கொழும்பில் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகிலுள்ள போராட்ட முகாமை அகற்றுவதற்கு இலங்கையின் பாதுகாப்புப் படையினர் தேவையற்ற பலத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுவது தொடர்பில் தாம் பீதியடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் ஜெனீவா மனித உரிமைகள் அலுவலகப் பேச்சாளர் ஜெரமி லோரன்ஸ் இந்த அச்சத்தை வெளியிட்டுள்ளார்.
போராட்டக்காரர்கள், செய்தியாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களையும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலக பேச்சாளர் கண்டித்துள்ளார்.
பாதுகாப்புப் படையினரின் தாக்குதல்
பாதுகாப்புப் படையினரின் தாக்குதலில் குறைந்தபட்சம் 48 பேர் காயமடைந்தனர், தாக்குதலின் போது போராட்டக்காரர்கள் அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்படவில்லை.
அத்துடன் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க முடியவில்லை. குறைந்தது நான்கு ஊடகவியலாளர்கள் பாதுகாப்புப் படையினரால் தாக்கப்பட்டுள்ளனர். போராட்டக்காரர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் அழிக்கப்பட்டன அல்லது பறிமுதல் செய்யப்பட்டன.

இரண்டு சட்டத்தரணிகள் பாதுகாப்புப் படையினரால் தாக்கப்பட்டதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்கள் ஆர்ப்பாட்டங்களைக் கண்காணித்து அறிக்கையிடுவதற்கு உரிமையுடையவர்கள்.
மனித உரிமைகள் அலுவலக பேச்சாளரின் வலியுறுத்தல்
எனவே இந்தச் செயற்பாடுகளை எந்த வகையிலும் தடை செய்யக்கூடாது என்று மனித உரிமைகள் அலுவலக பேச்சாளர் வலியுறுத்தினார்.
அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராக பலாத்காரம் பயன்படுத்துவது சர்வதேச சட்டத்திற்கு முரணானது. எனவே அவ்வாறான பலத்தை பயன்படுத்துவதை அதிகாரிகள் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் கோரியுள்ளது.

பொருந்தக்கூடிய சர்வதேச சட்டத்தின் கீழ், விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மட்டுமே கூட்டங்கள் கலைக்கப்பட வேண்டும்.
பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி என்பன குடிமக்களின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களது குடும்பங்களின் நல்வாழ்வில் ஏற்படுத்தும் விளைவுகளின் போது, அது குறித்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் பகிரங்கமாக வெளிப்படுத்துவதற்கும் அனைவருக்கும் உரிமை உண்டு.
எனவே இலங்கையின் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளை பலவந்தமாக தீர்க்க முடியாது எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.





