பண்டோரா பேப்பர்ஸ் கதையை கேளுங்கள்

-நஜீப் பின் கபூர்-

பண்டோரா பேப்பர்ஸ் விவகாரத்தைப் பார்ப்பதற்கு முன்னர் நாம் முதலில் பனாமா பற்றித் தெரிந்து கொள்வோம். வட அமெரிக்காவுக்கும் தென் அமெரிக்காவுக்கும் இடையே ஒரு ஒடுங்கிய நிலப்பரப்பு காணப்படுகின்றது. அந்த நிலப்பில் பனாமா என்று ஒரு தேசம் அமைந்திருக்கின்றது. அதன் வடக்கில் கர்பியன் கடலும் தெற்கே பசுபிக் சமுத்திரமும் மேற்கில் கோஸ்டோரிக்கா கிழக்கில் கொலம்பியா என்ற நாடுகள் அமைந்திருக்கின்றன. இன்று அங்கு மக்கள் தொகை நாற்பத்தி நாலு இலச்சம். நிலப் பரப்பில் நமது நாட்டை விட சற்றே பெரிய தேசம். நாட்டை நடுவே பிளந்து கொண்டு கடற் பயணத்தில் முக்கியமாக பனாமா கால்வாய் அமைந்திருக்கின்றது. பாடப் புத்தகங்களில் நாம் இதனைப் பார்திருப்போம், படித்திருப்போம்.

இப்போது கதைக்கு வருவோம். இந்த பனாமா நாட்டைச் சேர்ந்த மொசாக் நிறுவனத்தின் உதவியுடன், உலகில் பல நாடுகளின் உள்ள தலைவர்கள் முன்னாள் தலைவர்கள் அமைச்சர்கள் அதிகாரிகள் முக்கிய புள்ளிகள் தாம் மேசாடி செய்து அல்லது கொள்ளையடித்த பணத்தை பதுக்கி வைத்திருப்பது வழக்கமானதுதான். இது தொடர்பான ஆவணங்களை எப்படியோ பெற்று வெளி உலகிற்கு அம்பலப் படுத்துவதுதான் பனாமா பேப்பர்ஸ். இதற்கு முன்னர் பரடைஸ் பேப்பர்ஸ் என்றும் ஒன்று வந்தது. இந்த முறை இது பண்டோரா பேப்பர்ஸ் அழைக்கப்படுகின்றது. இது உலகில் மாபெரும் இரகசிய ஆவணம் என கருதப்படுகின்றது.

2017ல் இந்தியாவின் பிரபல்யமான அமிதாப் பச்சான், ஐஸ்வர்யா ராய் ஆகியோரது பெயர்களும் அந்தப் பட்டியலில் இலங்கையர் ஒருவரும் இருந்தார். இவர் பின்னர் அவுஸ்திரோலியாவுக்குத் தப்பிச் சென்று விட்டதாக அறியப்படுகின்றது. இந்த ஆவணங்கள் பற்றியும் நாம் அந்த நாட்களில் எழுதி இருந்தோம். இப்போது இந்தத் தகவல்களை உலகிற்கு அறியத் தருவது யார் என்று பார்ப்போம். சர்வதேச புலனாய்வுப் பத்திரிகையாளர்களின் கூட்டமைப்பு (ஐசிஐஜே) என்ற அமைப்பினர்தான் இதனை வெளியிட்டு வருகின்றார்கள்.

இந்த முறை 2021 இவர்கள் வெளியிட்ட பண்டோரா ஆவணத்தில் தொன்நூற்றி ஒரு நாடுகளின் பண மோசடிக்காரர்கள் இருக்கின்றார்கள். இதில் முப்பது சமகால அரசியல் தலைவர்களும், முன்னாள் தலைவர்கள் அமைச்சர்கள் அரசியல்வாதிகளின் உறவினர்கள் என்று பல்வேறு துறைகளில் பிரபல்யங்கள் இந்தப் பட்டியலில் இடம் பிடித்திருக்கின்றார்கள். இந்தியாவில் முன்னாள் கிரிக்கட் வீரர் சச்சின் தென்தூக்காரின் பெயரும் இந்த முறை இடம் பெற்றிருக்கின்றது. இந்திய இது தொடர்பான விசாரணைகளைத் தற்போது முடக்கி விட்டிருக்கின்றது.

