-யூசுப் என் யூனுஸ்-
முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்ற மிகப் பெரிய நாடானா இந்தோனேசியாவில் முதல் முறையாக மிஸ் யுனிவர்ஸ் போட்டி சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. இது நமது செய்தியல்ல. இந்தப் போட்டியில் பங்கு கொண்ட ஆறு போட்டியாளர்கள் போட்டி ஒழுங்கு விதிகளுக்கு முரணாக அங்கு நடந்த பாலியல் கெடுபிடிகள் தொடர்பான முறைப்பாடுகளை பொலிசில் பதிந்திருக்கின்றார்கள்.
இந்தத் தகவல்களை வெளியிட்டிருப்பவர்கள் போட்டியாளர்களின் வழக்கறிஞர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டிகள் கடந்த ஜூலை 29 முதல் ஆகஸ்ட் மூன்றாம் திகதிவரை அங்கு நடந்தது. மொத்தமாக 30 போட்டியாளர்கள் இந்தப் போட்டியில் பங்கு கொண்டிருந்தனர்.
மேலாடையின்றி புகைப்படங்கள் எடுக்கப்பட்டதோடு, அந்தக் காட்சிகளை அங்கிருந்த பல ஆண்களும் பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அத்துடன் உடல் பரிசோதனை என்று சொல்லி பாலியல் சீண்டல்களும் நடந்ததாக அவர்கள் தமது புகாரில் மேலும் தெரிவிக்கின்றனர்.
‘பெண்களுக்கு அதிகாரமளித்தல்’ என்ற தொனிப் பொருளில் இந்தப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முறைப்பாடுகள் தொடர்பில் தற்போது விசாரணைகள் முடக்கிவிடப்பட்டிருக்கின்றன.