“உங்களை ‘அப்டேட்’ செய்து கொள்ளுங்கள்”
பிரபல பத்திரிகையாளர் ஜெனிபர் அருள்: 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று ஊடகத்துறையில் கால் பதிக்கும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து இருக்கிறது. வேலை நேரம், வேலைக்கான களம், சந்திக்கும் மனிதர்கள், பாதுகாப்பு என ஊடக துறைக்கு வர நினைக்கும் பெண்களுக்கு முன்னால் வைக்கப்பட்ட சவால்களை, சர்வ சாதாரணமாக தகர்த்தெறிந்து இன்று முன்னேறிக் கொண்டு இருக்கின்றனர்.நேரம் தவறாமை மிக முக்கியம். ‘பர்சனல்’ மற்றும் ‘புரொபஷனல்’ என நேரத்தை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
எந்த வேலையையும் ‘ஸ்மார்ட்’டாக செய்ய பழகினால், ‘ஸ்ட்ரெஸ்’ இல்லாமல் சாதிக்கலாம். பேட்டிகளுக்கு செல்லும் போது, தனிப்பட்ட காரணங்களை சொல்லி தாமதத்துக்கு விளக்கம் கொடுப்பது முறையானது அல்ல.ஊடகவியலாளர்கள் எல்லா நேரத்திலும், எல்லா இடங்களிலும் உண்மைக்கு கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மற்றவர்களின் மிரட்டல்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் பணிய வேண்டியதில்லை.
ஊடக தர்மத்தோடு நடுநிலைமையுடன் செயல்படுங்கள். உங்களின் பாதுகாப்பும் முக்கியம். அதனால், தனியாகச் செய்தி சேகரிக்கச் செல்லுகையில், ‘பெப்பர் ஸ்ப்ரே’ உட்பட தற்காப்பு விஷயங்களை கைப் பையில் வைத்துக் கொள்ளலாம்.ஊடகவியலாளர்களுக்கு சமூக வலைதளப் பயன்பாடு தவிர்க்க முடியாதது.
தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு அரசியல் கருத்துக்களை அங்கே பகிராதீர்கள். ஏனெனில், சமூக வலைதளங்களில் தவறான ‘மெசேஜ்’ மற்றும் ‘கமென்ட்’ செய்கிறவர்களை ‘பிளாக்’ செய்யுங்கள். நீங்கள் மற்றவர்களின் தகவல்களை பகிருகிறீர்கள் என்றாலும், ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்துச் செய்யுங்கள்.
யாரைச் சந்திக்கச் சென்றாலும் அவர்களைப் பற்றிய அடிப்படை விஷயங்களைத் தெரிந்து, ‘ஹோம் ஒர்க்’ செய்து கொண்டு செல்வது நல்லது. வாசகர்களுக்கு எப்போதும் உண்மையான, பயனுள்ள தகவலை மட்டும் கொடுப்பதில் உறுதியாக இருங்கள்.
பெண் தானே என்று அலட்சியமாக அணுகுபவர்களுக்கு, உங்கள் திறமையால் பதில் சொல்லுங்கள்.அச்சு ஊடகமோ, காட்சி ஊடகமோ வேலை வாய்ப்புகளுக்கு பஞ்சமே இல்லை.
கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகளில் உங்களின் தகுதிக்கேற்ப, உங்களுக்கு விருப்பமான பிரிவைத் தேர்வு செய்து கொள்ளலாம்.அடுத்தடுத்த நிலைகளுக்கு உங்களை உயர்த்திக் கொள்ள தகுதிகளை வளர்த்துக் கொள்வதோடு, உங்களை ‘அப்டேட்’டும் செய்து கொள்ளுங்கள். திறமையை நிரூபித்தபடியே, உங்களுக்கான அடையாளத்தையும் உருவாக்குங்கள்.