ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக செயற்பட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
சஜித் தரப்பின் முக்கிய அங்கத்தவரான இவர் நாளை (13.08.2024) நிலைபாட்டை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பு ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையில் நடைபெறவுள்ள வைபவமொன்றில் கலந்துகொண்டு ஆதரவை ராஜித சேனாரத்ன தெரிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
விசேட கலந்துரையாடல்
களுத்துறையில் உள்ள தனியார் விருந்தகம் ஒன்றில் தமது கட்சியின் அங்கத்தவர்கள் சிலர் உள்ளிட்ட செயற்பாட்டாளர்களை அழைத்து ராஜித இது தொடர்பில் கலந்துரையாடியதாக கூறப்படுகிறது.
இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பொருளாதாரத்தை கட்டியெழுப்பிய விதம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடியதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
மேலும், எதிர்வரும் 16ஆம் திகதி சஜித் தரப்பு உள்ளிட்ட கட்சிகளின் குழுவொன்று ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாக ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து செயற்படாத சுமார் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே சுயாதீனமாக செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், வேட்புமனு தாக்கல் செய்ததன் பின்னர் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் வகையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.