-நஜீப் பின் கபூர்-
அரசுக்குள் பிளவு இணைவு தீர்மானங்கள் என்ற பலதரப்பட்ட விவகாரங்கள் தொடர்ப்பில் இந்த வாரம் ஒரு பார்வையைச் செலுத்தலாம் என்று எதிர்பார்க்கின்றோம். இந்த நாட்டிலுள்ள ஆட்சியாளர்கள் எதிரணி அரசியல்வாதிகள் அனைவரினதும் செயல்பாடுகள் இன்று ஒரே குழப்பகரமானதாகவும் முன்னுக்குப் பின் முரனானதாகவுமே பெரும்பாலும் இருந்து வருவதை அவதானிக்க முடிகின்றது.
நாட்டு மக்களின் மிகப் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று அதிகாரத்துக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ஸ பொது மக்களால் பதவியில் இருந்து விரட்டடியக்கப்பட்டு இன்று (2023 மே 9) ஒரு வருடங்கள் பூர்த்தியடைந்திருக்கின்றது. இதுவரை தலைமறைவாக இருந்து வந்த அவர் இப்போதுதான் சில தனிப்பட்ட நிகழ்வுகளில் தலை நீட்டுவதை அவதானிக்க முடிகின்றது.
கோட்டா வெளியேற்றத்துடன் அந்த இடத்தை தமக்குப் பாதுகாப்பாக வைத்து நிரப்புவதற்காக ராஜபக்ஸாக்கள் ரணிலை ஜனாதிபதியாகக் கொண்டு வந்து மொட்டுக் கட்சியில் தமக்கு இருக்கின்ற பெரும்பான்மையை வைத்து இன்று வரை அவருக்கு தமது ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றார்கள். ரணில்-ராஜபக்ஸாக்கள் இன்றுவரை புரிதலுடன் அல்லது தவிர்க்க முடியாத நிலையில் அந்த உறவை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் அவர்களது பயணம் தொடர்கின்றது. இந்த விவகாரங்கள் தொடர்பாக சற்று விரிவாக இப்போது பார்ப்போம்.
நாடாளுமன்றத்தில் ராஜபக்ஸாக்களின் மொட்டுக் கட்சிக்கு 120-130 வரையிலான உறுப்பினர்கள் ஒத்துழைப்பு இருந்து வருகின்றது. ஐதேக.வுக்கு இருப்பது ஒரே ஒரு ஆசனம். தற்போது அதிகாரத்தில் இருக்கின்ற ரணிலும் ராஜபக்ஸாக்களும் தமக்குள் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதால் அதனை நாடாளுமனறத்தில் வைத்து பகிர்ந்து கொள்ளும் வாய்ப்புக்கள் ரணிலுக்குக் கிடையாது. அமைச்சரவை மாற்றத்தின் போது ஐதேக. வஜிர அபே வர்தனாவுக்கு நிச்சயம் செல்வாக்கான ஒரு அமைச்சு வழங்கப்படுவது உறுதி. இது தவிர தனது கட்சியில் இருக்கின்ற முக்கியஸ்தர்களான கட்சி செயலாளர் ரங்கே பண்டார நவின் திசாநாயக்க அகில விராஜ் தயா கமகே போன்றவர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கி அவர்களைக் கௌரவிக்க வேண்டு இருக்கின்றது. இதனால் ஐதேகாவில் இவர்கள் ஆளுநராக வர வாய்ப்புக்கள் அதிகம்.
இது முற்றிலும் அந்த கட்சி நலன்சார்ந்த விவகாரமே தவிர இதில் பொது மக்களுக்கு எந்த நன்மைகளும் கிடைக்கப் போவதில்லை. இதற்காக தற்போது ஆளுநர் பதவியில் இருக்கின்ற பலருக்கு தமது பதவிகளில் இருந்து வெளியேற வேண்டி ஏற்பட்டிருக்கின்றது. இந்த நியமனங்கள் விரைவாக நடக்கும் என்று எதிர்பார்க்க முடியும். அதே நேரம் தற்போது ஜனாதிபதி ரணிலிடத்தில் ஏதாவது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதாக இருந்தால் அதற்கு அவரது அதிகாரிகளான சாகல, ருவன், ரங்கே பண்டார, அகில போன்றவர்களின் பின்னால் ஆளும் மொட்டுக் கட்சி முக்கியஸ்தர்கள் காலம் முழுதும் ஓடித்திரிகின்ற காட்சிகளை நாம் இப்போது பார்த்து வருகின்றோம். இதனை அவர்கள் பகிரங்கமாகவும் பேசி வருவதுடன் தமது தலைவர்களான மஹிந்த பசில் போன்றவர்களிடத்தில் பலமுறை முறைப்பாடுகளும் கொடுத்தும் இருக்கின்றார்கள்.
