தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர். நகரின் பிற பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன.
சில பகுதிகளில், ஆளும் அவாமி லீக் ஆதரவாளர்கள் மற்றும் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் இடையே மோதல் வெடித்துள்ளது என்று கூறப்படுகிறது.
“ஒட்டுமொத்த நகரும் போர்க்களமாக மாறிவருகிறது,” என ஒரு காவலர் கூறுகிறார். ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் பெயர் குறிப்பிட விரும்பாத காவலர், மருத்துவமனைக்கு வெளிய இருந்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களைப் போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்ததாகக் கூறினார்.
பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்தி வரும் குழு கோருகிறது.
ஒரு குழுவினர் ஞாயிறு துவங்கி நாடு தழுவிய ஒத்துழையாமையை அறிவித்துள்ளனர். மேலும், இவர்கள் குடிமக்களை வரி மற்றும் பயன்பாட்டு கட்டணங்களைச் செலுத்த வேண்டாம் என அறிவுறுத்தி வருகின்றனர். மாணவர்கள் தொழிற்சாலைகள் மற்றும் பொது போக்குவரத்தை மூடவும் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஜூலை மாதம் வெடித்த போராட்டம்
கடந்த மாதம் வங்கதேசக் குடிமைப் பணிகளுக்கு அறிவிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடங்கிய மாணவர் போராட்டம், இப்போது அரசுக்கு எதிரான போராட்டமாக உருவெடுத்துள்ளது.
ஜூலை மாதம் நடந்த வன்முறையில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இவர்களுள் பலர் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூடு காரணமாக உயிரிழந்துள்ளனர்.
கடந்த இரு வாரங்களில் ஏறத்தாழ 10,000 பேரைப் பாதுகாப்புப் படையினர் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர். இவர்களில் எதிர்க்கட்சி ஆதரவாளர்களும், மாணவர்களும் அடங்குவர்.