இந்த முறை பண்ணிரெண்டு மில்லியன் வரையிலான ஆவணங்களை இவர்கள் அம்பலப்படுத்தி இருக்கின்றார்கள். இதற்காக அறுநூற்றுக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களை நிறுவனங்கள் பணியில் ஈடுபடுத்தி இருந்தார்கள். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் நிதிக்குழு ஆலோசகர் ஒருவரின் மகன் பெயர் இதில் இடம் பெற்றிருப்பதாகத் தகவல் கிடைத்த அடுத்த கனமே பிரதமர் இம்ரான் கான் இது தொடர்பான நடுநிலை விசாரணைக்கு உத்தவு பிறப்பித்திருக்கின்றார். உலகில் பல நாடுகளில் தமது பிரசைகள் இந்தப் பட்டியலில் இருப்பதறிந்து அங்கு விசாரணைகள் ஆரம்பித்திருக்கின்றன. நமது நாட்டிலும் அதிகாரத்தில் இருக்கின்ற ராஜபக்ஸாக்களின் மிக நெருக்கமான உறவுக்காரியான நிருபமா நடேசன் ராஜபக்சாவின் பெயர் இதில் இடம் பெற்றிருப்பதுடன் அதன் பணப் பெருமதியையும் பனாமாப் பத்திரத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நமது ஆட்சியாளர்கள் என்ன சொல்லப் போகின்றார்கள்? என்ன செய்யப் போகின்றார்கள் என்பததைப் பற்றி எமது கருத்துக்களை வாசகர்களுக்கு முன்வைப்பதற்கு முன் நமது நாட்டு நடைமுறைகளைப் பற்றி முதலில் சற்று ஆராய்வோம்.

தமது வாக்குகளைப் பெற்று அதிகாரத்துக்கு வருகின்ற தலைவர்கள் தொடர்ந்தும் நமக்குத் துரோகம் செய்கின்றார்கள் என்று தெரிந்தும் அவர்களையே திரும்பத் திரும்ப அதிகாரத்துக்குக் கொண்டு வருகின்ற ஒரு மக்கள் கூட்டம்தான் இந்த நாட்டில் வாழ்ந்து வருகின்றது. எனவே மாற்றத்துக்கு நாட்டம் இல்லாத ஒரு அரசியல் மனோ நிலை நாட்டில் காணப்படுகின்றது. சந்திரனில் இருந்து அரிசி வரவில்லை. சிங்கப்பூர் வாழ்க்கை தருகின்றோம் என்று ஆசை காட்டி மோசம் செய்தார்களே என்பதற்காக மக்கள் நொந்து கொள்ளவும் இல்லை. ஏமாற்றுகின்றவர்களையே அதிகார ஆசனங்களில் வைத்து மக்கள் இந்த நாட்டில் அழகு பார்ப்பது வழக்கமாக நடந்து வருகின்றது.

சரி இதுவெல்லாம் அந்தக் காலத்துக் கதை என்று சொல்லவும் இடமிருக்கின்றது. இந்த காலத்து கதையையும் ஒரு முறை கேட்டுப் பாருங்கள்.! போலி வாக்குறுதிகள் மட்டுமல்ல சமூகங்களை அச்சுருத்தியும் பயமுறுத்தியும் ஏமாற்றியுமே நமது தலைவர்கள் பதவிக்கு வருகின்றார்கள். அது பற்றியும் மக்கள்; பெரிதாக தனது கண்டனங்களைக் காட்டியதையும் நாம் இதுவரை பார்க்க வில்லை. நமது சொத்துக்களை அன்னியருக்கு விற்று ஆட்சியாளர்கள் பிளைப்பு நடாத்துகின்றார்களே என்ற எல்லா இடங்களிலும் பேச்சுக்கள் அதிர்ப்த்திகள் இருந்தாலும் ஆட்சியாளர்கள் இன்றும் சுகபோகங்களுடன் அதிகாரத்தில் இருந்து வருகின்ற நிலை. குடி மக்கள் அன்றாட அடிப்படைத் தேவைகளுக்காக தெருவில் வரிசையாக கையேந்தும் நிலையில் இருக்கின்றார்கள். இந்த அவலங்களை யாரிடம் சொல்லி அழுவது?

