சீனா பாகிஸ்தானுக்கு 2.3 பில்லியன் டாலர் கடன் 

கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் சீனாவிடமிருந்து 2.3 பில்லியன் டாலர் கடன் ஒப்பந்த பத்திரம் மூலம் கடன் பெற்றது.

இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் அந்நாடுகளை அரசியல் நெருக்கடியை நோக்கி கொண்டு செல்லும் நிலையில் இதன் பின்னணியில் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டமும், அதன் மூலம் கொடுக்கப்பட்ட கடன்களும் மிக முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் தற்போது மீண்டும் சீனாவிடம் 2.3 பில்லியன் டாலர் அளவுக்கு கடன் வாங்கியுள்ளது.

இது குறித்து சீன பத்திரிகை ஒன்று, சீன வங்கிகள் கூட்டமைப்பிடம் இருந்து பாகிஸ்தான் 2.3 பில்லியன் அமெரிக்க டாலர் வாங்கியுள்ளது. இந்த கடன் ஒப்பந்தத்தின் படி இன்னும் சில நாட்களில் அந்தப் பணம் வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நிதியமைச்சர் இஸ்மாயில் இதுகுறித்து தனது ட்விட்டரில், “சீன வங்கிகள் கூட்டமைப்பு இன்று பாகிஸ்தானுக்கு 2.3 பில்லியன் டாலர் கடன் வழங்க ஒப்புக்கொண்டு கடன்பத்திரம் வழங்கியுள்ளது.

இன்னும் இரண்டு நாட்களில் இந்தப் பணம் பாகிஸ்தான் வந்து சேரும். இதற்காக சீன அரசுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

சீன வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி தனது சமூக வலைதள பக்கத்தில், சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கும், வெளியுறவு அமைச்சர் யாங் யிக்கும் நன்றி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மக்களின் சார்பில் நன்றியை உரித்தாக்குவதாகக் கூறியுள்ளார்.

இலங்கையைத் தொடர்ந்து சிக்குகிறதா பாகிஸ்தான்? சீன அதிபர் ஜி ஜின்பிங் 2013-ம் ஆண்டு பெல்ட் அண்ட் ரோடு (பிஆர்) திட்டத்தை செயல்படுத்துவாக அறிவித்தார். ஆசிய நாடுகளுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் வரலாற்று ரீதியாக இருந்து வரும் வர்த்தக பாதையை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும் என சொல்லப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலம் உலக நாடுகளை சீனா தங்கள் நாட்டுடன் போக்குவரத்து மூலம் இணைக்கும். சீனாவிற்கும் பிற நாட்டிற்கும் இடையில் சாலை போக்குவரத்தை ஏற்படுத்தும். அதேபோல் கடல் வழியே போக்குவரத்தை ஏற்படுத்தி சீனாவில் இருக்கும் துறைமுகங்களை உலகில் இருக்கும் பிற துறைமுகங்கள் உடன் இணைக்கும். இதுதான் தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் (The Belt and Road Initiative) திட்டம் ஆகும்.

இந்த திட்டத்தை செயல்படுத்த ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள சில நாடுகளுக்கு கடன் அளிப்பதாக சீனா உறுதியளித்தது. எடுத்துக்காட்டாக இலங்கையில் வர்த்தக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்களை மேம்படுத்தவும், அங்கு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், மற்ற துறைமுகங்களுடன் வர்த்தக ரீதியாக இணைக்கவும் தேவைப்படும் பணத்தை சீன வங்கிகள் கடனாக வழங்கும்.

இதற்காக தங்க பத்திர உத்தரவாதத்தில் கையெழுத்திட வேண்டும். இதன் மூலம் பெரும் பணம் வழங்கப்படும். இதுபோலவே மேற்காசிய நாடுகளை இணைக்கும் நுழைவு வாயிலாக உள்ள பாகிஸ்தானுக்கும் பெலட் அண்ட் ரோடு திட்டத்தில் இணைத்து பெரும் தொகை கடனாக வழங்கப்பட்டது.

ஆப்கானிஸ்தான், கஜகஸ்தான் வழியாக இந்த திட்டம் மேற்கு நோக்கியும், மலேசியா, ஹாங்காங், வட கொரியா என கிழக்கு நோக்கியும் விரிவடைந்தது. அதுபோலவே தென் கிழக்கில் இலங்கை வழியாக பயணத்தை தொடங்கியது.

இந்த திட்டத்தில் இணையும் நாடுகளில் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான தொழில்நுட்பம், மனிதவளம் போன்றவற்றையும் சீனா தந்து வருகிறது. ஆனால் இதில் செய்யப்படும் ஒப்பந்தங்கள் எதுவும் வெளிப்படையானவை அல்ல. இதற்கான வட்டி விகிதங்களும் மிக அதிகம்.

இந்நிலையில் இலங்கையை தொடர்ந்து சீனாவும் இதுபோன்ற நிதி நெருக்கடியில் சிக்குகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Previous Story

ரணிலுக்கு எதிராக திரும்பிய போராட்டம் 

Next Story

எண்ணெய் வாங்க நிதி இல்லை - ரணில் அறிவிப்பு