-நஜீப் பின் கபூர்-
இலங்கை வரலாற்றில் மிக முக்கியமானதோர் மே தின விழா எதிர் வருகின்ற மே முதலாம் நாள் நாட்டில் நடைபெற இருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தல் அல்லது ஒரு பொதுத் தேர்தலுக்கு முன்னர் நாட்டில் நடைபெறுகின்ற ஒரு மே தினமாக இது அமைய இருப்பதால் நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் போல இந்த மே தின விழாவில் தமது பலத்தை நாட்டுக்குக் காட்சிப்படுத்த வியூகங்களை வகுத்துக் கொண்டிருக்கின்றன. பொதுவாக அனைத்து முக்கிய கட்சிகள் அனைத்தும் போல இந்த மே தினத்தில் தாம் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களை வீதியில் இறக்கி தமது பலத்தைக் காட்சிப்படுத்த இருப்பதாக சொல்லிக் கொண்டிருக்கின்றன.
அடுத்து வருகின்ற மே தினத்தின் போது அரசியல் அரங்கில் அதிரடி மாற்றங்கள் பல நிகழ இருப்பதாகவும் அவை மேலும் கூறிக் கொண்டிருக்கின்றன. இன்னும் சிலர் தமது ஜனாதிபதி வேட்பாளரை இந்த மே தினப் பேரணியில் வைத்து நாட்டுக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக சூளுரைத்துக் கொண்டிருக்கின்றன. இப்படிச் சொல்லப்படுகின்ற பெரும்பாலான கதைகள் வெறும் வீராப்பு-பம்மாத்து வார்த்தைகள்தான் என்பது நமது கணிப்பு.
இப்படி நாட்டில் தற்போது இந்த மே தினம் தொடர்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கின்ற கதைகள் பற்றி சற்று வரிவாக இப்போது பார்ப்போம். வழக்கம் போல இப்படியான மே தினங்களில் ஆர்வம் காட்டாத ஐக்கிய தேசியக் கட்சியும் கூட இந்த 2024 மே தினத்தை மையமாக வைத்து பல கதைகளைக் கட்டவிழத்து விட்டு வருவது இங்கு அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
ஐக்கிய தேசியக் கட்சி:- தற்போது ஜனாதிபதியாக இருக்கும் ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களின் மாமனார் ஜே.ஆர்.ஜெயவர்தன ஜனாதிபதியாக இருந்த காலப் பகுதியில் மே தின விழாக்களில் அதிகளவிலான பொது மக்கள் கூடுவதைத் தவிர்ப்பதற்காக சினிமா தியேட்டர்களில் இலவச சினிமாக் கட்சிகள், மலிவு விலையில் காட்சிகள் என்றெல்லாம் சலுகை வழங்கி இருந்தார்.
அந்த நாட்களில் சினிமா கொட்டகைகளில் மக்கள் முன்டியடித்துக் கொண்டிருந்த ஒரு காலப் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று அதே ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஜனாதிபதியாக இருக்கும் ரணில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களை தனது கொழும்பு மே தினத்துக்கு அழைத்து வர இருப்பதாக ஒரு செய்திக் குறிப்பில் பார்க்க முடிந்தது.
இது என்ன அதிரடி மாற்றம் என்று நீங்கள் யோசிக்கின்றீர்களா? அதே ஐக்கிய தேசிய கட்சி வட்டாரங்கள் தருகின்ற தகவல்களின் படி அன்றைய தினம் தற்போதய ஜனாதிபதி ரணில் வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் தான் வேட்பாளராக களத்தில் இறங்க இருப்பது பற்றிய அறிவிப்பை உத்தியோகபூர்வமாக தெரிவிக்க இருக்கின்றார் என்று அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் அப்படி ஏதும் அந்த மே தின அரங்கில் நடக்கும் என்பதில் நமக்கு நம்பிக்கை கிடையாது. அடுத்து ஐக்கிய மக்கள் சக்தி-சஜித் அணியில் இருந்து டசன் கணக்கானவர்கள் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி மே தின மேடையில் ஏற இருக்கின்றார்கள் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதுவும் ஆதரமில்லாத கட்டுக் கதையாக இருக்கலாம் என்பதுதான் நமது கருத்து.
