-நஜீப் பின் கபூர்-
மெகா கூட்டணி அமைக்க சஜிதுக்கு பசில் பகிரங்க அழைப்பு!
தமிழர் விவகாரத்தை மீண்டும் உயிர்ப்பிக்க நல்லதோர் வாய்ப்பு!
தமிழ் சிவில் சமூகத்தினர் புத்திஜீவிகள் களம் இறங்க வேண்டும்!
நாம் தொடர்ச்சியாக முதலில் வருவது பொதுத் தேர்தல்தான் என்பதனை நெடு நாட்களாக கூறிக் கொண்டிருக்கின்றோம். எமது அந்தக் நிலைப்பாட்டில் இந்த நிமிடம் வரை எந்த மாற்றங்களும் கிடையாது. இது பற்றித்தான் இந்த நாட்களில் அரசியல் வட்டாரங்களிலும் பேசப்பட்டும் வருகின்றது. குறிப்பாக இது தொடர்பாக இன்று ஜனாதிபதி ரணிலுக்கும் மொட்டுக் கட்சி முக்கியஸ்தர்களான ராஜபக்ஸாக்களுக்குமிடையில் பனிப் போர்ரொன்று நடந்து கொண்டிருக்கின்றது. இதில் பசிலுக்கு இதுவரைக்கும் பின்னடைவு நிலை. ஆனாலும் பசிலும் விட்டபாடில்லை.
ஜனாதிபதி ரணில் 113 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துக் கொண்டால் அது பற்றி தன்னால் பரிசீலிக்க முடியும் என்று ராஜபக்ஸாக்களுக்கு பதில் கூறி இருக்கின்றார். அதே போன்று நாம் அனுராவுக்கு எதிரான ஒரு மெகா கூட்டணி பற்றிய எண்ணக்கருவையும் முதல் முறையாக நாட்டுக்கு பகிரங்கமாக எமது குரலூடாக சொல்லி இருந்தோம்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நமது இந்தப் மெகா கூட்டணி பற்றிய கருத்துக்கு அமைவாக மொட்டுக் கட்சி கோட் பாதர் பசில் ராஜபக்ஸ இப்போது ஊடகங்களுக்குக் கருத்துச் சொல்லி இருப்பதுடன், அதற்கு பகிரங்க அழைப்பும் விடுத்திருக்கின்றார். அதன் படி எதிரும் புதிருமாக இருந்த ரணிலும் ராஜபக்ஸாக்களும் இணைந்தது போல ராஜபக்ஸாக்களும் சஜித்தும் இணைவற்கு ஒரு வாய்ப்பு அரசியலில் இருக்கின்றது. அப்போதுதான் ஜேவிபி.யின் இந்த அதிரடி அரசியல் செல்வாக்கை தடுத்து நிறுத்த முடியும் என்று பசில் எதிர்பார்க்கின்றார். அது உண்மையும் கூட. ஆனால் கூட்டணிக்கு பசில் சஜித்துக்கு விடுத்த அழைப்புக்கு ஐ.ம.ச.யின் சார்பில் கடும் எதிர்ப்பை வெளிட்டிருக்கின்றார் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார.
இதனை முன்கூட்டிச் சொல்லி இருந்த நாம் சஜித் ஜனாதிபதி பிரதமர் நாமல் என்று ஒரு கருத்தை இந்த மெகா கூட்டணி பற்றிய கட்டுரையில் அன்று சொல்லி இருந்தோம். பொதுத் தேர்தல் முன்னர் அப்படி ஒரு கூட்டணி அமையா விட்டாலும் தேர்தலுக்குப் பின்னர் அரசமைக்கின்ற நேரத்தில் கூட அப்படி ஒரு கூட்டணிக்கு வாய்ப்பு அரசியல் களத்தில் பிரகாசமாக தெரிருகின்றது. என்பதனை நாம் மீண்டும் நமது வாசகர்களுக்கு சொல்லி வைக்கின்றோம். அந்தக் கதைகள் அப்படி இருக்க, இப்போது ஜனாதிபத் தேர்தலில் தமிழருக்கான அரியதோர் வாய்ப்பு இருக்கின்றது. அது என்ன என்பதனை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.
