-நஜீப் பின் கபூர்-
நாம் ஏன் இந்தத் தலைப்புப் பற்றி பேச முனைகின்றோம் என்றால், நாட்டிலுள்ள அனைத்து வகையான ஊடகங்களும் அரசியல்வாதிகளும் தமது தனிப்பட்ட நலன்கள் அல்லது எதிர்பார்ப்புக்களை மையமாக வைத்துதான் தேர்தலகள்; பற்றிய செய்திகளை சொல்லிக் கொண்டு வருகின்றன. அல்லது சந்தைப் படுத்துகின்றன. அதனால் நடுநிலையாக நின்று இந்த தலைப்புப் பற்றி கருத்துக்களை மக்களுக்கு சொல்ல வேண்டிய தார்மீகக் கடமை நமக்கு இருக்கின்றது என்று கருதுவதால் இந்த நமது முயற்ச்சி என்பதனை முதலில் சொல்லி வைக்கின்றோம்.
நமது நாட்டில் தேர்தலகள் என்று பார்க்கின்ற போது அது ஆங்கிலேயர் காலத்தில்தின் பிற்பகுதியில்தான் செப்பனிடப்பட்டு வந்திருக்கின்றது. என்றாலும் அது அனைத்துக் குடி மக்களும் பங்கு கொள்ளும் முறையில் துவக்கத்தில் வடிவமைக்கப்படவில்லை. இலங்கையில் 1911ல் தான் முதலவது தேர்தல் நடந்தது. அதில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிருந்தவர்கள் ஆங்கிலம் படித்த தனவந்தர்கள் மட்டுமே. அப்போது வாக்காளர் எண்ணிக்கை 2938 பேர் மட்டும். அதில் சிங்களவர்கள் 1659 பேர் தமிழர்கள் 1072 பேர். 1911ல் நாட்டில் இருந்த மொத்த குடித்தொகை 4106350 பேர். இவர்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள். 27 இலட்சம் போர்வரை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நாட்டில் குடித் தெகை 2 கோடி 17 இலட்சம். இவர்களில் 2020 பொதுத் தேர்தலில் வாக்காளிக்கத் தகுதி பெற்றிருந்தவர்களின் எண்ணிக்கை 15,992,092.இப்போது இலங்கையில் நடைபெறுகின்ற தேர்தல்கள் பற்றிப் பார்ப்போம் ஜனாதிபதித் தேர்தல் பொதுத் தேர்தல் மாகாணசபைத் தேர்தல் உள்ளூராட்சித் தேர்தல் இது தவிர கருத்துக் கணிப்பு என்ற ஒன்றும் இருந்த வருகின்றது. இந்தத் தேர்தல்கள் நடக்க வேண்டிய அட்டவணை-ஒழுங்குகளும் இருக்கின்றது. ஆனால் அரசியல் தலையீடுகள் ஆதிக்கம் காரணமாக இது அந்த வரம்புகளை மீறி நடந்த சந்தர்ப்பங்களும் நிறையவே இருக்கின்றன.
அதே போன்று பதவியில் இருக்கின்ற ஆட்சியாளர்கள் தமக்குத் தேவையான வகையில் நடக்க வேண்டிய தேர்தல்களை தள்ளிப் போட்ட சந்தர்ப்பங்கள் அல்லது நடத்தாமல் தவிர்த்து வந்த சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. பொதுவாக பதவியல் இருக்கின்ற ஆட்சியாளர்கள் தமக்கு வாய்ப்பான நேரங்களில் தேர்தலுக்குச் செல்வது பரவலாக நடக்கின்றன. சட்டத்தில் கூட இதற்கு இடம் தரப்பட்டடிருக்கின்றது. இதற்கு நல்ல உதாரணம் 2023 ஏப்ரலில் நடக்க ஏற்பாடாக இருந்த உள்ளூராட்சித் தேர்தல் செயல்பாடுகளைக் குறிப்பிடலாம்.