மேலும் இப்படி தன்னுடன் வந்து இணைந்து கொள்பவர்களுக்கு தமது பிரதேச அபிவித்தி கருதி பல ஆயிரம் மில்லியன் ரூபாய்களை ஜனாதிபதி ரணில் வழங்க இருக்கின்றார் என்றும் அதே வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படிப் பட்டவர்களின் பட்டடியலொன்றை தற்போது பாதுகாப்பு பிரதி அமைச்சர் டிரான் அலசுக்குச் சொந்தமான ஒரு செய்திதாள் பகிரங்கமாகவே வெளியிட்டிருந்தது.
அப்படிச் சொல்லப்பட்டவர்கள் சிலரிடம் நாம் விசாரித்த போது நமக்கு ஜனாதிபதி ரணிலுடன் நல்லறவு இருப்பது உண்மைதான். ஆனால் அதற்காக மேற் சொன்ன செய்திகள் பற்றி தமக்கு ஏதும் தெரியாது என்பது அவர்கள் பதிலாக இருந்தது. தமது பிரதேச அபிவிருத்திகள் கருதி யார் பணம் கொடுத்தாலும் நன்றி உணர்வுடன் நாம் அதனைப் பெற்றுக் கொண்டு மக்களுக்குப் பகிந்தளிக்க தயாராக இருக்கின்றோம் என்பது அவர்கள் பதிலாக இருந்தது.
இப்படி கட்சி தாவல் பற்றிய கதைகளின் பின்னணியில் உள் கட்சி ஆதிக்கப் போட்டி இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. சஜித்துடன் இருக்கும் தமது நெருக்க உறவில் வேறு ஆட்கள் நுழைந்து பங்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற எண்ணத்தில் சிலர் போட்டுக் கொடுக்கின்ற கதைகளினால் தான் கபீர், அர்ஷ, எரான், காவிந்த, ராஜகருண, பீல்ட் மார்சல் போன்றவர்களின் பெயர்களை சிலர் இதில் இணைத்து விடுகின்றார்கள் என்றும் ஒரு கதை.
மீண்டும் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி மே தின விழா தொடர்பாக பேசுவதானல் கொழும்பு மாவட்டத்தில் இருந்து ஐம்பது ஆயிரம் பேரை இந்த மே தின விழாவுக்கு அழைத்து வரும் பொறுப்பை ரவி கருணாநாயக்க ஏற்றிருக்கின்றார் என்றும் ஒரு தகவல். எப்படியோ ஒரு பத்து- பதிணையாயிரம் பேரை இந்த ஐதேக. மே கூட்டத்துக்கு அழைத்து வந்தால் அது கூட பெரிய விடயம்தான்.
இப்படி என்னதான் ஐக்கிய தேசியக் கட்சியின் பெயரை சொல்லி விளம்பரங்கள் கதைகள் கட்விழ்த்து விடப்பட்டாலும் ரணில் ஜனாதிபதி வேட்பாளராக வருவது ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து அல்ல. அவர் தன்னை ஒரு பொது வேட்பாளராகத்தான் களத்துக்கு வருவார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றார்கள். ஆனால் அவர் வேட்பாளராக வருவாரா என்பதில் நிறையவே சந்தேகங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
மொட்டுக் கட்சி:- ராஜபக்ஸாக்களின் மொட்டுக் கட்சியினர் வருகின்ற ஜனாதிபதி தேர்தலுக்கு தமது கட்சி சார்பில் ஒரு செல்வாக்கான வேட்பளர் களத்துக்கு வருவார் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.மீண்டும் தம்மிக்க பெரேரா மற்றும் திலித் ஆகியோர்களின் பெயர்கள் அங்கு உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மே தினத்துக்கான செலவுகளை வசூலிக்கும் முயற்ச்சியாகக் கூட இது இருக்கலாம். எப்படியே இவர்களும் கொழுமில்தான் தமது பலத்தை காட்ட இருப்பதாகத் தெரிகின்றது.
ராஜபக்ஸாக்களின் மொட்டுக் கட்சியைப் பொறுத்தவரை அவர்கள் மீண்டும் தமது பலத்தை நாட்டுக்குக் காட்டுவதாக இருந்தால் 2024 மே தினம் அவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பாக அமைய முடியும். ஆனால் தேசிய ரீதியில் அவர்கள் சொல்வது போல ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களைக் கொண்ட பேரணி ஒன்றை கொழும்பில் களத்தில் இறக்கி விடுமளவுக்கு அவர்களது செயல்பாடுகளை நமக்கு கண்டு கொள்ள முடியவில்லை. என்றாலும் திறை மறைவிவல் ஏழு தலைக்காரர் ஏதாவது அலாவுத்தீனின் அற்புத விளக்கில் வித்தை காட்டப் போகின்றாறோ என்னவே நமக்குத் தெரியாது. பணம் போதுமான மட்டும் அவர்களிடம் இருப்பதால் பிணமும் அங்கு வாய்திறக்கும். அத்துடன் அது பாதாளம் மட்டும் பாயவும் இடமிருக்கின்றது.
