துபாய் விமான நிலையத்தில் இரண்டு பயணியர் விமானம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள் ஆக இருந்த சம்பவம் கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்டது.
வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து, தெலுங்கானாவின் ஹைதராபாத் நோக்கி, ‘எமிரேட்ஸ் இகே – 524’ ரக பயணியர் விமானம் கடந்த 9ம் தேதி இரவு புறப்படத் தயாரானது.
அதே நேரத்தில் துபாய் – பெங்களூரு இடையிலான ‘எமிரேட்ஸ் இகே – 568’ ரக விமானமும் புறப்பட தயாரானது. இந்த இரண்டு விமானங்களும் 5 நிமிட இடைவெளியில் புறப்படுவது வழக்கம்.
துபாய் – ஹைதராபாத் விமானம் புறப்படுவதற்காக ஓடுதளத்தில் அதிவேகமாக வந்த போது, எதிரில் துபாய் – பெங்களூரு விமானம் புறப்பட தயாராகி வந்து கொண்டிருந்தது. உடனடியாக சுதாரித்த கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் துபாய்-ஹைதராபாத் விமானத்தின் புறப்பாடை நிறுத்தும்படி உத்தரவிட்டனர்.
இதையடுத்து அந்த விமானம் ஓடுதளத்தை விட்டு பாதுகாப்பாக வெளியேறி மற்றொரு விமானத்துக்கு வழிவிட்டது. அந்த ஓடுதளத்தில் இருந்து துபாய் – பெங்களூரு விமானம் புறப்பட்டுச் சென்றது. கடைசி நேர எச்சரிக்கையால் மிகப் பெரிய விமான விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹைதராபாத் புறப்பட இருந்த விமானம் ஒப்புதல் கிடைக்கும் முன்னரே புறப்பட தயாரானது குழப்பத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.