மேற்சொன்ன தேர்தல்களின் போதும் வித்தியாசமான ஐந்து வகையான எல்லைப் பரப்புக்களை வைத்துத் தேர்தல்கள் நடாத்தப்படுகின்றன. இதில் மக்கள் மத்தியில் மிகவும் செல்வாக்குப் பெற்ற கட்சிகள் என்றும் கடிதத் தலைப்புடன் ஒரு சிலரை வைத்துக் அரசியல் செய்கின்ற கட்சிகள் என்றும் களத்துக்கு வருகின்றன. இன்று இலங்கையில் மொத்தமாக பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் 86 இருக்கின்றன. இதில் இன ரீதியான கட்சிகள் பிரதேச வாரியான கட்சிகள்-இயக்கங்கள் எனச் செயல்பட்டு வருகின்றன. தேர்தல் முடிவுகளின்படி தேசிய ரீதியில் சில கட்சிகளுக்கு கிடைத்த வாக்குகளை பார்க்கின்றது போது ஒரு கிராமத்தில் ஒரு வாக்குக்கூட அவற்றிற்கு கிடைப்பதில்லை.
நாட்டில் ஏறக்குறைய 14022 வரை கிராம சேவகர் பிரிவுகளும் 35000 வரையிலான கிராமங்களும் இருக்கின்றன. அரசியல் களத்தில் ஜனரஞ்சகமாக செயலாற்றும் முன்னிலை சோஸலிச கட்சி கடைசியாக 2019ல் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் நின்று பெற்ற வாக்குகள் வெரும் 8219. நவ லங்கா சமசமஜக் கட்சி அந்தத் தேர்தலில் 1841 வாக்குகளை தேசிய மட்டத்தில் பெற்றது என்றால் சிந்தித்துப் பாருங்கள்.
கடைசியக நடைபெற்ற பொதுத் தேர்தலில் மொட்டுக் கட்சி (மஹிந்த) 6853698 வக்குகளுக்கு 145 ஆசனங்கள். தொலைபேசிக் கட்சி (சஜித்) 2771980 வாக்குகளுக்கு 54 ஆசனங்கள். தேசிய மக்கள் சக்தி 445958 வாக்குகளுக்கு மூன்று ஆசனங்கள.; இலங்கை தமிழ் அரசுக் கட்சி 327168 வாக்குகளுக்கு 10 ஆசனங்களையும,; வெரும் 34428 வாக்குகளைப் பெற்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும் பெற்றிருக்கின்றது. மொத்த வாக்காளர்களில் இது 0.30 சதவீதம்.
இப்படியாக மொத்தமாக 15 கட்சிகளிடையே இந்த 225 ஆசனங்களும் பகிர்ந்து போய் இருக்கின்றன. இதில் தேசிய பட்டியலும் உள்ளடக்கம். நீண்டகாலம் அதிகாரத்தில் இருந்த ரணில் ஐதேக.வால் ஒரு ஆசனத்தையும் வெற்றி கொள்ள முடிவில்லை. தேசிய பட்டியலில் ஒரு ஆசனத்தை வென்று இன்று ரணில் அதிகாரம் மிக்க ஜனாதிபதி கதிரையில் இருக்கின்றார் என்றால் நாட்டிலுள்ள அரசியல் யாப்பு அதற்கு இடம் கொடுத்திருக்கின்றது. மக்கள் அரசியல் உணர்வுடன் இதனை முடிச்சுப் போட்டுப் பார்க்கின்ற போது அதனை என்னவென்று சொல்லவது.
தேர்தலின் பின்னர் அரசுகள் அமைகின்ற போது கட்சித் தாவல்கள், இடையில் ஏற்படுகின்ற முரண்பாடுகள் காரணமான புதிய அரசியல் கூட்டுக்களும் ஏற்பட்டு மேற்சொன்ன எண்ணிக்கை நாடாளுமன்றத்தில் வித்தியாசமாக அமைந்து விடுகின்றன. உதாரணத்துக்கு ஆளும் தரப்பு எண்ணிக்கை மற்றும் எதிரணி எண்ணிக்கைகளில் இன்று குழறுபடியான நிலை காணப்படுகின்றன. தமது கட்சிகளைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஒரு நிலை காணப்படுகின்றன. இதற்கும் ஆதரவு வழங்கிய மக்களுக்கும் கொள்கை ரீதியில் எந்தத் தொடர்பும் கிடையாது. தன்னல அரசியல் காரணங்களுக்காகத்தான் இந்த பல்டிகள் நடக்கின்றன. இவ்வாறான ஒரு அரசியல் கலாச்சரம் நெடுங்காலமாக இந்த நாட்டில் இருந்து வருகின்றன.
