அடக்குமுறையான ஆட்சியை முன்னெடுக்க ரணில் முயற்சிப்பதாக சர்வதேசம் மற்றும் உள்ளுர் ரீதியாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்ட வெளிநாட்டு பெண் ஒருவரின் கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டதுடன்,
விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிகழ்வு சர்வதேச ரீதியாக எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ரணிலின் நிலைப்பாடு
குடிவரவு விதிமுறைகளை மீறி காலிமுகத்திடல் போராட்டத்தில் கலந்து கொண்டதுடன், அரசாங்கத்திற்கு எதிராக தனது சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
நாடு பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதிகளவான சுற்றுலா பயணிகளின் வருகை நாடு எதிர்பார்த்துள்ளது. இந்நிலையில் ஸ்கொட்லாந்து பெண் ஒருவருக்கு எதிரான நடவடிக்கை குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியில் இருந்த போது சமகால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக செயற்பட்டார்.
சுற்றுலா பயணிகளின் வருகை
இதன்போது சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது வெளிநாட்டவர்களின் வருகை குறித்து வெளியிட்ட கருத்து பரவலாக பேசப்பட்டது. நாடு வங்குரோத்து நிலையில் உள்ளது. எந்த நாட்டிலிருந்தும் வெளிநாட்டவர்கள் வரலாம்.
காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டங்களில் கூட ஈடுபடலாம் எனத் தெரிவித்திருந்தார். எனினும் இன்று ஜனாதிபதியாக இருக்கும் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில் வெளிநாட்டு பெண் ஒருவர், போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக செயற்பட்டமை பாரிய குற்றமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் ரணில் விக்ரமசிங்க இருவேறுபட்ட நிலைப்பாட்டை கொண்டுள்ளார் என சர்வதேச ரீதியாக அம்பலமாகி உள்ளது. தற்போதைய நிலையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் நாட்டுக்கு வருவதற்கு தயக்கம் காட்டுவார்கள். இதன்மூலம் இலங்கையின் பொருளாதாரம் மேலும் மோசமான நிலைக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.