வளர்ப்பு மகள்களைப் பாலியல் வன்கொடுமை செய்த மலேசியாவைச் சேர்ந்த 35 வயது நபருக்கு மொத்தம் 104 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், 18 பிரம்படிகள் கொடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மலேசியா நாட்டின் சிபு நகரின் ஜாலான் சலிம் பகுதியில் வசிக்கும் 15 வயது மற்றும் 16 வயது நிரம்பிய இரு பெண் குழந்தைகளை, அவர்களது வளர்ப்புத் தந்தையே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
தங்களது வீட்டில் தங்களுக்குப் பாலியல் கொடுமை இழைக்கப்பட்டதாக 15 வயது மற்றும் 16 வயது நிரம்பிய இரு பெண்களும் தங்களது தாயிடம் கூறினர்.

வளர்ப்புத் தந்தை, கடந்த 2020ஆம் ஆண்டு முதல் தங்களைப் பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகவும் அவர்கள் முறையிட்டனர்.
கடந்த அக்டோபர் 25ஆம் தேதி இது குறித்து புகார் செய்யப்பட்டு, மறுநாள் மாலை 4.25 மணியளவில் அந்த நபர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், தம் மீது சுமத்தப்பட்ட ஒன்பது குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட அவர், மீண்டும் அத்தகைய குற்றத்தில் ஈடுபட மாட்டேன் என்றும் அதனால் தமக்குக் கருணை காட்டுமாறும் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார். குற்றவாளி விடுத்த வேண்டுகோளை நீதிமன்றம் நிராகரித்தது.
அவருக்கு எதிராகக் கடுமையான தண்டனைகளை நீதிபதி முஸ்யீரி பீட் விதித்தார். வளர்ப்பு மகள்களைப் பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு மொத்தம் 104 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும், 18 பிரம்படிகள் கொடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண்களின் அடையாளத்தைக் காக்கும் பொருட்டு அந்த நபரைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.