இதற்கிடையில் மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை மஹிந்த ராஜபக்ஸ தான் தீர்மானிப்பார் என்று அந்தக் கட்சியின் செயலாளர் சாகர ஊடக சந்திப்பொன்றில் கூறி இருக்கின்றார். எனவே மொட்டுக் கட்சியில் கூடிப் பேசி தீர்மானிக்கின்ற நிலை இல்லை. தனி நபர்கள் குறிப்பாக ராஜபக்ஜாக்கள்தான் அங்கு ராஜாக்கள். இதற்கிடையில் தேர்தல் தொடர்பாக தனது நிலைப்பாட்டை ரணில் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று பசில் நச்சரித்துக் கொண்டிருக்கின்றார்.
ஐக்கிய மக்கள் சக்தி: பிரதான எதிர்க் கட்சித் தலைவராக இருக்கும் சஜித் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி இந்த மே தினத்தில் தனது பலத்தை நாட்டுக்குக் காட்சிப் படுத்த வேண்டி கட்டாயத்தில் இருக்கின்றது. அத்துடன் சஜித் பிரேமதாசதான் ஜனாதிபதித் தேர்தலில் பிரதான ஒரு போட்டியாளர். பொதுவாக அவருக்கும் ஜேவிபி. அணுராவுக்குமிடையில்தான் இந்த முறை போட்டி என்பது பொதுவான கருத்ததாக இருந்து வருகின்றது. எனவே சஜித் இந்த மே தினத்தில் ஜேவிபி. க்கு ஒரு பெருத்த சலவாலை இந்த 2024 மே தினத்தில் கொடுக்க வேண்டி இருக்கின்றது. அதனை அவர் உணர்ந்துதான் இருக்கின்றார். என்றாலும் அவரது திட்டங்களை வடிவமைப்பவர்களிடத்தில் வெட்டுக் கொத்துக்கள் தொடர்வதால் சஜித் பெரும் நெருக்கடிகளுக்கு இலக்காகி இருக்கின்றார்.
கட்சிக்குள் பிளவுகளை உண்டு பண்ணுவதில் உள்ளே பலர் மிகவும் அநாகரிமாக நடந்து கொண்டு சஜித்துக்கு நெருக்கடிகளை உண்டுபண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். மே தின ஏற்பாடுகளைத் வடிவமைப்பதிலும் திட்டமிடுவதிலும் கூட அங்கு கடும் மோதல் போக்கு இருப்பதை அவதானிக்க முடிகின்றது. பெரும்பாலான சிரேஸ்ட உறுப்பினர்கள் சுஜீவ சேமசிங்ஹ நடவடிக்கைகள் விடயத்தில் இனக்கப்பாடற்றவர்களாக காணப்படுக்கின்றனர். புதிதாக வந்தவர்களுக்கும் பழையவர்களுக்கம் வேறு போட்டிகள் மோதல்கள். இது போன்ற பல போட்டிக் குழுக்கள் அந்தக் கட்சியில் இருப்பது சஜித்துக்கு தலைவலி.
இதற்கிடையில் சஜித் மற்றும் ரணிலை ஒரணியில் கொண்டுவருவதற்கு முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. சஜித்-ஜனாதிபதி, ரணில்-பிரதமர் என்ற ஒரு நிலைப்பாட்டுக்கு வருவது தொடர்பாக ரணிலின் நெருங்கிய சகா மலிக் சஜித் தரப்புடன் பேச்சுவார்த்தைக்கு சென்றதாகவும், எடுத்த எடுப்பிலே மக்கள் செல்வாக்கில்லாத காட்சிகளுடன் கூட்டணிகளை அமைநத்துக் கொள்ளும் அளவுக்கு நாங்கள் என்ன பைத்தியங்களா என்று தூது கொண்டு சென்றவரிடத்தில் பெரியவர் சஜித் கடிந்து கொண்டிருக்கின்றார்.
இதற்கிடையில் ரணில் ஜனாதிபதி-பிரதமர் தம்மிக்க என்று மற்றும் ஒரு யோசனையும் முன்வைக்கப்பட்டு வருவதாகவும் ஒரு தகவல். அப்படியாக இருந்தால் முதலில் தன்னிடம் கல்வி அமைச்சை முதலில் கையில் கொடுங்கள் என்று தம்மிக்க ரணிலைக் கேட்டிருப்பதாவும் செய்திகள் வருகின்றன.
