ஜப்பானில் டிரைவர் சீட்டே இல்லாமல் தானாகவே இயங்கும் கார்கள் மூலம் கால் டாக்சி சேவை வழங்கப்பட உள்ளது. ஹோண்டா, ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் குரூயிஸ் நிறுவனங்கள் இதற்காக ஒப்பந்தம் போட போகின்றன.
டிரைவர் இல்லாமல் தானாகவே இயங்கும் கார்கள் உலகம் முழுவதும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஏஐ தொழில் நுட்பம் மூலம் கார்கள் டிரைவர் இல்லாமல் இயங்குவது வெற்றிகரமாக அமெரிக்காவில் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. பல்வேறு நாடுகளும் சோதனை அடிப்படையில் வெற்றியும் பெற்றுவிட்டன. இன்னும் சில ஆண்டுகளில் உலகம் முழுக்க டிரைவர் இல்லாமல் கார்கள் இயங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை..
அமெரிக்காவில் டிரைவர் இல்லாமல் இயங்கும் கால் டாக்ஸ் சேவையை ஆப் மூலம் புக்கிங் செய்ய முடியும். கார் ஜிபிஎஸ் மற்றும் ஆப் உதவியுடன் நீங்கள் இருக்கும் இடத்திற்கு வந்துவிடும். வந்த உடன் நீங்கள் காரில் உட்கார்ந்து கொள்ளலாம். அதில் உள்ள டிஸ்பிளேவில் உங்கள் பெயரை காட்டி வரவேற்கும். நீங்கள் ஸ்டார்ட் என்று கிளிக் செய்தால் கார் தானாகவே நீங்கள் சொல்லும் இடத்திற்கு போய்விடும். ஆள் இல்லாமல் இயங்கும் கால் டாக்ஸி சேவை அமெரிக்காவில் மட்டுமல்ல ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலும் விரைவில் வரப்போகிறது.
ஹோண்டா, ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் குரூயிஸ் நிறுவனங்கள் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன இந்த ஒப்பந்தத்தின் படி மூன்று நிறுவனங்கள் ஒன்றிணைந்து புதிய நிறுவனம் ஒன்றை துவங்க போகின்றன. வரும் 2026 ஆண்டு ஆரம்பத்தில் ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் டிரைவர் மட்டுமல்ல டிரைவர் சீட்டே இல்லாமல் இயங்கும் கால் டாக்சி ஓடப்போகிறது.
இந்த புதிய கால் டாக்ஸியின் பெயர் குரூயிஸ் ஒரிஜின். இது தானாக இயங்கி எங்கு வேண்டுமானாலும் செல்லும். எல்லாமே புரோகிராம் தான். ஏஐ தொழில் நுட்பத்தில் இயங்கும் இந்த தானியங்கி கார் வாடிக்கையாளர்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டுபோய் விட்டுவிடும். ஓட்டுநரே இருக்க மாட்டார் என்பது தான் இந்த கால்டாக்ஸியின் ஹைலைட் ஆகும்.
இந்த கால் டாக்சி சேவையை மத்திய டோக்கியோவில் உள்ள வாடிக்கையாளர்கள் 2026ம் ஆண்டு முதல் பிரத்யேக ஆப் மூலம் புக் செய்து பயன்படுத்தலாம். இதற்கான கட்டணத்தை முன்கூட்டியே ஆப்பில் செலுத்த வேண்டியதிருக்கும்.
ஹோண்டா, ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் குரூயிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த குரூயிஸ் ஒரிஜின் மாடலில் ஸ்டீரிங் வீல் மற்றும் ஓட்டுனர் இருக்கை என எதுவுமே இருக்காது. ஒரே நேரத்தில் ஆறு பேர் வரை பயணிக்க முடியும். முதலில் டோக்கியாவில் பயன்பாட்டிற்கு வரப்போகும் இந்த டாக்ஸி சேவை, அதன்பின்னர் ஜப்பான் முழுவதும் வரும் என்று கூறப்படுகிறது.