பண்டோரா ஆவணங்களை பார்ப்பதற்கு முன் இதனை விட மேசமான மோசடிகள் நாட்டில் நடந்த போது கூட நமது ஆட்சியாளர்களோ எதிரணயில் இருந்தவர்களோ பதவிக்கு வந்த போது கூட அவர்கள் மீது எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பது நாம் அனைவரும் அறிந்த விடயமே. மைத்திரி-ரணில் காலத்தில் நடந்த மத்திய வங்கிக் கொள்ளைக்காக அர்ஜூன் மகேந்தினை அப்போதய ஜனாதிhதி மைத்திரி விரும்பாத நிலையில் பதவிக்குக் கொண்டு வந்தற்காக ரணில் சிறை சென்றிருக்க வேண்டும்.

மகேந்திரன் சிங்கப்பூரான தனது நாட்டிற்குத் தப்பிச் சென்ற போது, இல்லை அவர் வந்து விடுவார் அவர் தனக்கு மிகவும் விசுவாசமானவர் என்று ரணில் அன்று பகிரங்கமாக பேசியது நமக்கு நினைவில் இருக்கின்றது. தற்போது பதவியில் இருக்கின்ற ராஜபக்ஸாக்கள் தாம் பதவிக்கு வந்ததும் மகேந்திரன் களுத்தைப் பிடித்து சிங்கப்பூரில் இருந்து இழுத்து வருவோம் என்றார்கள். ஆனால் இன்று வரை உருப்படியாக ஏதாவது அந்த மோசடி விவகாரத்தில் நடந்ததா?

தற்போதய பிரதமர் எம்.ஆர். தனது தேர்தல் செலவுகளுக்காக சீனாவிடம் இருந்து பல கோடிப் பணத்தை வங்கினார் என்று நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்ட போது அதனை தற்போதய பிரதமர் எம் ஆர். மறுத்ததுடன் உடனடியாக அந்தப் பத்திரிகைக்கு எதிரான சட்ட நடடிவக்கை எடுக்கப் போவதாத் தெரிவித்தார். இன்று வரை அவர் அப்படி எந்த ஒரு நடவடிக்கையிலும் இறங்கவில்லை. இதிலிருந்து நமக்கு என்ன புரிந்து கொள்ள முடிகின்றது.

கோட்டும் சூட்டும் அணிந்து கொள்ளையடித்தால் அல்லது அதிகாரமிக்க பதவிகளில் இருந்து கொண்டு மோசடிகளில் ஈடுபட்டால் அந்தக் கள்வர்களை நாடு கண்டு கொள்ளாமல் இருக்கும் நிலை இங்கு காணப்படுகின்றது. வர்த்தக அமைச்சராக ரவி கருனாரத்தன இருந்த காலத்தில் நடந்த சதோச ஊழழுக்கு இது வரை தண்டனைகள் வழங்கப்பட்டதா? பிரான்ஸ் ஏயர் பஸ் கொள்வனவில் நடந்த மோசடி. தற்போதய நிதி அமைச்சர் பசில் 28 ஏக்கர் நிலத்தில் அமைத்திருக்கின்ற மல்வானை வீட்டு விவகாரத்துக்கு என்ன நடந்தது. இதன் காணிப் பத்திரம் கூட நடேசன் பெயரில்தான் இருக்கின்றது.

