-நஜீப்-
ஐரோப்பா போன நமது ஜனாதிபதி நாடு திரும்பி இருக்கின்றார். பிரித்தானியாவில் பேசும் போது தமிழர் பிரச்சினையில் ஐம்பது சதவீதமானவற்றை தான் தீர்த்து விட்டதாக அங்கு பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார். இது எவ்வளவு யதார்த்தமானது என்பதனை தமிழ் தலைவர்கள்தான் சொல்ல வேண்டும். நமது அரசியல் புரிதலின்படி இது அண்டப் புளுகு.
ஆனால் ஜனாதிபதி ரணில் இப்படிப் பேசிய போது இலங்கையில் அரசியல் செய்கின்றவர்கள் குறிப்பாக அவர் மீது நம்பிக்கையில் நெருக்கமாக உறவுகளைப் பேணி வருகின்றவர்கள். இந்த வார்த்தை கண்டு கொதித்துப் போவர்கள், பலத்த கண்டனங்களை வெளியிடுவார்கள் என்று நமக்குள் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் பெரியவர் சம்பந்தர் தரப்பில் அது பற்றிய கண்டனங்களை நாம் பெரிதாகக் காணவில்லை. ஆனால் சில சிவில் சமூகத்தினரும் அரசியல்வாதிகளும் இதனை கண்டித்திருந்தார்கள். ரணிலுக்கு இப்படி ஒரு வார்த்தையை உச்சரிக்க வாய்பைக் கொடுத்ததே சம்பந்தரும் சுமந்திரனும்தான் என்பது நமது குற்றச்சாட்டு.
பிரான்சுக்குப் போன ஜனாதிபதி தனக்கு நன்றாகத் தமிழ் தெரியும் என்று ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பியவரை மட்டம் தட்டி தமிழில் கேள்வி எழுப்பும்படி கேட்டார். தமிழில் கேள்வி எழுப்ப, பதில் வழங்காமல் கேள்வி கேட்டவருக்கு இலங்கை வருமாறு பதில் கொடுத்து கதையை முடித்துக் கொண்டார் தமிழ் பண்டிதர் ரணில்.
நன்றி: 02.07.2023 ஞாயிறு தினக்குரல்