-நஜீப் பின் கபூர்-
மனிதன் என்னதான் தனது ஆற்றல்களினால் தான் வாழ்கின்ற சூழலின் சில மாறுதல்களைச் செய்து அதற்கு மிகப்பெரும் விஞ்ஞான வெற்றி என்று நாமத்தை சூட்டிக் கொண்டாலும் மனிதன் சூழலின் கைதியே என்ற ஒருவார்த்தையும் வலுவாக இருக்கின்றது. மனித வெற்றிகள் ஒரு மட்டுப்பட்ட அளவில்தான் இன்றும் உலகில் இருந்து வருகின்றன. இது ஒரு நீண்ட விவகாரமாக இருப்பதால் அது பற்றி நாம் இங்கு பேச வரவில்லை. அதே போன்று நாம் எழுதுகின்ற கட்டுரைகளிலும் சில புரிந்து கொள்வதற்குச் சற்று சிரமங்கள் வாசகர்களுக்கு ஏற்படவும் இடமிருக்கின்றது. என்றாலும் அவற்றை இங்கு சுட்டிக்காட்டாமலும் இருக்க முடியாது.
உள்நாட்டு அரசியலானாலும் சர்வதேச அரசியலானாலும் அதில் நமது கண்களுக்குத் தெரியாத அல்லது ஜீரணித்துக் கொள்ள சிக்கலான சில பக்கங்களும் இருக்கத்தான் செய்யும். அப்படிப்பட்ட ஒரு தலைபைப் பற்றித்தான் நாம் இந்த வாரம் பேசலாம் என்று எதிர்பார்க்கின்றோம். நாட்டில் நடக்கின்ற அன்றாட நிகழ்வுகளில் கூட எத்தனையோ ஏமாற்றுக்கள் இருந்தாலும் அதனை அந்த நேரத்திலே மக்களால் கண்டு கொள்ள முடியாது போய் பிற்காலத்தில் நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று பெரும் பெரும் அறிவாளிகளே வாக்குமூலம் கொடுத்ததை நாம் கடந்த காலங்களில் நமது அரசியலில் பார்த்திருக்கின்றோம். எனவே பாமர மக்களை இந்த விவகாரங்களுக்காக நாம் எப்படி நொந்து கொள்ள முடியும்.
சில தகவல்களைச் சொல்லும் போது சிலருக்கு அதில் ஒரு கசப்பும் கோபமும் சில இடங்களில் வரலாம் வராமலும் இருக்கிலாம். நாம் நடுநிலையாக இருந்து சில விடயங்களைச் சொன்னாலும் அதனைப் பார்க்கின்ற கோணங்களில் அடிப்படையிலும் வளைவு சுழிவுகளும் தெரிய இடமிருக்கின்றது. அதற்கான உரிமையும் நமது வாசகர்களுக்கு எப்போதும் போல இதிலும் இருக்கின்றது. இப்போது விடயத்துக்கு வருவோம். இலங்கை என்று வரும் போது அதற்குப் பக்கத்தில் இருக்கின்ற நாடுகள், இந்த நாட்டில் வாழ்கின்ற சமூகங்கள், அந்த சமூகங்களுடன் உறவில் இருக்கின்ற நாடுகள் மற்றும் பிர சமூகங்கள். இதற்கிடையில் சர்வதேச சமூகத்தின் ஆதிக்கம் என்பனவும் நமது தேச-சமூகப் பின்னணியாக இருந்து வருகின்றன.
இலங்கை என்று வரும் போது இயக்கர் நாகர், ஆரியர் வருகை, மன்னராட்சி தென்னிந்தியப் படையெடுப்புக்கள். ஐரோப்பியர் வருகை. இதனைப் பின்னணியாக் கொண்ட அரசியல் உறவுகள். அத்தோடு அரேபியர் அல்லது முஸ்லிம்கள் வருகை, இந்திய வம்சாவளி மலாய சமூகம் என்றெல்லாம் இந்த சமூகப் உறவுகள் விரிவடைகின்றன. அந்த வகையில் பக்கத்து நாடு என்ற வகையில் இந்தியா இலங்கை விவகாரத்தில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தில் ஆழமாக வேரூன்றி இருக்கின்றது.