இமாட் சுபைரி என்ற அமெரிக்க உளவலிக்கு நாட்டின் பிம்பத்தை உயர்த்தி உலக அரங்குகளில் காட்டுவதற்காக அன்று மத்திய வங்கி ஆளுநராக இருந்த கப்ரால் சட்டத்துக்கு முரனாக கோடிக் கணக்கில் பணத்தை அள்ளிக் கொடுத்தாரே அதற்கு ஏதாவது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டனவா? வங்குரோத்து கிரீஸ் நாட்டில் போய் கப்பரால் தன்னிஷ்டத்துக்கு அரச பணத்தை முதலீடு செய்து பறி கொடுத்தரே அப்படிப்பட்ட ஒருவரைத்தானே இன்று மத்திய வங்கி ஆளுநராக்கி அழகு பார்க்கின்றார்கள். எனவே இந்த நாட்டுத் திருடர்களுக்கு நாம் இப்படி ஒரு ஆலோசனை சொல்லாம் என்று தோன்றுகின்றது. கொள்ளையடிக்கப் போகும் முன்னர் ஒரு டைலரிடம் போய் கோட்டும் சூட்டும் தைத்துக் கொண்டால் அது உங்களுக்கு ஒரு நல்ல பாதுகாப்பைக் கொடுக்கும் என்று நாம் நம்புகின்றோம்.

நாம் கீழே கொடுக்கின்ற சம்பவத்தையும் கொஞ்சம் உன்னிப்பாக யோசித்துப் பாருங்கள். 2015 தேர்தலில் ராஜபக்ஸாக்கள் மண் கௌவிய போது. ராஜபக்ஸாக்களுக்கு பாதுகாப்பான முறையில் கொழும்பில் இருந்து மெதமூலனைக்கு வெளியேறுவதற்கு ஏற்றவகையில் பேசித் தீர்மாணங்களை எடுப்பதற்காக 2015.01.08 அதிகாலை மூன்று மணிக்கு ரணில் ராஜபக்ச வீட்டிற்குப் போய் இருக்கின்றார். அப்போதும் இதே நிருபமா ராஜபக்ஸாவின் கணவன் நடேசனும் ரணிலுடன் கூடவே அங்கு போய் இருக்கின்றார்.

இவற்றை எல்லாம் ஏன் இந்த பனாமா விவகாரங்களுக்குள் நுழைக்கின்றோம் என்று நீங்கள் யோசிக்கலாம். அரசியல் இருப்புக்காகவும் பாதுகாப்புகளுக்காகவும் குடும்பத்தினர் என்ற வகையில் இவர்கள் ஒன்று சேர்ந்து கொள்கின்றார்கள். அதே போன்று அரச பணத்ததை கொள்ளை அடித்துப் பதுக்கி வைக்கின்ற விடயத்திலும் இனம் மதம் என்ற முரன்பாடுகள் வருவதில்லை.

அப்பாவி தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரம் உரிமைகள் என்று பேசப் போகின்ற இடத்தில் மட்டும் பௌத்த பேரினவாதம் பீரிட்டுக் கொண்டு வருவதை நாம் பார்க்கின்றோம். சீனி கொள்ளை, நச்சு தேங்காய் எண்ணையை மக்களுக்கு உணவுக்குக் கொடுத்த முஸ்லிம் வியாபாரிகளுக்கு இது வரை எந்த்தத் தண்டணைகளும் இல்லை என்ற நிலை இந்த நாட்டில் இருந்து வருகின்றது. எனவேதான் பணம் என்றால் பிணமும் வாய்திறக்கும் என்பது போல மேலிடத்து பணக் கொள்ளைகளின் போது அங்கே இனவாதம் சீரோவாகி விடுகின்றது.

நிருபமா நடேசன் பண்டோரா பேப்பர்ஸ் விடயமாக நாம் பார்ப்போமாக இருந்தால் இன்று நாட்டில் இது பேசு பொருளாக இருந்தாலும் இன்னும் இரண்டொரு வாரங்களில் இதனை நமது நாட்டு மக்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். இது தான் நமது வரலாறு இதனை விட எத்தனையோ விவகாரங்களில் நமது நாட்டு நடப்புகள் அப்படித்தான் அமைந்திருந்தன. இது விடயத்திலும் அதே கதைதான்.