வருகின்ற ஜனாதிபத் தேர்தலில் ஒரு தமிழ் வேட்பாளர் அல்லது இந்தத் தேர்தலை தமிழர்கள் பகிஸ்கரிக்க வேண்டும் என்ற இரு கருத்துக்கள் தமிழ் அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாக இருந்து வருகின்றது. அவர்கள் என்ன நியாயங்களுக்காக இந்தக் கருத்துக்களை முன் வைக்கின்றார்களோ என்னவோ எமக்குத் தெரியாது. என்றாலும் நாம் வருகின்ற ஜனாதிபத் தேர்தலில் தமிழர்களுக்கு இருக்கின்ற வாய்ப்புக்கள் என்று சொல்கின்ற கருத்துக்கள் அவர்கள் கருத்துக்களுடன் இசைந்ததாகவோ அல்லது முரண்பாடானதாகவோ இருக்கக் கூடும், என்றாலும் நமது இந்தக் கருத்துக்களை தமிழ் அரசியல் செயல்பாட்டாளர்கள் சற்றுக் கவனத்தக்கு எடுத்துக் கொண்டால் நல்லது என்பது எமது தனிப்பட்ட கருத்தாக இருக்கின்றதது.
மேலும் நாம் இங்கு சொல்கின்ற கருத்துக்கள் ஒரு பிரிவினைக்கான கருத்தோ அல்லது ஒரு தனி நாட்டுக்கான ஊக்குவிப்புக்களோ கிடையாது. ஏமாற்றப்படுகின்ற மக்களின்-இனத்தின் ஒரு அகிம்சைப் போராட்டமாகத்தான் நாம் இந்தக் எண்ணக் கருவை இங்கு விதைக்கின்றோம். கடந்த காலங்களில் தெற்கு ஆட்சியாளர்கள் இங்கு இருக்கின்ற சிறுபான்மை இனங்களை நியாயமாக-சமமாக நடத்தவில்லை. அவர்கள் பக்கச்சார்பாகத்தான் நடந்து கொண்டார்கள் என்பதற்கு எண்ணற்ற சான்றுகள் இருக்கின்றன.
நாம் அவற்றை தினந்தோரும் பார்க்கக் கூடியதாகவும் இருக்கின்றது. அவர்களது ஆட்சியில் அரசியல் ரீதியிலும் நிருவாக ரீதியில் ஆப்பட்டமான ஒரு இனவாதம் கலந்திருக்கின்றது. போர் வெற்றிக்குப் பின்னராவது அவர்களது அடக்குமுறைகளில் ஒரு மாற்றம் தளர்வு வரும் என்று நாம் எதிர்பார்த்தால் அதுவும் நடக்கவில்லை. இன்று அது வன்முறை என்ற அளவில் உச்சம் தொட்டு நிற்பதனைத்தான் வடக்கு மற்றும் கிழக்கு அன்றாட சம்பவங்களில் பார்க்க முடிகின்றது. அதனால்தான் வடக்குக் கிழக்கில் இன்றும் அடக்குமுறை-ஆக்கிரமிப்புக்கள் தொடர்கின்றன. இதனை இந்தியா கூட இப்போது கண்டு கொள்வதில்லை. அதனால்தான் பதிமூன்றாவது திருத்தம் குப்பையில் போடப்பட்டிருக்கின்றது.
இப்படியான ஒரு நிலை இருந்தும் கொழும்புடன் இணக்க அரசியல் மூலம் அடக்கு முறைகளை கட்டுக்குள் கொண்டு வரலாம் என்று தமிழ் தரப்பினரில் சிலர் முனைப்புடன் காரியம் பார்த்து வந்தனர். ஆனால் அவர்கள் இப்போது நாம் ஏமாற்றுப்பட்டு விட்டோம் என்று பகிரங்கமாகவே வாக்குமூலம் கொடுத்து வருகின்றனர். இதற்கு நல்ல உதாரணம் சம்பந்தன்-சுமந்திரன் போன்றவர்களின் ரணில் மீதான நம்பிக்கை. ரணில் மீண்டும் ஜனாதிபதியானாலும் அவர் ஒரு போதும் இனப் பிரச்சிகைக்குத் தீர்வு தர மாட்டார்.`
அவர் ஒரு போதும் தேர்தலில் வெற்றி பெறப் போவதுமில்லை. இந்த நிலையில் விக்ணேஸ்வரன் போன்றவர்கள் ரணில்தான் சிறந்த ஜனாதிபதி வேட்பாளர் என்று அவருக்கு சான்றிதழ் கொடுத்து வருகின்றார்கள். ஒரு தேர்தல் நடந்தால் தெற்கில் ரணில் தரப்புக்கு எந்தளவு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கின்றது என்பதனை விக்ணேஸ்வரன் சம்பந்தன் சுமந்திரன் போன்றவர்கள் கண்டு கொள்ள முடியும்.
