ரஷ்யாவின் எண்ணெய் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு அறிவுறுத்தல் விடுத்து இருந்தார்.
டிரம்பின் இந்த அறிவுறுத்தலையும் மீறி இதுவரை இல்லாத அளவுக்கு ரஷ்யா மீது உக்ரைன் டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. ரஷ்யாவின் எண்ணெய் ஆலைகளை குறிவைத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. உக்ரைனில் சில பகுதிகளை ரஷ்யா கைப்பற்றிய போதிலும் உக்ரைன் கொடுக்கும் பதிலடியால் ரஷ்யாவும் திணறி வருகிறது.
ரஷ்யாவின் எண்ணெய் கட்டமைப்புகளை குறிவைத்து உக்ரைன் தாக்கி வருவதால் அந்த நாடு பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. வெளிநாடுகளுக்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் தாக்குதல்
ஏற்கனவே ஈரான் போரால் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உக்ரைனின் தாக்குதலால் ரஷ்யாவின் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்படுவது சர்வதேச அளவில் எரிபொருள் நெருக்கடியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
எனவே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை தொடர்பு கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யாவின் எண்ணெய் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று கடந்த வாரம் எச்சரித்து இருந்தார்.
இந்த சூழலில்தான், ரஷ்யா மீது இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தாக்குதலை உக்ரைன் நடத்தியுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிரோன்களை கொண்டு உக்ரைன் தாக்குதல் நடத்தியது.
தலைநகர் மாஸ்கோவை குறிவைத்தும் நூற்றுக்கணக்கான டிரோன்கள் அணிவகுத்தன. இதனை ரஷ்ய வான் தடுப்பு அமைப்புகள் தாக்கி அழித்ததாக ரஷ்ய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எனினும், உக்ரைன் நடத்திய தாக்குதலில் இரண்டு பேர் பலியாகியுள்ளதாகவும் 20 க்கும் மேற்பட்ட்டோர் காயம் அடைந்து இருப்பதாகவும் உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.
1,100 டிரோன்கள்
ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்கும் வகையில் அந்த நாட்டின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் உறுதி செய்துள்ளார்.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறுகையில், 1,100- க்கும் மேற்பட்ட உக்ரைன் டிரோன்கள் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் சுட்டு வீழ்த்தப்பட்டன.
ரஷ்யாவில் தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. மூன்று நாட்களாக நடைபெற்று வரும் இந்த தேர்தலின் கடைசி நாளான இன்று தேர்தலை சீர்குலைக்கும் வகையில் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக மாஸ்கோ மேயர் செர்கே சோபயனின் குற்றம் சாட்டினார்.
உக்ரைனின் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சன் மற்றும் ஜபோரிஜியா ஆகிய பிராந்தியங்கள் சிலவற்றிலும் நாடாளுமன்றத் தேர்தலை ரஷ்யா நடத்துகிறது.
இந்தப் பகுதிகளில் சிலவற்றை மட்டுமே ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. மேலும், 2014-ம் ஆண்டு ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்ட கருங்கடல் தீபகற்பமான கிரிமியாவிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட இந்த வாக்குப்பதிவு சட்டவிரோதமானது என்று உக்ரைன் கருதுகிறது. எனவேதான் இதுவரை இல்லாத வகையில் தாக்குதலை நடத்தியதாக சொல்லப்படுகிறது.




