சிறுபான்மையினர் குறித்து மோதியுடன் பேசியிருப்பேன் – ஒபாமா

இந்திய முஸ்லிம்கள் குறித்த அமெரிக்க பத்திரிகையாளரின் கேள்விக்கு மோதியின் பதில் என்ன?

அமெரிக்காவில் மோதி - இந்திய முஸ்லிம்கள் பற்றி கேள்வி

அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிறகு அந்நாட்டு அதிபர் ஜோ பைடனுடன் இணைந்து கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை குறித்த அந்நாட்டு செய்தியாளர்களின் கேள்விகளை அவர் எதிர்கொண்டார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடி பங்கேற்றது மிகப்பெரிய விஷயம் என்று பைடன் நிர்வாகத்தின் உயர் அதிகாரி ஜான் கிர்பி தெரிவித்தார்.

“இந்திய பிரதமர் மோடி அவரது சுற்றுப்பயணத்தின் கடைசிப் பகுதியாக செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்பார். அதற்காக அவருக்கு நன்றி. இது முக்கியமான ஒன்று என்று நாங்கள் நம்புகிறோம். அதேபோன்ற கருத்தை அவரும் கொண்டிருப்பதை எண்ணி மகிழ்கிறோம்.” என்று அவர் கூறியுள்ளார்.

இந்திய முஸ்லிம்கள் குறித்த கேள்விக்கு மோதி என்ன சொன்னார்?

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் – இந்திய பிரதமர் மோடி ஆகிய இருவரின் கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது அமெரிக்காவைச் சேர்ந்த புகழ் பெற்ற வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிகையின் செய்தியாளர் சபரினா சித்திக், இந்திய பிரதமர் மோதியிடம் கேள்வி ஒன்றை முன்வைத்தார்.

“முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் உரிமைகளை வலுப்படுத்தவும், கருத்துரிமையை உறுதி செய்யவும் நீங்களும், உங்கள் அரசும் என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க தயாராக இருக்கிறீர்கள்?” என்று மோதியிடம் அவர் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த மோதி, “நாங்கள் ஜனநாயக நாடு. இந்தியாவும், அமெரிக்காவும் அவற்றின் மரபணுவிலேயே ஜனநாயகத்தைக் கொண்டுள்ளன. ஜனநாயகம் எங்கள் ஆன்மா. ஜனநாயகம் எங்கள் நரம்புகளிலேயே இருக்கிறது. நாம் ஜனநாயகத்தில் வாழ்கிறோம். நமது முன்னோர்கள் அரசியல் சாசன வடிவில் அதனை உறுதிப்படுத்திச் சென்றுள்ளார்கள். ஜனநாயகத்தின் விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட அரசியல் சாசனத்தின் அடிப்படையில் எங்கள் அரசு நடைபோடுகிறது. ஜனநாயகத்தின் வழியே செய்ய முடியும் என்பதை நிரூபித்துள்ளோம்.

சாதி, மதம், பாலினம் அடிப்படையில் பாகுபாடு என்ற கேள்விக்கே இடமில்லை. ஜனநாயகத்தைப் பற்றிப் பேசுகிறோம். அப்படியென்றால், மனித விழுமியங்களோ, மனிதநேயமோ, மனித உரிமைகளோ இல்லாவிட்டால் அது ஜனநாயகமாக இருக்காது.” என்றார்.

மேலும் தொடர்ந்த மோதி, “நீங்கள் ஜனநாயகம் என்று சொல்லும் போது, நீங்கள் அதனை ஏற்றுக் கொண்டு அதன்படி வாழும் போது பாகுபாடு என்ற கேள்வியே எழாது. ஆகவேதான், நாங்கள் பாரதத்தில் அனைவரின் ஆதரவு, அனைவருக்குமான வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி என்கிற வகையில் நடைபோடுகிறோம் “

“இந்தியாவில் அரசு நலத்திட்டங்களின் பலன் அனைவருக்கும் பொதுவானது. யார்யார் பயனாளிகள் என்று வரையறுக்கப்பட்டுள்ளார்களோ அவர்கள் பயன் பெறுவார்கள். ஜனநாயக விழுமியங்களை அடிப்படையாக கொண்ட இந்தியாவில் மத ரீதியிலோ, சாதி ரீதியிலோ, வயது அடிப்படையிலோ, பிராந்திய ரீதியிலோ எந்தவொரு பாரபட்சமும் பார்க்கப்படுவதில்லை.” என்று பதிலளித்தார்.