மக்கள் அங்கிகாரம் இல்லாத ஜனாதிபதி ரணிலிடத்தில் அதிகாரப் பகிர்வு பற்றி பேசப் போவதில் ஏதுமே நடக்க மாட்டாது என்று இந்தத் தலைவர்கள் துவக்கத்திலே சிந்தித்திருக்க வேண்டும். இன்று அழைத்தாலும் அவர்கள் ரணில் காலடிக்கு ஓடி வருவதில் ஆர்வமாகத்தான் இருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் முட்டிக் குனிந்திருக்கின்றார்கள். அதில் நாம் ரணிலை நம்பி எமது மக்களை ஏமாற்றி விட்டோம் என்றாவது அவர்கள் பகிரங்கமாக இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்கு அவர்கள் தயாராகவும் இல்லை. ஆனால் இது பற்றி நாம் துவக்கத்திலே தழிழ் தலைமைகளை-தரப்பினரை எச்சரித்திருந்தோம்.
இதனால் இன்று தமிழரசுக் கட்சிக்குள்ளே பிளவுகளும் கருத்து முரண்பாடுகளும் அதிர்ப்திகளும் தோன்றி செல்வாக்கு மிக்க அந்த அரசியல் இயக்க இன்று பலயீனப்பட்டு நிற்க்கின்றது. நமது நாட்டில் இருக்கின்ற சில அரசியல்வாதிகள் அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் கையாட்களாகவும் இன்னும் சிலர் சீனா மற்றும் இந்தியாவின் முகவர்களாக இருந்து தன்னல அரசியல் செய்வது போலத்தான் நாம் மேற் சொன்வர்களும் தெற்கு ஆளும் தரப்பு நலன் காக்கின்ற ஒரு அரசியலைத்தான் இன்று வரை செய்து கொண்டிருக்கின்றார்கள்.
அதனால் ஒட்டு மொத்த தமிழ் மக்களும் இன்று சந்தியில் நிற்க்கின்றார்கள். இந்தத் தான்தோன்றித்தன அரசியலால் வடக்கு மற்றும் கிழக்கிலும் அதிர்ப்தி அரசியல் குழுக்கள் பிறப்பெடுத்திருக்கின்றன. இது ஒரு ஆரோக்கியமான நடவடிக்கை என்று சொல்ல முடியாது. ஆனால் அந்த நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு விட்டனர். இதனால் ஈழத் தமிழர்களின் அரசியல் விமோசனங்களக்கான பேராட்டங்கள் இன்று அரசியல் களத்தில் கோமா நிலைக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டது. இதற்கான முழுப் பொறுப்புக்களையும் சமகால தமிழ் அரசியல் தலைமைகளே ஏற்க வேண்டும்.
இந்த அரசியல் குழப்பங்களினால் இன்று தமிழ் மக்களின் இனப் பிரச்சினை விவகாரம் உள்நாட்டு மக்கள் மத்தியிலும் சர்வதேச அரங்கிலும் இந்தியா மற்றும் தமிழ் நாட்டு அரசியலிலும் கண்டு கொள்ளப்படாத நிலைக்கு வந்து விட்டது என்பதுதான் யதார்த்தம். எனவே தமிழ் மக்களின் இனப் பிரச்சினைகளை மீண்டும் உடனடியாக மேற்சொன்ன தரப்பினரின் அவதானத்துக்குக் கொண்டு வர வேண்டிய கட்டாயம் இங்குள்ள அனைத்து தமிழ் தரப்பினருக்கு ஏற்பட்டிருக்கின்றது என்பதனை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் சிவில் சமூகத்தினர் மற்றும் புத்திஜீவிகள் பார்வையாளர்களாக இருக்கக் கூடாது என்பது எமது அடுத்த வேண்டுகோளாக இருக்கின்றது.
