இஸ்ரேல் ஈரான் இடையே கடந்த 12 நாட்களாக மோதல் தொடர்ந்து வந்தது. இந்த போர் முடிவுக்கு வந்ததாக டிரம்ப் அறிவித்திருந்தார். இருப்பினும், முதலில் அதை ஈரான் திட்டவட்டமாக மறுத்தே இருந்தது.

இந்தச் சூழலில் திடீரென ஈரான், போர் முடிவுக்கு வந்ததாகக் கூறியிருக்கிறது. அங்கு என்ன நடந்தது.. இதன் பின்னணி குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இஸ்ரேல் ஈரான் இடையே கடந்த 12 நாட்களாகவே மோதல் தொடர்ந்து வந்தது. ஒரு பக்கம் இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது. மறுபுறம் ஈரானும் அதற்குப் பதிலடி கொடுத்தது.
இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை ஈரானின் அணு சக்தி நிலையங்களைக் குறிவைத்து அமெரிக்கா தாக்கியதும் நிலைமை மோசமானது.
இதற்குப் பதிலடியாக கத்தாரில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் உலகப் போரே வெடிக்கும் ஆபத்து ஏற்பட்டது.

டிரம்ப் அறிவிப்பு
இதற்கிடையே திடீரென ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் எற்பட்டதாகத் தகவல் வெளியானது. அமெரிக்க அதிபரான டிரம்ப் இதை அறிவித்திருந்தார். ஆனால், அதை ஈரான் முதலில் மறுத்திருந்தது.
போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் அமெரிக்காவிடமிருந்து எந்தவிதமான போர் நிறுத்த முன்மொழிவையும் ஈரான் பெறவில்லை என்று கூறியிருந்தது.. மறுபுறம் போர் நிறுத்தம் குறித்து இஸ்ரேல் தொடர்ந்து மவுனம் காத்தே வருகிறது.
முதலில் மறுத்த ஈரான்
போர் நிறுத்தம் வந்துவிட்டதாக டிரம்ப் கூறிய உடனேயே முதலில் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி அதை மறுத்திருந்தார். இப்போதைக்கு எந்த உடன்பாடும் இல்லை என்றே அவர் கூறியிருந்தார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், “”இப்போதைக்கு, எந்தவிதமான போர் நிறுத்தம் அல்லது உடன்படிக்கையும் இல்லை. இருப்பினும், ஈரான் மக்களுக்கு எதிரான நடவடிக்கையை இஸ்ரேல் நிறுத்தினால் அதன் பிறகு எங்கள் நடவடிக்கைகளைத் தொடரும் எண்ணம் இல்லை.
எங்கள் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும்” என்றே கூறியிருந்தார்.
ஒரு பக்கம் டிரம்ப் போர் நிறுத்தம் வந்துவிட்டதாகக் கூறியிருந்த நிலையில், அதற்கு நேர் மாறாக ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் இந்த ட்வீட் இருந்தது. இதனால் போர் முடிந்துவிட்டதா.. இல்லை தொடருமா என்பதில் தெளிவு இல்லாமல் குழப்பமே நீடித்து வந்தது.
இதற்கிடையே ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் மீண்டும் ஒரு ட்வீட்டை போட்டார். அதில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துவிட்டதாகக் கூறியிருந்தார்.

எங்கள் படைக்கு நன்றி-ஈரான்
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், “இஸ்ரேலைத் தாக்குதலைத் தடுக்கும் வகையில் எங்கள் சக்திவாய்ந்த ஆயுதப் படைகளின் தாக்குதல் (உள்ளூர் நேரப்படி) அதிகாலை 4 மணி வரை தொடர்ந்தன.
ஈரான் மக்கள் சார்பில் எங்கள் ஆயுதப் படைக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர்கள் எங்கள் நாட்டைக் காப்பாற்றத் தயாராக இருக்கிறார்கள். மேலும் எதிரியின் எந்த தாக்குதலுக்கும் கடைசி நிமிடம் வரை பதிலளித்தனர்” என்று அராக்சி பதிவிட்டார்.
இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு உடன்படுவதாக இஸ்ரேல் அதிகாரிகள் கூறியிருந்தாலும், இஸ்ரேல் அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பும் வரவில்லை. ஈரான் தனது ஏவுகணை தாக்குதல்களை நிறுத்தினால்..
டிரம்ப்பின் போர் நிறுத்தத் திட்டத்திற்குப் பிரதமர் நெதன்யாகு உடன்படுவதாக இஸ்ரேல் அதிகாரிகள் கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் கூறியுள்ளன. மறுபுறம் டிரம்ப்பின் அறிக்கை குறித்து இஸ்ரேல் ராணுவம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

அதிபர் டிரம்ப்
முன்னதாக 10 நாட்களுக்கு மேலாக நீடித்த இஸ்ரேல் ஈரான் மோதல் முடிவுக்கு வருவதாக டிரம்ப் கூறியிருந்தார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், “இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே ஒரு முழுமையான மற்றும் மொத்த போர் நிறுத்தம் அடுத்த 12 மணி நேரத்தில் அமலுக்கு வரும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
அதன் பிறகு போர் முடிவுக்கு வந்ததாகக் கருதப்படும்! அதிகாரப்பூர்வமாக, ஈரான் மற்றும் இஸ்ரேல் போர் நிறுத்தத்தைத் தொடங்கும்.. 12 நாள் போர் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்ததை உலக நாடுகள் வாழ்த்தும்” என்று பதிவிட்டுள்ளார்.