அடுத்து உறவுகள் என்று வரும் போது சற்றுத் தொலைவில் இருந்தாலும் சீனாவின் பிடி நெடுங்காலமாக இலங்கை மீது பலமாகத்தான் இருந்து வருகின்றது. அதே போன்று உலக வல்லரசு என்று பார்க்கின்ற போது வலதுசாரிகள் ஆதிக்கத்தில் இருக்கின்ற காலங்களில் மேற்குடன் குறிப்பாக அமெரிக்காவுடன் உறவு சற்று நெருக்கமாக இருந்து வந்திருக்கின்றது. அதே போன்று சுதந்திரக் கட்சி அல்லது பண்டாரநாயக்கர்களைப் பின்னணியாகக் கொண்ட அரசியல் இங்கு செல்வாக்குடன் இருந்த காலங்களில் சீன, ரஸ்ய உறவு சற்று மேலோங்கி இருந்து வந்திருக்கின்றது. இது வரை நாம் இங்கு சுட்டிக் காட்டிய விவகாரங்கள் 1948 முதல் 1990ம் வரையிலான அரசியல் என்று எடுத்துக் கொள்ள முடியும்.
இப்போது அதற்குப் பின்னய அரசியல் என்று வரும் போது விடுதலைப் புலிகளின் அரசியல் ஆதிக்கம்- ஆயுதப் போராட்டங்கள் மற்றும் இந்திய ஆகாய வழியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வான்வெளியே நீட்டிய நேசக்கரம், இந்திய இலங்கை உடன்படிக்கைகள் அல்லது ரஜீவ்-ஜே.ஆர். இணக்கப்பாடுகள் அதனால் வந்த அரசியல் சீர்திருத்தங்கள் என்பன இலங்கை அரசியலில் ஒரு பேசுபொருளாக இன்றுவரை இருந்து வருகின்றது. ஆனால் நமது பார்வையில் அதாவது மோடியின் பரந்த இந்துத்துவக் கொள்கைப்படி அந்த உடன்பாடுகள் கைவிடப்பட்டிருக்கின்றன.அவ்வப்போது அதுபற்றி இங்குள்ள தமிழ் அரசியல்வாதிகளும் சர்வதேச சமூகமும் பேசினாலும் அது வீரியம் இழந்த ஒரு விவகாரம். அதனால்தான் இலங்கை அரசியல் தலைமைகள் இந்த விவகாரத்தில் இந்தியாவை மதிக்காமல் 13 விவகாரத்தில் நடந்து வருகின்றன.
அண்மையில் ரணில் மோடியைப் சந்திக்கப் போன நேரத்தில் இங்குள்ள தமிழ் தலைவர்கள் மோடிக்குக் ஆளக்கொரு காதல் கடிதம் என்ற வகையில் கடிதம் எழுதி கோரிக்கைகளை விடுத்திருந்தார்கள். இந்தக் கடிதங்கள் அனுப்பப்படுகின்ற போதே இது வெரும் நாடகங்கள் என்று நாம் சொல்லி இருந்தோம். இப்போது அது எடுபடவில்லை என்று உணர்கின்ற அதே தலைமைகள் அனைவரும் இணைந்து ஜனாதிபதி ரணிலுக்கு இனப்பிரச்சினை தொடர்ப்பில் ஒருமித்த கோரிக்கைளுடன் கடிதம் அனுப்புகின்ற படலத்தை துவங்கி இருக்கின்றார்கள். ஜனாதிபதி ரணில் என்பவர் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குகின்ற நிலையில் இல்லை. அதற்கான மக்கள் அங்கிகாரமும் அவருக்குக் கிடையாது. இந்த முயற்சிகளும் தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற மற்றுமொரு செயல்தான் என்பதனை நாம் அன்று போல இன்றும் முன்கூட்டிச் சொல்லி வைக்கின்றோம்.
நமது பார்வையில் இப்போது இலங்கையில் இருக்கின்ற பிரச்சினைகளைப் பின்வருமாறு வகைப்படுத்த முனைகின்றோம்.
1.நிதி நெருக்கடிகளும் அதனுடன் கூடிய பொருளாதார நெருக்கடிகளும்.
