ரஷ்யாவில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் மாநாடு இன்று (அக்.,22) தொடங்குகிறது. புதுடில்லியில் இருந்து மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய கூட்டமைப்பு, ‘பிரிக்ஸ்’ என்றழைக்கப்படுகிறது. இந்த கூட்டமைப்பின் உச்சி மாநாடு, ரஷ்யாவின் கசான் நகரில், இன்றும்(அக்., 22), நாளையும் (அக்., 23) நடக்கிறது. இதில், பிரதமர் மோடி உட்பட உலக தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், கசான் நகரில் பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில், புலம்பெயர்ந்த இந்தியர்கள் பேனர்கள் வைத்துள்ளனர்.
மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது: இந்தியா பிரிக்ஸ் அமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. பொருளாதார வளர்ச்சி மற்றும் உலகளாவிய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் பிரிக்ஸ் அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் லின் ஜியான் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பிரதமர் மோடி மற்றும் சீனா அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்து பேசுவார்கள். அவர்கள் பொருளாதாரம் மற்றும் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்கா வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரீன் ஜீன் பியர் கூறியதாவது: நட்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதில் கவனம் செலுத்துகிறோம். நாங்கள் பிரிக்ஸ் அமைப்பை புவிசார் அரசியல் போட்டியாளராக பார்க்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.