நமது இந்த கருத்துப்படி முதலில் அனைத்து தமிழ் அரசியல் தலைமைகள் சிவில் அமைப்புக்கள் மற்றும் புத்திஜீவிகளும் உடனடியாக இது தொடர்பான கருத்துப் பரிமாறல்களை தமக்குள் நடாத்தி ஒரு தீர்க்கமான முடிவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இன விமோசனத்துக்கான ஒரு ஆரோக்கியமான தீர்மானத்துக்கு வருவதற்கு எவரும் குறுக்கே நிற்கமாட்டார்கள்-நிற்கவும் முடியாது என்று நாம் நம்புகின்றோம். அதன் படி இவர்கள் சர்வதேசத்தின் கவனத்தையும் தன்பக்கம் கொண்டுவர நல்ல வாய்பொன்று இருக்கின்றது. இதனை அவர்கள் தவறவிடக் கூடாது. இந்த விடயத்தில் தமிழ் மக்கள் மத்தியில் கருத்தியல் மாற்றமொன்றையும் உருவாக்க வேண்டும் என இங்கு வலியுருத்திக் கூற விரும்புகின்றோம்.
அதன்படி ஒட்மொத்தமாக அனைத்துத் தரப்பினரும் குறிப்பாக வடக்கு கிழக்கில் ஜனாதிபதி தேர்தலைப் பகிஸ்கரிப்பது மிகச் சிறந்த அரிசியல் தெரிவாக இருக்கும். அவர்கள் அனைவரும் ஒரு குடையின் கீழ் வந்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியுமாக இருந்தால் ஈழத் தமிழர்களின் இனப் பிரச்சினைக்கு போருக்கு பின்னாலான சர்வதேசம் மற்றும் இந்தியாவின் கவனத்தை ஈர்க்கின்ற அதிரடி நிகழ்வாக இது அமைய அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இதற்கு பரியளவில் ஒரு முன்னேற்பாடும் வேலைத் திட்டமும் செயலணியொன்றும் அதற்கான பரப்புரைகளும் தேவை.
அடுத்த தெரிவு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து ஒரு பொது வேட்பாளரை ஜனாதிபதி தேர்தல் களத்தில் நிறுத்தி தமது பலத்தை உலகிற்குக் காட்டுவது. இந்த விடயத்தில் நிறையவே நெருக்கடிகளுக்கு இடமிருக்கின்றது. யாரை வேட்பாராக கொண்டு வந்தாலும் அந்த வேட்பாளருக்கு எந்தளவுக்கு சமூக அங்கிகாரம் கிடைக்கும் என்ற விடயத்தில் நிறையவே முரன்பாடுகளுக்கு இடமிருக்கின்றது. கடந்த காலங்களில் இப்படிப் பலர் வந்தாலும் அது எடுபடவில்லை. காரணம் அந்த வேட்பாளர்கள் அனைவரும் போல தனிப்பட்ட மனிதர்களாகத்தான் தமிழர்கள் பார்த்தார்கள். அத்துடன் அந்த வேட்பாளர்கள் அனைவரும் போல ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தினரின் அபிமானத்தைப் பெற்றிருக்கவுமில்லை என்பது தெரிந்ததே.
இதனால் நாம் முன்பு சொன்ன தேர்தல் பகிஸ்கரிப்பு ஊடாக கவனத்தை ஈப்புதன் மூலம் உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் ஈழத் தமிழர் விவகாரத்தை மீண்டும் உயிப்பிக்க முடியும் என்பது எமது வாதம். அனைவரும் ஒருமித்த கருத்துடன் ஐக்கியப்பட்டு மக்கள் மத்தியில் இதற்கான நியாயங்களை முன்வைக்க முடியும். இதனை வைத்தே அனைத்து தமிழ் அரசியல் தலைமைகளும் சமூகமும் ஐக்கியப்படவும் ஒரு நல்ல வாய்ப்பும் இங்கு இருக்கின்றது.
காலங் காலமாக தெற்கு அரசியல்வாதிகளுக்கு மாலை போட்டு வோட்டையும் அள்ளிக் கொட்டி அவர்களை ஜனாதிபதி கதிரையில் அமர்த்திய ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் அவர்கள் தமிழ் மக்களின் முதுகில் குத்தி இருக்கின்றார்கள். இதற்கு தமிழ் தலைமைகள் ஒத்துழைப்பும் கொடுத்து வந்தனர். தேர்தல் காலங்களில் கொடுத்த வாக்குறுதிகளை எதனையும் அவர்கள் அமுல் படுத்தவில்லை.