2.தேர்தல்களும் அதனோடு வருகின்ற ஆதிக்கப் போட்டிகளும்.
3.இனப்பிரச்சினைக்கு விவகாரத்தில் எதிரும் புதிருமான செயல்பாடுகள்.
4.சர்வதேசம் என்ற பூச்சாண்டி மீதான நம்பிக்கைகள்.
நிதி நெருக்கடிகளும் அதனுடன் கூடிய பொருளாதார நெருக்கடிகளும்:
சமகாலத்தில் அதாவது நாம் ஏற்கெனவே சொன்ன 1990களின் பின்னர் குறிப்பாக ராஜபக்கஸாக்கள் இந்த நாட்டில் அதிகாரத்துக்கு வந்ததிலிருந்து இங்கு ஒரு மன்னராட்சி என்ற நிலை மக்களிடத்தில் இருந்து வந்தது. குறிப்பாக 2009 போர் வெற்றியுடன் இந்த அரசியல் நாட்டில் ஒரு கடுமையான பேரினவாதத்தை இங்கு தோற்றுவித்தது. இடையில் வந்த நல்லாட்சி காலத்தில் ஒரு மாற்றம் எதிர்பார்க்கப்பட்டாலும் அந்த ஆட்சியின் முடிவு ராஜபக்ஸாக்களின் தேவையை நாடு எதிர்பார்க்க வேண்டி வந்தது. குறிப்பாக ஒட்டு மொத்த சிங்கள சமூகமும் இதனால் கோத்தாபே ராஜபக்ஸ மீது அணி திறள ஆரம்பித்தது. நடத்த ஜனாதிபதி தேர்தலில் சிங்கள சமூகத்தின் 75 சதவீத ஆதரவு அவருக்குக் கிடைக்க 69 இலட்சம் வாக்குகளுடன் கோட்டா நம்பிக்கையுடன் அதிகாரத்து வந்தார்.
நாம் மேற்கொண்ட கணிப்புகளின் படி பிரதான எதிரணி வேட்பாளர் சஜித்துக்கு 25 சதவீதமான சிங்களவாக்காளர்கள் கூட வாக்களிக்கவில்லை. சஜித் பிரேமதாச பெற்ற 55 இலட்சம் வாக்குகளில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் சிறுபான்மை சமூகத்தின் வாக்குகள். அதாவது தமிழர் முஸ்லிம்களின் வாக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜபக்ஸாக்கள் பெற்றுக் கொண்டு தேர்தல் வெற்றி என்பது வஞ்சகத் தன்மையானது ஏமாற்றுக்கள் மிக்கது என்பதனை அவர்களுக்கு உதவி செய்த தரப்பினரே இன்று வாக்குமூலம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படி வஞ்சகத் தனமாக முறையில் அதிகாரத்துக்கு வந்த கோட்டாவால் இரு வருடங்கள் ஏனும் அதிகாரத்தில் இருக்க முடியவில்லை. இது இறைவன் அவர்களுக்குக் கொடுத்து தண்டனை என்ற ஒரு கருத்தும் அனைத்து மக்கள் தரப்பிலும் பேசப்பட்டு வருகின்றது.
ராஜபக்ஜாக்கள் காலத்தில் நாட்டில் மிகப்பெரிய சுராண்டலும் மோசடியும் நிதிக் கொள்ளைகளும் நடந்திருக்கின்றன. அதனை சரி செய்ய எந்த உறுப்படியான நடவடிக்கைகளும் தற்போத அரசாங்கத்தால் மேற்கொள்ள முடியாதிருக்கின்றது. இதற்கிடையில் மத்திய வங்கியில் மிகப் பெரிய கொள்ளைகள் நடக்க உடந்தையாக இருந்தவர்தான் தற்போது அதிகாரம் மிக்க ஜனாதிபதி கதிரையில் அமர்ந்திருக்கின்றார். அப்படி இருக்கும் போது நிதி மற்றும் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீட்சி பெறுவதற்கு எந்த வாய்ப்பும் தற்போது கிடையாது. எதிர்வரும் நாட்களில் மீண்டும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு இடமிருக்கின்றது.