புதிதாக நடக்க இருப்தாகச் சொல்லப்படுகின்ற அமைச்சரவை மாற்றத்தை செய்து கொள்வதில் ரணில் மற்றும் ராஜபக்ஸாக்களிடத்தில் இன்னும் இறுதித் தீர்மானங்களுக்கு வர முடியாத ஒரு நிலை இருந்து வருகின்றது. இதில் மஹிந்த மற்றும் பசில் ரணிலிடம் பத்துப்பேர் அடங்கிய ஒரு பட்டியலைக் கொடுத்திருக்கின்றார்கள். அதில் முன்னாள் மொட்டு முக்கியஸ்தர்களான ஜொன்ஸ்டன், மஹிந்தானந்த, ரோஹித்த, எஸ்.பி, எஸ்.எம். போன்றவர்களின் பெயர்கள் உள்ளடக்கபட்டிருக்கின்றது. அதே நேரம் ரணிலுக்கு விசுவாசமாக சஜித் அணியில் செயலாற்றுகின்ற குறைந்தது ஆறு பேர்வரை இதில் உள்வாங்கிக் கொள்ள ஜனாதிபதி எதிர்பார்க்கின்றார்.
இதுதவிர ஹக்கீம் மனோ வடிவேலு போன்றவர்களுக்கும் ஏதாவது கொடுத்து தன்னுடன் வைத்திருக்க ஜனாதிபதி விரும்புக்கின்றார். இதிலுள்ள நெருக்கடி என்னவென்றார் எதிரணியில் பெரும் எண்ணிக்கையானவர்களுக்கு அதிகாரம் மிக்க பதவிகளைக் கையளிக்கின்ற போது இன்று வரை தன்னுடன் இருக்கும் பலருக்கு ஏதாவது அமைச்சுக்கள் வழங்கப்படாது போனால் ஆளும் தரப்புக்குள் பிளவுகள் தேன்றி அது ஆட்சிக்கு உலைவைத்து விடும் என்ற அச்சம் ரணிலுக்கும் ராஜபக்ஸாக்களுக்கும் இருக்கின்றது. ராஜபக்ஸாக்களின் வாரிசு நாமலுக்கு அமைச்சுப் பதவி பற்றி ஏதும் செய்திகள் சந்திக்கு வரா விட்டாலும் அது முன்கூட்டி ரிசோவ் பண்ணப்பட்ட நிலையில்தான் இருக்கின்றது என்று நமக்கு வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டப்படி தமக்கு இன்னும் இருக்கின்ற காலத்தை ஓட்டிக் கொள்ள ரணிலும் ராஜபக்ஸாக்களும் கடும் முயற்ச்சிகளை எடுத்து வருக்கின்றனர். எனவேதான் இந்த புதிய பதவிகளைக் கொடுப்பதால் வருகின்ற சிக்கல்கள் பற்றி அவர்கள் திரும்பத் திரும்ப யோசிக்கின்றார்கள். அதே நேரம் தனது கட்சியில் இருந்து எவருமே ஆளும் தரப்புக்கு போக மாட்டார்கள் என்று இதுவரை சொல்லிக் கொண்டிருந்த சஜித் இப்போது எனது கதவுகள் திறந்துதான் இருக்கின்றது. விரும்பியவர்கள் போகலாம் வரலாம் என்று மஹிந்தவின் சலூன் கதவுப் பாணியில் அவரும் பேசத் துவங்கி இருக்கின்றார். இது ஏன் என்று புரிந்து கொள்ளக் கூடியதே. தனது கட்சி உறுப்பினர் செயல்பாடுகளில் இப்போது சஜித் உச்ச கட்ட வெறுப்பு நிலையில் இருக்கின்றார்.
தனக்கு விசுவாசமான ஒரு சிறுபான்மைத் தலைவரிடம் பேசும் போது, போவது என்று முடிவு எடுத்து காய் நகர்த்துபவர்களிடத்தில் நாம் என்னதான் பணிந்த பேசினாலும் அவர்கள் நமது நியாயங்களைக் கண்டு கொள்ள மாட்டார்கள். யாரிடம் கேட்டு ரணிலுடன் பேசப் போய் அந்த செய்திகளை என்ன முகத்துடன் என்னிடத்தில் எடுத்து வந்தார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பி இருக்கின்றார். நமக்கு அதிகாரம் வருகின்ற போது நான் இதற்கு பதில் கொடுப்பேன் என்று சிலரது பெயர்களைக் குறிப்பிட்ட அந்த நபரிடம் சஜித் பேசி இருக்கின்றார். இதில் மலையகத் தலைவர் ஒருவரின் பெயரையும் முஸ்லிம் தனித்துவத் தலைவர் ஒருவரின் நடவடிக்கைகள் குறித்து சஜித் கடும் கோபத்தில் இருப்பது தெரிகின்றது. சமகால அரசியலில் ஆளும் எதிரணித் தரப்பினர் தீர்மானங்களை மேற்கொள்வதில் பெரும் நெருக்கடி நிலையில் இருப்பதனை அவதானிக்க முடிகின்றது.
