இஸ்ரேலுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே தெரிவித்துள்ளது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
அதற்குப் பதிலாக, ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிகாத் ஆகியோரின் பிணையில் உள்ள 50 முதல் 100 பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் எனவும் கூறப்படுகிறது. இதில் ராணுவ வீரர்களை வெளியேற்ற வாய்பில்லை எனத் தெரிகிறது. இந்த நிலையில், பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே விரைவில் உடன்பாடு ஏற்படும் என நேற்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னணி என்ன?
இஸ்ரேல் நாட்டின் மீது அக்டோபர் 7-ம் தேதியன்று பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழு திடீர் தாக்குதலைத் நடத்தியது. அதைத் தொடர்ந்து இஸ்ரேலும் தொடர்ந்து தன்னுடைய எதிர்த் தாக்குதலை நடந்தி வருகிறது. இந்த மோதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த நிலையில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் உலக நாடுகள் இரண்டாகப் பிரிந்து கிடக்கின்றன.
இதற்கிடையே போரை நிறுத்தி காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் செய்ய இந்தியா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முன்வந்தன. ஆனால், பிணைக்கைதிகளை விடுவிக்கும் வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என் இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு இன்னும் நிரந்தர முடிவு எட்டப்படவில்லை. இந்தத் தாக்குதல்களில் இஸ்ரேலில் ஏறத்தாழ 1,200 பேர் கொல்லப்பட்டனர். 239 பேரை காசா பகுதிக்குள் கடத்திச் சென்றனர். இதனால், இஸ்ரேல் ராணுவம் காசாவின் வட பகுதியில் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டது. கடந்த 40 நாட்களுக்கும் மேலாக நடந்த தாக்குதலில் காசாவில் 13,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
சண்டை நிறுத்த ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது?
ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே சாத்தியமான சண்டை நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தத்தில் உள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏ.எஃப்.பி. செய்தி முகமை செய்தியின் படி, தற்காலிக சண்டை நிறுத்த ஒப்பந்தத்தில், ஐந்து நாள் சண்டை நிறுத்தம் செய்வதற்கான ஷரத்துகள் உள்ளதாக தெரியவந்துள்ளது.
“ஐந்து நாள் முழுமையான சண்டை நிறுத்தம், தரைச் சண்டையில் போர் நிறுத்தம் மற்றும் தெற்கு காஸா மீது இஸ்ரேலிய வான் வழி தாக்குதல் நிறுத்தம் உள்ளிட்டவை அடங்கும்,” என அந்த செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், “பாலத்தீன ஆயுதக்குழுவினரிடம் உள்ள 200க்கும் மேற்பப்ட பணயக்கைதிகளில், இஸ்ரேலிய ராணுவ வீரர்களைத் தவிர ஹமாஸ் ஆயுதக்குழுவினர் 50-100 இஸ்ரேலிய குடிமக்கள் அல்லது பிற நாட்டைச் சேர்ந்த குடிக்களை விடுவிப்பார்கள். அதற்குப் பதிலாக, இஸ்ரேல் சிறையில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 300 பாலத்தீனர்கள் விடுக்கப்படுவார்கள்,” என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஏ.எஃப்.பி. செய்தி முகமை வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், இந்த தகவல் அனைத்தும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மற்றும் இஸ்லாமிய ஜிகாத் குழுவின் அதிகாரிகளை வழங்கியதாக மேற்கோள் காட்டியது.
இதைத் தவிர, அல் ஜசீரா செய்தி நிறுவனத்திடம் பேசிய ஹமாஸ் ஆயுதக்குழுவைச் சேர்ந்த இஸாட் இல் ரெசிக்,“இந்த போர் நிறுத்த காலம், காஸாவிற்கு உதவிகள் வழங்கவும், பாலத்தீன கைதிகள் மற்றும் இஸ்ரேலிய பணயக்கைதிகளை பரிமாற்றம் செய்வதையும் மையமாகக் கொண்டுள்ளன. இதில், இரு தரப்பிலும் உள்ள பெண்களும், குழ்தைகளும் விடுவிக்கப்படுவார்கள்,”என்றார்.
ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே நடக்கும் இந்தப் பேச்சுவார்த்தை தொடர்பான தகவல்களை மத்தியஸ்தராக உள்ள கத்தார் அறிவிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இஸ்ரேல் என்ன சொல்கிறது?
சாத்தியமான போர் நிறுத்த ஒப்பந்தம் பற்றி கத்தாரில் இருந்து வெளிவரும் நேர்மறையான சமிக்ஞைகள் அமெரிக்கா வெளிப்படுத்தும் உணர்வுகளை ஒத்து இருக்கிறது.