இந்தப் பின்னணியில் மீண்டும் மீண்டும் அதே தமிழ் தலைமைகள் அரை நூற்றாண்டுக்கு மேலாக தாமும் ஏமாறி சமூகத்தையும் ஏமாற்றி வந்திருக்கின்றார்கள். எனவே ஒரு முறையாவது அதற்கு ஒரு மாற்று மருந்தை கொடுத்து வைத்தியம் பார்க்க தமிழ் அரசியல் சக்திகளும் சமூகமும் ஏன் இந்த சுற்றில் முனையக் கூடாது என்பது நமது அடுத்த கேள்வி. தெற்கில் உள்ள ஒரு அரசியல் கட்சி வடக்குக் கிழக்குத் தமிழர்களின் வாக்குகள் அனைத்தும் ஜனாதிபதித் தேர்தலில் தமக்குத்தான் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றன. அந்தளவுக்கு இவர்கள் வடக்குக் கிழக்கு மக்கள் ஏமாளிகள் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். இதனை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அதே போன்று அண்மைக் காலமாக தமிழ் அரசியல் தலைமைகள் ஆதரித்த ஜனாதிபதி வேட்பாளர்கள் வெற்றி பெறத் தவறி இருக்கின்றார்கள். அதேபோன்ற அவர்களின் ஏக ஆதரவுடன் வெற்றி பெற்ற மைத்திரி-ரணில் நல்லாட்சியில் கூட இந்த தமிழ் தலைமைகள் சமூகத்தக்கு ஏதாவது நண்மைகள் பெற்றுக் கொடுத்தார்களா என்று கேட்கத் தோன்றுகின்றது. வரலாறு அனுபவங்கள் அப்படி இருக்கின்றபோது ஒரு முறை ஜனாதிபதித் தேர்தலை ஒட்டு மொத்தத் தமிழர்களும் ஐக்கியப்பட்டு பகிஸ்கரித்து அரசியலில் ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பதற்கு இந்த முறை வருகின்ற ஜனாதிபத் தேர்தல் களம் சிறப்பான ஒரு சந்தர்ப்பமாக இருக்கின்றது என்பதை புத்திஜீவிகள் சமூகத்தை தெளிவு படுத்த வேண்டும் என்பதும் நமது வேண்டுகோளாக இருக்கின்றது.
கள நிலவரப்படி ஜனாதிபதித் தேர்தலில் ஒரு முக்கோணப் போட்டி நிலை இருக்கின்றது. யாருக்கும் ஐம்பது சதவீதத்தை தாண்ட முடியுமா என்ற சந்தேகமும் வலுவாக இருக்கின்றது. இந்த நேரத்தில் வடக்கு கிழக்கு ஜனாதிபத் தேர்தலைப் பகிஸ்கரிக்கின்றது என்ற இசு அரசியல் களத்தில் பரபரப்பாக செய்தியாக இருக்கும். நமக்குத் தெரிந்த கணிப்புக்களின் படி இந்த முறையும் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கின்ற வேட்பாளருக்கு தெற்கில் வாய்ப்பு மிகவும் கம்மி. நாம் குறிப்பிடுக்கின்ற இந்த நடு நிலை அல்லது பகிஸ்கரிப்பு என்பது அவர்களுக்கு எதிர்காலத்தில் அரசியலில் பேரம் பேசுகின்ற ஒரு சக்தியைக் கூட கொடுக்கலாம்.
நமது குறிப்பிடுகின்ற இந்தக் கருத்துக்களுக்கு ஒரு வாய்ப்பு இருக்கின்றது என்றால் அதற்கான வேலைத் திட்டத்தையும் பரப்புரைகளையும் அனைத்த தரப்பினரும் ஐக்கியத்துடன் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இது உலகம் பூராவிலும் வாழ்கின்ற கோடிக் கணக்கான தமிழ் மக்களின் அவதானத்தை மட்டுமல்ல சர்வதே கவனத்தையும் நிச்சயமாக ஈர்க்க இடமிருக்கின்றது என்பது எமது வாதம்.
நன்றி: 24.03.2024 ஞாயிறு தினக்குரல்