இப்போது ஆளும் தரப்பினர் குறிப்பாக ஜனாதிபதியும் மறைமுகமாக அதிகாரத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்ற ராஜபக்ஸாக்களும் சர்வதே அரங்கிலும் இந்தியாவிலும் உள்நாட்டிலும் எதிர் நோக்கி வருகின்ற சவால்கள் பற்றி இப்போது சற்றுப் பார்ப்போம். இதுவரை சீனாவின் தயவில்தான் தமது பிழைப்பே இருக்கின்றது என்று அதிகாரத்தில் இருந்த ராஜபக்ஸாக்கள் விரட்டியடிக்கப்பட்டதால், இப்போது பீஜிங்-கொழும்பு உறவில் ஒரு மந்த நிலை அல்லது உறக்க நிலை தெரிகின்றது. அதே நேரம் ரணில் வரவுடன் ஏற்பட்ட மேற்கத்திய உறவும் யார் அதிகாரத்துக்கு வந்தாலும் தவிர்க்க முடியாத இந்தியாவுடனான உறவு விவகாரத்தில் வழக்கம் போல கொழும்பு பெரும் ஏமாற்று நாடத்தையே ரணில்-ராஜபக்ஸ ஆட்சி காலத்திலும் வழக்கம் போல இன்றும் நடாத்திக் கொண்டிருக்கின்றது.
முதலில் சர்வதேசத்துடன் இலங்கை அரசாங்கத்தின் உறவுகள் தனக்குத் தேவையாக விவகாரங்களில் குறிப்பாக கடன்கள் வெளிநாட்டு உதவிகள் விவகாரத்தில் மட்டும் ஆர்வமாக இருக்கின்ற ஆட்சியாளர்கள் அதே நேரம் மனித உரிமைகள் பொது மக்களின் அடிப்படை உரிமைகள் விவகாரங்களில் இதே சர்வதேச சமூகத்தை இலங்கை அரசாங்கம் பயங்கரவாத அமைப்புக்களாகவும் அதன் நிருவாகிகளைப் பயங்கரவாதிகள் என்ற தோரணையிலும்தான் பார்த்து வருகின்றது.
இது ஆட்சியாளர்களின் இரட்டை வேடம் என்பது எமது வாதம். இப்போது நமக்குக் கடன் கொடுத்திருக்கின்றவர்களும் கொடுக்க இருப்பவர்களும் ஒரு மதிப்பீட்டுக்காக இங்கு வருகை தந்திருக்கின்ற நேரத்தில் அரசு வழக்கம் போல கடன் பொருளாதர நலன்கள் விவகாரத்தில் மட்டுமே கூடிய ஆர்வத்துடன் காரியம் பார்க்கும். மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் இனப்பிரச்சனை விவகாரங்கள் என்பன தொடர்பான கொடுக்கல் வாங்கல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாகவும் இரு தரப்பு பொறுப்புக்களும் கடமைகளும் உரிய விதத்தில் பேணப்பட வேண்டும் என்பது நமது வேண்டுகோளாக இருக்கின்றது.
இப்போது இந்தியாவுடன் இலங்கை உறவுகள் கொடுக்கல் வாங்கல் பாற்றி சற்றுப் பார்ப்போம். இனப் பிரச்சினையுடன் அல்லது போருக்கு பின்னரான இலங்கை இந்திய அரசியலில் ரஜிவ்-ஜேஆர் உடன்பாடு ஒரு திருப்பு முனையாக அமையும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. அந்த விவகாரத்தில் இலங்கை இந்தியாவை ஏமாற்றி விட்டது அல்லது வஞ்சித்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். உடன்படிக்கை நியாயமானதே அநீயாயமாதே என்பதனை விட வாக்குறுதிகள் மீறப்பட்டு விட்டது. இன்று அதே உடன்படிக்கையை வைத்து இந்தியாவை இலங்கை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது.