தேர்தல்களும் அதனோடு வருகின்ற ஆதிக்கப் போட்டிகளும்:
இந்தப் பின்னணியில் அதிகாரத்துக்கு வந்த ரணில் இன்று மொட்டுக் கட்சியின் துணையுடன் வன்முறையான ஒரு அரசியலைத்தான் தற்போது செய்து கொண்டிருக்கின்றார் என்பதும் எமது குற்றச்சாட்டாக இருக்கின்றது. தேர்தலை நடாத்துவதற்கு பணம் இல்லை என்றார்கள். அதனால் நாட்டில் பொருளாதாரம் சீராகும் வரை தேர்தலும் இல்லை என்றார்கள். இப்போது இனப் பிரச்சினைக்கு தீர்வு தருவதாக காலத்தை கடத்திக் கொண்டு போகின்றார்கள்.
அனேகமாக இனப்பிரச்சனைக்கு தீர்வு தரும் வரை நாட்டில் எந்தத் தேர்தல்களும் கிடையாது என்று ஜனாதிபதி ரணில் பேசவும் நிறையவே வாய்ப்புக்கள் இருக்கின்றன. எனவேதான் அவர் நாடாளுமன்றத் தீர்மானங்களுக்கு மட்டுமே தான் கட்டுப்படுவேன் என்று ஜனாதிபதி சில தினங்களுக்கு முன்னர் பகிரங்கமாகவே கூறி இருந்தார். அதனால் நாம் இதற்கும் தேர்தல்களுக்கும் ஒரு முடிச்சைப் போட்டுப் பார்ப்பதில் எந்தத் தவறும் இருக்கும் என்று கருதவில்லை. எனவே இனப் பிரச்சினைக்குத் தீர்வு கொடுக்கும்வரை நாட்டில் ஜனாதிபதித் தேர்தலோ பொதுத் தேர்தலோ கிடையாது என்ற அறிவிப்பு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு ஏதும் இல்லை.
தேர்தல்கள் தொடர்ப்பிலும் வேட்பாளர்கள் தொடர்ப்பிலும் அவ்வப்போது அரசியல்வாதிகளும் ஊடகங்களும் செய்திகளை சந்தைப்படுத்திக் கொண்டிருந்தாலும் அதனை மக்கள் பெரிதாக எடுத்தக் கொள்ள வேண்டியதில்லை அவை வழக்கமாக சொல்லப்படுகின்ற சீலைக்கு மேல் சொரிகின்ற செய்திகள்தான் என்பது எமது கருத்து. மீண்டும் புலிகளின் மீள்வருகை பற்றிய ஒரு கதையையோ அல்லது ஈஸ்டர் தாக்குதல் போன்றதொரு பெரும் நெருக்கடி ஒன்றையோ தோற்றுவித்து கவனத்தை திசைதிருப்பவும் இடமிருக்கின்றது.
தமக்குக் களம் வாய்ப்பாக இல்லை என்பதால் ஏதாவது தில்லுமுள்ளு வேலைகளைச் செய்து அதிகாரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள் இன்னும் நிறையவே காரியங்களைப் பார்க்க இடமிருக்கின்றது.
இனப்பிரச்சினைக்கு விவகாரத்தில் எதிரும் புதிருமான செயல்பாடுகள்:
இனப் பிரச்சினை விவகாரத்தில் ஆட்சியாளர்களும் பேரித்தாரும் சிறுபான்மை சமூகங்களை குறிப்பாக தமிழர்களை ஏமாற்றுவது ஒன்று ஆச்சர்யமான விடயங்கள் அல்ல. ஆனால் அவர்கள் கொடுக்கின்ற போலியான வாக்குறுதிகளை நம்பியோ அல்லது நம்புவது போல நடித்தோ தமிழ் அரசியல் தலைமைகள் போடுகின்ற நாடகங்கள்தான் நமக்கு மிகப் பெரிய வியப்பை கொடுத்துக் கொண்டிருக்கின்றது.