அதே போன்று தேர்தல் முறைகளில் மாற்றம் நடக்கின்ற போதும் இந்த எண்ணிக்கையில் கணிசமான வித்தியாசங்கள் ஏற்படுகின்றன. மேற் சொன்ன உறுப்பினர்கள் தேர்தல் தொகுதிகள் ரீதியில் தெரிவு அமையுமாக இருந்தால் தெற்கில் எதிரணி உறுப்பினர்கள் எண்ணிக்கை சீரோ என்ற அளவில் வந்து நிற்கும். (சிறுபான்மை மக்கள் செரிவாக வாழ்கின்ற ஒரு சில தொகுதிகள் தவிர்த்து) மாவட்ட ரீதியிலும் தேசிய ரீதியிலும் இந்த நாடாளுமன்ற உறுப்புரிமை பகிரப்படுவதால் அவர்கள் இன்று இந்தளவு உறுப்பினர்களை பெற்றுக் கொள்ள முடிந்திருக்கின்றது. ஜே.ஆர். ஜெயவர்தனவின் 1978 அரசியல் யாப்பு வரும் வரை நாட்டில் தொகுதி அடிப்படையில் உறுப்பினர்கள் தெரிவாகினர். இதனால்தான் 1977ல் தமிழ் தரப்பினர் அப்பாக்குட்டி அமீர்தலிங்கம் தலைமையில் எதிர் கட்சித் தலைமையைக் கைப்பற்ற முடிந்தது. இது கூட கடும்போக்கு பேரினத்தாருக்கு ஒரு வலியை அன்று கொடுத்திருந்தது.
உள்ளூராட்சித் தேர்தலை முதலில் அறிவித்து பின்னர் அரசும் அதிகாரிகளும் அந்தத் தேர்தலை நடத்தாதம் தவிர்ப்பதற்கு தன்னாலான அனைத்து முயற்ச்சிகளையும் இன்றுவரை செய்து கொண்டிருக்கின்றது. இது பற்றி கடந்த காலங்களில் நாம் பக்கம் பக்கமாக நிறைய கதைகளைச் சொல்லி வந்தது அனைவரும் நன்கு அறிந்த செய்தி. தமக்கு வெற்றி வாய்ப்பில்லாத இந்தத் தேர்தலை அதிகாரத்தில் இருப்பவர்கள் தவிர்க்கின்றார்கள் என்பது இந்த நாட்டிலுள்ள சிறு குழந்தை கூட அறிந்து வைத்திருக்கின்ற விடயம்.
அதற்காக அரச அதிகாரிகள் சுதந்திர தேர்தல் ஆணைக்குழு பொலிஸ் தரப்பு மற்றும் முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நிதி அமைச்சின் அதிகாரிகள் என்று இன்னோரன்னோரை இவர்கள் பாவித்தார்கள் என்பதும் நாடு அறிந்த கதை. இப்போதும் தேர்தல் தொடர்பான வழக்குகள் நீதி மன்றில் இருக்கின்றது. எனவே உடனடியாக உள்ளூராட்சித் தேர்தலுக்கு வாய்ப்புக்கிடையாது.
அடுத்து மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக பார்ப்பதாக இருந்தால் ரஜிவ்-ஜேஆர். உடன்பாட்டில் அமுலுக்கு வந்த ஒரு அரசியல் அலகுதான் இது. வடக்கு கிழக்கு அதிகாரத்தை பகிர்ந்தால் தெற்க்கில் பேரினத்துக்கு அது ஒருவகை வலியைக் கொடுக்கும் என்பதால் இந்த அரசியல் அதிகாரம் தெற்க்கிலும் பிரயோகிக்கப்பட்டது. ஆனால் இன்று அது முற்றாக அமுலில் இல்லை. இதற்கு அடிப்படைக் காரணம் இந்த அதிகார அலகு விவகாரத்தில் தற்போது பதவியில் இருக்கின்ற மொட்டு கட்சியினர் தமது தேர்தல் பிரச்சாரக் காலத்தில் இந்த மாகாணசபைக்கு எதிராக மேற்கொண்ட கடும் பரப்புரையும் இன்று அதிகாரத்தில் இருப்போரின் அது தொடர்பான மனநிலையும் இதற்குக் காரணம் என்பது நமது வாதம்.
