தென்கொரியத் தலைநகர் சோலில் மக்கள் கூடும் ஒரு பிரபலமான இடத்தில் ஹாலோவீன் திருவிழாக் கூட்ட நெரிசலில் சிக்கி டஜன் கணக்கானோருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக வெளியான வீடியோக்களில், மயங்கிய நிலையில் உள்ள பலருக்கு தெருவோரத்தில் அவசரகால சேவைப் பணியாளர்கள் சிகிச்சை அளிப்பதையும், ஏராளமான கூட்டம் அந்த இடத்தில் சூழ்ந்திருப்பதையும் பார்க்க முடிகிறது.
பேரிடர் மீட்புக் குழுவினரை அந்த இடத்துக்குச் செல்லும்படி உத்தரவிட்டுள்ளார் அதிபர் யூன் சுக்-இயோல்.
81 பேருக்கு மூச்சுவிடுவதில் சிக்கல் ஏற்பட்டதாக தகவல்கள் வந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, முதல் முறையாக முகக் கவசம் அணிவது கட்டாயம் அல்லாத வெளிப்புறத்தில் அனுமதிக்கப்பட்ட ஹாலோவீன் கூட்டம் இது என்பதால் இதில் சுமார் 10 ஆயிரம் பேர் இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
இன்று சனிக்கிழமை மாலை நிகழ்வுக்கு முன்னதாக வெளியிடப்பட்ட சமூக ஊடகப் பதிவுகள் சிலவற்றில் இடாவூன் என்ற இந்த நிகழ்விடத்தில் மிக அதிகமாக கூட்டம் இருப்பதாகவும், அது பாதுகாப்பற்றதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மயங்கிய நிலையில் இருந்த பலருக்கு பொதுமக்களும், அவசரகால சேவைப்பிரிவினரும் சிகிச்சை அளிப்பதாகக் காட்டும் பல புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாயின.
ஒரு குறுதிய வீதியில் ஏராளமானோர் மீட்புதவியாளர்கள் பாதிக்கப்பட்டோருக்கு சுவாச மீட்பு சிகிச்சை அளிப்பதைப் போல காட்டும் படம் ஒன்றும் பகிரப்பட்டது.
இடாவூன் அருகே உள்ள ஹாமில்டன் ஓட்டல் பக்கத்தில் ஒரு விபத்து நடந்திருப்பதாகவும், மக்கள் விரைவாக வீடு திரும்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொளளும் அவசரகால செய்தி ஒன்று யோங்சான் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு அலை பேசிக்கும் அனுப்பப்பட்டது என்று உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்தார்.