பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின்
கடற்படை தளம் மீது ட்ரோன் தாக்குதல்
ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதலை தொடங்கி உள்ளது. இதற்கு பதிலடியாக ஈரான் சார்பில் அண்டை நாடான பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் கடற்படை தளத்தின் மீது ட்ரோன் தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளது.
இதனால் மீண்டும் மத்திய கிழக்கில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரான்-அமெரிக்கா இடையேயான போர் தற்காலிக ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.
மீண்டும் இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து ஈரான் தான் மூடிவைத்த ஹார்முஸ் ஜலசந்தியை திறந்த நிலையில் அதன் வழியாக சரக்கு கப்பல்கள் பயணிக்க தொடங்கின.
இதற்கிடையே தான் நேற்று முன்தினம் ஹார்முஸ் ஜலசந்தியை சிங்கப்பூர் கொடியுடன் ‘எம்/வி எவர் லவ்லி’ என்ற சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரான் சார்பில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டியதோடு, இந்த நடவடிக்கையை கண்டித்தது.

இதற்கு ஈரான் எந்த பதிலும் கூறவில்லை. குறிப்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் கேட்டபோது, ”இந்த தாக்குதல் ஈரானின் முட்டாள் தனமான செயல்” என்று விமர்சனம் செய்தார்.
அதோடு ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படுமா? என்ற கேள்விக்கு ”விரைவில் நீங்களே தெரிந்துகொள்வீர்கள்” என்றார். இதற்கிடையே தான் நள்ளிரவில் ஈரான் மீது அமெரிக்கா திடீரென்று தாக்குதல் நடத்தி உள்ளது.
அமெரிக்காவின் போர் விமானங்கள் ஈரானில் உள்ள ஏவுகணை சேமிப்பு மையம், ட்ரோன் பாதுகாப்பு மையம் மற்றும் கடலோர ரேடார் தளங்களை குறிவைத்து துல்லியமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனால் சினம் கொண்ட ஈரான் அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று வார்னிங் செய்தது. இந்நிலையில் தான் ஈரான் சார்பில் அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை நேரடியாக ஈரானால் தாக்க முடியாது. இருநாடுகள் இடையே அதிக தொலைவு இருப்பது தான் காரணம். இதனால் ஈரான் வழக்கம்போல் அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி உள்ளது.
அதன்படி பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவிற்கு சொந்தமான கடற்படை தளத்தை குறிவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் அந்த கடற்படை தளத்தில் எந்த மாதிரியான சேதம் ஏற்பட்டது? என்பது பற்றிய தகவல் உடனடியாக வரவில்லை.
இந்த கடற்படை தளம் தான் அமெரிக்காவிற்கு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. ஏனென்றால் இந்த கடற்படை தளம் என்பது அமெரிக்க கடற்படையின் ஐந்தாம் படைப்பிரிவின் தலைமையிடமாகவும், கட்டுப்பாட்டு மையமாகவும் செயல்பட்டு வருகிறது.
புரியும்படி கூற வேண்டும் என்றால் இந்த கடற்படை தளத்தில் இருந்து தான் மத்திய கிழக்கு பிராந்திய பகுதிகளில் அமெரிக்கா தனது கடற்படை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனால் தான் இந்த இடத்தை குறிவைத்து ஈரான் அடித்துள்ளது. இதற்கிடையே தான் ஈரான் சார்பில் அமெரிக்காவிற்கு முக்கிய வார்னிங் செய்யப்பட்டுள்ளது. அதில், ”இந்த தாக்குதல் வெறும் அமெரிக்காவின் ராணுவ தளங்களை சேதப்படுத்துவதற்கானது மட்டுமில்லை.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள தனது படைகளை எப்படி தற்காத்து கொள்வது என்பது குறித்து அமெரிக்காவை யோசிக்க வைப்பதற்கானதாக இருக்கும்” என்று எச்சரித்துள்ளது.
அதேவேளையில் இன்னொரு விஷயத்தையும் மறந்துவிடக்கூடாது. பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் இந்த கடற்படை தளத்தை ஈரான் தாக்குவது ஒன்றும் புதிது அல்ல. கடந்த பிப்ரவரி மாதம் முதல் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது போர் தொடங்கியது.
அந்த சமயத்தில் ஈரான் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் கடற்படை தளம், விமான தளம், ராணுவ தளத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தின.
இந்த தாக்குதலின்போதும் பஹ்ரைனில் உள்ள இந்த அமெரிக்காவின் கடற்படை தளம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.