கத்தார் தலைநகரில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவரை சந்தித்துவிட்டு வந்த பின்னர், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
கடந்த மாதம் ஹமாஸ் ஆயுதக்குழுவினரிடம் பணயக்கைதிகளாக இருந்த நான்கு பேரை விடுவிக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உதவியது.
இந்த தற்காலிக சண்டை நிறுத்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, காஸா பகுதிக்கு உதவிகள் அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இந்த தற்காலிக சண்டை நிறுத்த ஒப்பந்தம் மற்றும் பேச்சு வார்த்தை தொடர்பாக இஸ்ரேல் இதுவரையில் எந்த பதிலும் கூறவில்லை.
இஸ்ரேலிய இராஜதந்திரிகள், இந்த வார இறுதியில் கணிசமான எண்ணிக்கையிலான பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று நம்புகிறார்கள்.
கடத்தப்பட்டவர்களின் சில குடும்பங்கள் நேற்றிரவு டெல் அவிவில் இஸ்ரேலிய போர் அமைச்சரவையை சந்தித்த பின்னர் கோபத்தை வெளிப்படுத்தினர். ஹமாஸை அழிக்கும் பணியை விட தங்கள் அன்புக்குரியவர்களை மீட்டெடுப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வாதிட்டனர்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு, எதிரி எந்த அளவுக்கு வலுவிழக்கச் செய்யப்படுகிறாரோ, அந்த அளவுக்கு பணயக்கைதிகளை வீட்டிற்கு அழைத்து வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனக் கூறினார்.
அமெரிக்க அதிபர் என்ன சொல்கிறார்?
இந்த தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் கருத்து தெரிவித்துள்ளார்.
நேற்று நடந்த ஒரு விழாவில், போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவடையும் நிலையில் உள்ளதா என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் கேட்டபோது, அவர் தனது விரல்களைக் மடக்கிக் காண்பித்து, “நான் அப்படித்தான் நம்புகிறேன்,”எனக் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அதிகாரியான ஜோன் ஃபைனர், “முன் எப்போதும் இல்லாத வகையில், இந்த முறை பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இருக்கிறது,”எனக் கூறினார்.
இதற்கிடையில், ஹமாஸ் ஆயுதக்குழுவினரிடம் உள்ள பணயக்கைதிகளை திரும்ப அழைத்து வரும் இலக்கு எட்டக்கூடிய தூரத்தில் இருப்பதாக கடந்த வார இறுதியில் கத்தார் கூறியிருந்தது.
ஹமாஸால் கடத்தப்பட்டவர்கள் யார்?
ஹமாஸ் ஆயுதக்குழுவினர் சுமார் 240 பேரை பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக கருதப்படுகிறது.
பணயக்கைதிகள், காஸாவில் உள்ள பாதுகாப்பான இடங்கள் மற்றும் சுரங்கங்களில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக ஹமாஸ் கூறுகிறது. பணயக்கைதிகளில், 20 குழந்தைகளும், 10 முதல் 20 வயதிற்குற்பட்டவர்கள் 60 பேரும் உள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
“சிலர் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பணயக்கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர், சிலர் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை காணவில்லை, அதனால், அவர்கள் கடத்திச் செல்லப்பட்டிருக்கலாம் என நம்புவதாகக் கூறுகிறார்ககள்,” இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
சர்வதேச குழந்தைகள் நல அமைப்பான யூனிசெஃப்(UNICEF), இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இடையே ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் வந்தால் அதனை வரவேற்பதாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அமைப்பின் இயக்குனர் டோபி கூறுகையில்,“பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏஜென்சி வரவேற்கும்,” என்றார்.
ஜோர்டானின் அம்மான் நகரில் இருந்து பிபிசியிடம் பேசிய டோபி, “உடனடி மனிதாபிமான போர் நிறுத்தத்திற்கு யுனிசெஃப் மற்றும் பலர் அழைப்பு விடுத்திருந்தோம். அப்படி அது நடந்தால், எங்களால் முடிந்தவரை விரைவாக பொருட்களை கொண்டு சென்று, அவற்றை தங்குமிடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.
காஸா பகுதியின் உள்ளே அவர்கள் எங்கிருந்தாலும், எங்கு தேவைப்படுகிறாதோ, எல்லா இடங்களிலும் இருக்கும் மக்களுக்கு உதவிகள் சென்று சேர ஏற்பாடுகள் செய்வோம்.
குளிர்காலத்தில் நோய்கள் பரவுவதைப் பொறுத்தவரை உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் “மற்றொரு பேரழிவை” தடுப்பதற்கும் இந்த உதவி முக்கியமானது,” என்றார்.