இடைக்கிடையில் இந்திய மற்றும் தமிழ் தரப்புக்களின் அழுத்தங்கள் காரணமாக மாகாணசபைத் தேர்தலை முதலில் நடத்த இருப்பதாக இப்போது பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றார்கள். இது வெரும் நாடகம். தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் இந்தியாவுக்கும் கூட இது விடயத்தில் பெரியளவில் ஆர்வமே அக்கரையோ கிடையாது. ஆனால் தமிழ் மக்களிடத்தில் தாம் இதற்காக அழுத்தம் கொடுப்பதாக இவர்கள் காட்டிக் கொள்ள முனைக்கின்றார்கள்.
மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக புதிய ஏற்பாடுகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. அதன்படிதான் தேர்தல் நடத்த வேண்டும். இதற்கு பெரும்பாலான கட்சிகள் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன. இந்த தடையை அரசு நினைத்தால் நாடாளுமன்றத்தில் ஒரு பிரேரணையைக் கொண்டு வந்து ஒரே நாளில் பழைய விகிதாசார முறையில் தேர்தலை நடாத்தலாம்.ஆனால் இந்தத் தேர்தலை நடத்தாமல் இருப்பது அல்லது காலம் கடத்துவது பேரின ஆட்சியாளர்களின் திட்டம். அதனை அவர்கள் முன்னெடுத்து வருகின்றார்கள்.
வடக்குக் கிழக்கில் முதலில் இத் தேர்தலை நடாத்துவது பற்றி அரசுக்கு ஒரு ஆலோசனை முன்வைக்கபட்டிருக்கின்றது. ஆனால் அப்பிரதேசங்களில் இருக்கின்ற சிறு தொகை பேரின வாக்காகாளர்களின் உணர்வு மூலம் தெற்க்கில் நடக்க இருக்கின்ற அரசியல் மாற்றத்தை இது வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து விடும் என்பதனால் ஆட்சியாளர்கள் இந்தத் தேர்தலையும் நடத்த மாட்டார்கள். அதனால்தான் வேறு தேர்தல்கள் பற்றி பேசுகின்றார்கள். அப்படியாக இருந்தால் இப்போது எஞ்சி இருப்பது பொதுத் தேர்தலும் ஜனாதிபதித் தேர்தலும்தான். முடியுமானால் இதனையும் ஏதேனும் வன்முறைகள் மூலம் அல்லது ஈஸ்டர் போன்ற ஒரு அக்கிரமத்தை மீண்டும் நாட்டில் உண்டு பண்ணி இந்தத் தேர்தல்களையும் தள்ளிப் போட நிறையவே இடமிருக்கின்றது என்பதுதான் எமது கணக்கு.
அதனால்தான் மீண்டும் இன மத வாதத்தை இவர்கள் நாட்டில் மீண்டும் உண்டு பண்ணி வருகின்றார்கள். ஆனால் இவர்களுக்கு மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை தொடர்ந்தும் கட்டிப் போட முடியாது. தேர்தல் ஒன்றுக்கு இவர்கள் எப்படியும் வந்துதான் ஆக வேண்டும். ஆனால் அது கடைசி நிமிடம் வரை பின்னுக்கு எடுத்துச் செல்லப்படும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம். எனவே ஊடகங்களும் அரசியவ்லாதிகளும் தேர்தல் பற்றி சொல்கின்ற கதைகளை மக்கள் நம்பி ஏமாறக் கூடாது.
இதில் முதலில் எந்தத் தேர்தலை நடாத்துவது என்பதில் ரணிலும் ராஜபக்ஸாக்களும் கடுமையாக யோசித்துத்தான் ஒரு தீர்மானத்துக்கு வருவார்கள். ஜனாதிபதி அதிகாரத்தை கையில் வைத்தக் கொண்டு ஒரு பொதுத் தேர்தலுக்கு ஆட்சியாளர்கள் வருகின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது இவர்கள் மத்தியில் புதிய அரசியல் கூட்டணிகள் தேவைப்படும். ராஜபக்ஸாக்கள் ரணில் போன்றவர்கள் ஓரணியில் இந்தத் தேர்தலை சந்திப்பதற்ககாத்தான் இப்போது ஏற்பாடுகள் நடந்து வருகின்றது.