2017 ஒரு முறை ஜேவிபி தலைவர் அணுரகுமார பகிரங்க அரசியல் அரங்கு ஒன்றில் பேசும் போது பசிலின் பணம் திருகுமார் நடேசன், நிருபமா கணக்குகளில்தான் வைப்புச் செய்யப்பட்டு வருகின்றது. இதனைச் சொல்வதற்காக முடியுமானால் தனக்கு வழக்குத் தாக்கல் செய்யுமாறும் அவர் பகிரங்கமாக அன்று சவால் விட்டிருந்தார். மேல் மட்டத்தில் இனவாதம் மருந்துக்குக் கூடக் கிடையாது. பதவிக்கு வருவதற்காக மட்டும் ஆட்சியாளர்கள் அப்பாவி பேரினத்தாரை உசுப்பேற்றி விடுகின்றார்கள். எனவேதான் மடில்லே பஞ்ஞாசாரத் தேரர் சொல்வது போல முஸ்லிம்களை தும்புறுத்தியும் சிங்களவர்களை ஏமாற்றியுமே இந்த அரசாங்கம் வஞ்சகமாக பதவிக்கு வந்திருக்கின்றது. அதன் சாபங்களைத்தான் இன்று நாமும் நாடும் அனுபவித்து வருகின்றது என்று தேரர் கூறுகின்றார்.

நிருபமா நடசேன் ராஜபக்ஸ என்பது ராஜபக்ஸாக்களின் குடும்ப உறுப்பினர். ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் நிருபமா மகள் முறை உறவு. ஆனால் தங்கை முறை உறவு என்றுதான் மக்கள் கருதுகின்றார்கள். அது அப்படி அல்ல. முன்பு உதவி நீர்ப்பாசன உதவி அமைச்சராக ராஜபக்ஸ அரசியல் பதவியில் இருந்திருக்கின்றார். அப்படிப் பட்ட ஒருவர் கணக்கிலே இந்தளவு பெரிய பணக் குவியல் என்றால் இந்த அரசாங்கத்தில் இருக்கின்ற தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் கணக்கில் எந்தளவு பணம்-சொத்துக்கள் கொள்யடிக்கப்பட்டு உலகில் எங்கொல்லாம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் என்று மக்கள் சந்தேகிக்க நிறையவே இடமிருக்கின்றது. அவற்றை எல்லாம் மக்கள் கூடிய கெதியில் மறந்து விடுவதால் இந்த கொள்ளைகள் தொடரத்தான் செய்யும் என்பது நமது கணக்கு.

தமது பெயர்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருப்பாதல் தமக்கு மிகுந்த மன உழைச்சல் என்று கூறி இதற்கான ஒரு விசாரணையை நடத்துமாறு நடேசனும் மனைவி நிருபமாவும் ஜனாதிபதிக்குக் (மாமனாருக்கு-மகளுக்கு) கடிதம் எழுதி இருப்பதுடன் அந்த விசாரணைகள் எப்படி நடக்க வேண்டும் என்று அவர்களே ஜனாதிபதிக்கு ஆலோசனையும் சொல்லி இருக்கின்றார்கள். ஆனால் ஜனாதிபதி இதனை தனது கட்டுப்பாட்டில் இருக்கும் ஊழல் மோசடிகள் பற்றிய ஆணைக் குழுவுக்கு விசாரிக்கும் படி கேட்டிருக்கின்றார். நீதி மன்றமே கொலைக் குற்றத்துக்குத் தண்டனை வழங்கியவரை வெளியே எடுத்து உயர் பதவி வழங்கும் ஒரு நாட்டில் எப்படியான நீதி விசாரணைகள் இங்கு நடக்கும் என்று சிறு பிள்ளைக்கும் தெரியும். அதனையும் பொருத்திருந்து பார்ப்போம். -நன்றி தினக்குரல் வாரமலர்

Previous Story

பண்டோரா பேப்பர்சுகுள் இன ஐக்கியம் பூத்துக் குழுங்குகின்றது!

Next Story

வாராந்த அரசியல்