ஜேவிபி அல்லது என்பிபி: அணுர குமார தலைமையிலான ஜேவிபினர் அல்லது என்பீபீ. ஆதரவலர்கள் இந்த முறை வழக்கத்துக்கு மாற்றமான ஒரு மே தின விழாவை ஏற்பாடு செய்திருப்பதாகத் தெரிகின்றது. இந்த முறை அவர்கள் நான்கு இடங்களில் இந்த மே தின விழாக்களை நாட்டில் நடாத்த இருக்கின்றார்கள். யாழ்ப்பாணத்தில் வடக்கை மையமாக வைத்து ஒரு மே தினத்தை அவர்கள் நடாத்த இருக்கின்றார்கள்.
அவர்களின் அடுத்த மே தின விழா தெற்கு மாத்தறையில் நடக்கின்றது. இங்கு தென், ஊவா மாகணங்களைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கு கொள்ள இருக்கின்றனர். மூன்றாவது அவர்களது மே தினம் அனுராதபுரத்தில் நடக்கின்றது. அங்கு வட மத்திய, மத்திய மாகாண மாணங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர் ஏனையோர் கொழும்பில் நடக்க இருக்கின்ற அவர்களது மே தின பேரணில் கலந்து கொள்ளும் வகையில் இந்தக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.
இவை ஒவ்வொன்றிலும் ஒரு இலட்சம் பேருக்கும் குறையாத எண்ணிக்கையானவர்களை பங்கு கொள்ளச் செய்வதுதான் இவர்களது திட்டமாக இருக்கின்றது. வருகின்ற ஜனாதிபத் தேர்தலில் பிரதான ஒரு போட்டியலாராக அனுரகுமார திசாநாயக்கவை எதிர்பார்ப்பதால் அவர்களுக்கு இந்த 2024 நான்கு மே தின நிகழ்வுகளும் முக்கியமான மே தினமாகப் பார்க்கப்படுகின்றது, வழக்கமாக வெற்றிகரமான மே தின போரணிகளை நடாத்துக்கின்ற இவர்கள் இந்த சவாலை எப்படிச் சமாளிக்கப் போகின்றார்கள் என்பதனை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டி இருக்கின்றது.
மேற்குறிப்பிட்ட பிரதான வேற்பாளர்களுடன் வருகின்ற ஜனாதிபத் தேர்தலில் வேட்பாளராக வர எதிர் பார்க்கின்ற தயாசிரி ஜயசேக்கர, பொலன்னறுவ-ரணசிங்ஹ, விமல் தரப்பினர், விஜேதாச ராஜபக்ஸ, திலித் ஜயவீர பேன்றவர்களும் தமது பலத்துக்கு ஏற்ப இந்த 2024 மே தினப் பேரணிகளை ஏற்பாடு செய்திருப்பதாகத் தெரிகின்றது.
இதர மே தினங்கள்:- நாம் மேற் சொன்ன மே தினங்களைத் தவிர இன்னும் பல மே தினப் பேரணிகள் நாட்டில் நடைபெற இருக்கின்றன. பொதுவாக அவை தொழிற்சங்கங்களுடன் தொடர்புடையவை. மேலும் வழக்கம் போல மலை நாட்டில் இன்னும் பல மே தினங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இந்த முறையும் தமக்குத் தருவதாக சொல்லப்பட்டிருக்கின்ற சம்பள அதிகரிப்புத் தொடர்பான கோஷங்களாகத்தான் இவை இருக்கப் போகின்றன.
கடந்த ஒரு தசாப்தங்களுக்கு மேலாக உச்சரித்தை அதே சம்பளக் கோஷங்களைத்தான் இந்த முறையும் மலையக அரசியல் கட்சிகள் போடும்.ஆணில் முதலாளிமாரே சம்பள அதிகரிப்புக்கு இடமில்லை என்று ஏற்கெனவே அறிவித்து விட்டனர். கதை கந்தல்தான் கோசம் போட்டு ஆகப்போவது என்ன? மலையக மக்களே இன்னும் எத்தனை தலைமுறைக்கு இந்த சம்பள அதிகரிப்பு பற்றிய போராட்டம்? சிந்தித்துப் பாருங்கள்.!
நன்றி: 28.04.2024 ஞாயிறு தினக்குரல்