அதிகாரம் இல்லாத ஜனாதிபதியாக இருக்கின்ற ரணிலை நம்பி காலங் கடத்துவதுதான் ஜீரணித்துக் கொள்ள முடியாதிருக்கின்றது. மோடி மற்றும் தமிழ் நாடும் கூட ஈழத் தமிழர் விவகாரத்தில் இப்போது அரங்கில் இருந்து விலகி அல்லது தள்ளி இருக்கின்றார்கள். தமிழர் விவகாரத்தில் பேரின ஆட்சியாளர்களும் இந்தியாவும் எதையாவது செய்கின்றார்களோ இல்லையோ தமிழ் தலைமைகளே இன்று மிகப் பெரிய கோமாளிகளாகி நிற்க்கின்றார்கள். அறிவுபூர்வமான ஒரு சமூகம் இது பற்றி சிந்திக்காமல் இருப்பது ஏனோ?
சர்வதேசம் என்ற பூச்சாண்டி மீதான நம்பிக்கைகள்:
இன்று இலங்கை அரசு தனது நிதி மற்றும் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து விடுபட சர்வதேசத்தை எதிர்பார்த்திருக்கின்றது. ஆனால் இந்த சர்வதேசம் என்பது தனக்குள்ள நிகழ்ச்சி நிரல் படிதான் தீர்மானங்களை எடுக்கும். மேற்கத்திய நாடுகளுக்கு தற்போதய நிலையில் உக்ரைன் போரில் ரஸ்யாவை வெற்றி கொள்வதுதான் பிரதான இலக்கு. அதற்ககாகத்தான் இன்று அவர்கள் ஆயிரக்கணக்கான பில்லியன் பணத்தை அந்தப் பேருக்கு அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றார்கள்.
அதே போன்று ரஸ்யா ஆதரவு முகாமிலுள்ள நாடுகளும் தமது முகாமின் வெற்றிக்காகத்தான் தமது வளங்களை செலவளித்துக் கொண்டு வருகின்றன. அந்த விவகாரம் அப்படி இருக்க, இலங்கை ஆட்சியாளர்களின் கொடுக்கல் வாங்கல்கள் கடந்த காலங்களில் நம்பகத் தன்மையாக இல்லை. எனவே இலங்கைக்கு உதவும் விவகாரத்தில் இதுவும் தாக்கம் செலுத்தும். சர்வதேச பார்வையில் இலங்கை என்பது நிதி விவகாரத்தில் ஒரு வங்குரோத்து நாடு. அதற்காக யாரும் கை கொடுக்க உதவுவார்கள் என்பது எதிர்பார்க்க முடியாத ஒன்று.
அத்தோடு சர்வதேச சமூகம் என்பதும் ஒரு பூச்சாண்டி. பாதிக்க பட்ட மக்களுக்காக அது கல்லில் நார் உரிப்பது போலத்தான் உதவி இருக்கின்றது. இது தமிழர் இனப்பிரச்சனை மற்றும் போர் குற்றச் செயல்களுக்கும் பொருந்தும். இன்று இலங்கையிலுள்ள பேரின சமூகங்கள் கூட மக்களின் வாழ்வுரிமை மற்றும் ஜனநாயக போராட்டங்கள் என்று நடாத்தினாலும் அதில் கூட இந்த சர்வதேசம் வேடிக்கை பார்க்கும் கூட்டமாகத்தான் இருப்பார்கள். எனவே இந்த நாட்டில் இருக்கின்ற சிறுபான்மை சமூகங்களும் பேரின சமூகமும் இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு சின்ன உதாரணத்துடன் கதையை முடித்துக் கொள்ள எதிர்பார்க்கின்றோம். இலங்கை விவகாரத்தில் இந்தியா சீனா தவிர்க்க முடியாத பாத்திரங்கள். அந்தவகையில் இலங்கையில் இடதுசாரிகள் தலைமையில் அதாவது அணுரகுமார தலைமையிலான ஜேவிபி அரசு அதிக்கத்தைக் கைப்பற்றுகின்ற நிலை என்றால், அதற்கு எதிராக ரணில்-மொட்டு ஆட்சியை இங்கு தொடர இந்தியா துணைக்கு நின்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இதற்கு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்பும் கிடைக்கும். சீன வல்லாதிக்கம் ஆதிக்கம் மீதான அச்சமும் பயமும்தான் இதற்குக் காரணம். அரசியல் என்பது இதுதான்.