தமக்கு சிங்கள சமூகத்தில் இருந்து பறிபோயள்ள வாக்குகளில் ஒரு தொகையை சஜித் அணியில் இருந்து பிடுங்கும் முயற்ச்சிகளும் தற்போது நடந்து வருகின்றது. ஆனால் இது வெற்றியளிக்கும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. ஆனால் ராஜபக்ஸ மொட்டு அணியில் இருந்த விலக்கிச் சென்னறிருக்கின்ற விமல், கம்மன்பில போன்றவர்கள் மீண்டும் மொட்டுக் கட்சிக்குள் இழுத்தெடுக்கும் முயற்ச்சிகளும் இப்போதும் நடந்து கொண்டிருக்கின்றன.
அதே நேரம் அப்படி ஒரு பொதுத் தேர்தல் நடக்குமாக இருந்தால் தெற்கில் வாக்காளர்கள் பிரதானமாக மூன்று அணிக்கு பிரிந்து தமது அரசியல் பலப்பரீட்சைகளை நடத்துவர்கள். ஆளும் மொட்டு அணி சஜித் தரப்பு அணுர தலைமையிலான அணியும் பிரதான போட்டியாளர்களாக இருப்பார்கள். தேர்தல் ஒன்றுக்கத் தேவையான பணப் பலம் ராஜபக்ஸாக்களிடம் போதியளவு இருக்கின்றது. அத்துடன் கடும் போக்குள்ள ஒரு அரசியல் இயக்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு சம்பிரதாய அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஊழலுக்குப் பழகி இருக்கின்ற தரப்பினர், போதை வியாபாரிகள், மோசடி வர்த்தகர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். இது அதிகாரத்தில் இருப்போருக்கு தேர்தலில் வாய்ப்பான ஒரு நிலை.
ஜனாதிபதித் தேர்தல்தான் முதலில் வருகின்றது என்று வைத்தக் கொள்ளுங்கள். இன்று ரணில்தான் ஆளும் தரப்பு ஜனாதிபதி வேட்பாளர் என்று சில தரப்புக்களால் உச்சிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் நாம் அடித்துச் கூறுகின்றோம் மொட்டுக் கட்சி அல்லது ராஜபக்ஸ தரப்பில் ரணில் ஒருபோதும் ஜனாதிபதி வேட்பாளராக வர வாய்ப்பே கிடையாது. இதனை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். சரி ரணில் ஏதோவகையில் வேட்பாளராக வருகின்றார் என்று வைத்துக் கொள்ளுங்கள், முதல் மூன்று இடத்தில் அவர் வர வாய்ப்பில்லை. ராஜபக்ஸாக்கள் அல்லது மொட்டுத் தரப்பில் வருபவர் ரணிலை விட மிக அதிகளவு வாக்குகளைப் பெற்றுக் கொள்வார். ரணில் வேட்பாளர் என்ற கதை ஒரு நாடகம் மட்டுமே. இதற்கிடையில் ஜனக்க ரத்நாயக்கவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டிக்கு வருவதாக கூறி இருக்கின்றார். நிச்சயமாக அவர் மூக்குடைபடுவார் என்பது நமது கருத்து.
எந்தத் தேர்தலாக இருந்தாலும் அணுரகுமார அணி நல்ல சவலைக் கொடுப்பார்கள். காலமும் நேரமும் சில வேளைகளில் அதிரடித் திருப்புமுனைகளும் களத்தில் மாற்றங்களைக் கொண்டுவரலாம். ஆனால் அதில் பெரும் தாக்கங்களை எதிர்பார்க்க முடியாது. சதிகளும் வன்முறைகளும் பணமும் மக்களிடத்தில் மனமாற்றங்களை ஏற்படுத்த ஓரளவுக்கு வாய்ப்பிருக்கின்றது.
நன்றி:28.05.2023 ஞாயிறு தினக்குரல்