இதில் முன்னேற்றம் இன்மையால் அதிகாரத்துக்கு வந்த இந்தியா தலைவர்கள் எல்லோரும் இரஜதந்திர ரீதியில் இலங்கையிடம் தோற்றுப் போய் விட்டார்கள். இந்த நிலையில் தற்போதய ஜனாதிபதி ரணில் இந்தியாவுக்கு விஜயம் செய்ய இருக்கின்ற இந்த நாட்களில் மீண்டும் திசம்பருக்குள் இனப் பிரச்சனைக்கு தீர்வு என்று பழைய கதையை மீண்டும் மீண்டும் ரணில் உச்சரித்து வருவது ஒரு கபட நடாகம.; தனக்கு எஞ்சி இருக்கின்ற காலத்தைக் கடத்திக் கொள்ளத்தான் இந்த தீர்வுக் கதையை அவர் திரும்பவும் பேசி அதன் மூலம் இந்திய ஆட்சியாளர்கள் ஒத்துழைப்பை எதிர்பார்த்து வருகின்றார். இதனால் இந்தியாவும் ஈழத் தமிழர்களும் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்பட இருக்கின்றார்கள். எனவே ஜனாதிபதி தமிழ் அரசியல் தலைவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்திருப்பது இந்தியாவின் கவனத்தை திசை திருப்பும் ஒரு முயற்சி.
தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பதிலாக முதலில் நடக்கப் போவது மாகாணசபைத் தேர்தல் என்ற ஒரு கதையை அதிகாரத்தில் இருக்கின்ற ரணில் தரப்பினர் கட்டவிழத்து விட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதுவும் ரணில் இந்திய விஜயத்தை முன்னிட்டு மேற் கொள்ளப்படுக்கின்ற ஒரு பிரச்சார நடவடிக்கை மட்டுமே என்பது எமது உறுதியான நம்பிக்கையாகும். இந்தியாவும் இலங்கை தமிழ் அரசியல் தலைவர்களும் வழக்கம் போல இந்த முறையும் அப்பாவித் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு மீணடும் ஒரு முயற்சிதான் தற்போது இந்த ரணில்-தமிழ் தரப்பு பேச்சுவார்த்தைகளில் நாம் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.
ஒட்டு மொத்தமாக தற்போது ஆட்சியாளர்கள் தமது இருப்பை முடியுமான மட்டும் நீடித்துக் கொண்டு செல்வதற்கான சதி வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அதற்கான சர்வதேச உதவிகள் இந்திய ஒத்துழைப்புக்களை எப்படி எல்லாம் பெற்றுக் கொள்ள முடியும் என்ற தோடல்களில்தான் அவர்கள் இறங்கி இருக்கின்றார்கள். அதற்காக ஆளும் தரப்புக்கு உதவுவதற்கு நிறையவே ஊடகங்களும் உடகவியாபாரிகளும் தயாராகவே இருக்கின்றார்கள்.
இதற்காக மக்களின் பொருளாதார ரீதியிலான பலயீனங்களை ஆட்சியாளர்கள் வரிய குடும்பங்களுக்கு சோளப் பொரி வழங்கும் முயற்ச்சிகளில் தற்போது இறங்கி இருக்கின்றார்கள். இதற்க்காக மாதம் பத்துக் கிலோ இலவச அரிசி மேலும் மாதம் 2500, 5000, 10000. 15000 ரூபா என்று கொடுப்பனவுகள் என்றும் தற்போது பேசப்பட்டு வருகின்றது. அது தொடர்பான தகவல்கள் தற்போது திரட்டப்பட்டு வருகின்றது. மேலும் எரிபொருள் தட்டுப்பாடு அத்தியவசிய உணவுப் பொருட்களின் ஒரு சின்ன விலை இறக்கம். என்பன மீண்டும் ஆட்சியாளர்கள் தமது இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் ஏற்பாடுகளாக இருக்கின்றன.
இந்த பின்னணியில் அதிகாரத்தில் இருப்வர்களின் செல்வாக்கு தற்போது சற்று மேலோங்கி தலைமறைவாக இருந்த ராஜபக்ஸாக்களும் அவர்களின் விசுவாசிகளும் தற்போது வெளியில் நடமாட ஆரம்பித்திருக்கின்றார்கள். இது வரை மௌனமாக இருந்த ஆளும் தரப்பு சார்புடைய சமூக ஊடகங்களும் தற்போது தமது தரப்பு செய்திகளை சந்தைப்படுத்தி ராணில்-ராஜபக்ஸ தரப்பினரை தூக்கிப் பிடிக்கின்ற முயற்சிகளில் இறங்கி இருப்பதும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. ஆட்சியாளர்கள் தமக்கு சாதகமாக களத்தை சரிசெய்கின்ற கடும் முயற்சிகள் தற்போது நடந்து வருகின்றது.
நன்றி: 14.05.2023 ஞாயிறு தினக்குரல்