 ஒபாமா

இந்நிலையில், சி.என்.என். தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, மோதியுடன் தனக்குப் பேச வாய்ப்பு கிடைத்திருந்தால் சிறுபான்மையினர் குறித்துப் பேசியிருப்பேன் என்று இஸ்லாமியர்களின் பாதுகாப்பை மேற்கொள்காட்டிக் கூறியுள்ளார்.

செய்தியாளர் கிறிஸ்டியனே அமன்பூர் மோதியின் பயணத்தைக் குறிப்பிட்டு, “எதேச்சதிகார அல்லது மிகவும் குறைந்த தாராளவாத ஜனநாயகவாதியாகக் கருதப்படும் மோதியை ஜோ பைடன் தற்போது அமெரிக்காவில் வரவேற்கிறார். அத்தகைய தலைவர்களை ஒரு அதிபர் எவ்வாறு கையாள வேண்டும்?” என்று கேள்வி எழுப்புகிறார்.

இதற்குப் பதிலளித்த ஒபாமா, “இந்து பெரும்பான்மையான இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோதியை எனக்கு நன்றாகத் தெரியும்.

அவருடன் நான் உரையாடியிருந்தால், இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகளை நீங்கள் பாதுகாக்கவில்லை என்றால், இந்தியா ஒரு கட்டத்தில் உடைந்து சிதறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. அது இந்தியாவின் நலன்களுக்கு எதிரானது என்பது என் வாதமாக இருந்திருக்கும்,” என்றார்.

அமெரிக்காவில் மோதி - இந்திய முஸ்லிம்கள் பற்றி கேள்வி

2016, ஜூன் 7-ம் தேதி அமெரிக்கா சென்ற மோதி, வெள்ளை மாளிகையில் அப்போதைய அதிபர் ஒபாமாவை சந்தித்த காட்சி

பெர்னி சாண்டர்ஸ் விமர்சனம்

ஜனநாயகக் கட்சியின் முன்னணித் தலைவரும், அடுத்த அதிபருக்கான போட்டியில் இருப்பவருமான பெர்னி சாண்டர்சும், இந்தியாவில் மத சிறுபான்மையினரின் நிலை குறித்து மோதியிடம் ஜோ பைடன் பேச வேண்டும் என்று வலியுறுத்தி ட்வீட் செய்துள்ளார்.

“பத்திரிகை மற்றும் சிவில் சமூகம் மீது மோதி அரசு அடக்குமுறைகளை கையாண்டு வருகிறது. எதிர்க்கட்சியினரை சிறையில் அடைத்துள்ளது. இந்து தேசியவாதத்தை மிகத் தீவிரமாக ஊக்குவிக்கிறது. இந்தியாவில் மத சிறுபான்மையினருக்கான இயங்குவெளி வெகுவாக குறைந்துவிட்டிருக்கிறது. மோதியுடனான சந்திப்பின் போது அதிபர் பைடன் இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் மோதி ஆட்சியில்

மனித உரிமை மீறல்கள் குறித்த விவரங்களை

உள்ளடக்கிய விரிவான கடிதம் ஒன்றை

அதிபர் ஜோ பைடனுக்கு பராக் ஒபாமா, பெர்னி சாண்டர்ஸ்

உள்பட ஜனநாயகக் கட்சியின்

75 தலைவர்கள் கூட்டாக எழுதியுள்ளனர்.

அமெரிக்காவின் முன்னணித் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பட்ட பின்னணியில் இருந்து வந்தவர்களும் இதில் அடங்குவர்.

ஜனவரி 20-ம் தேதி எழுதப்பட்ட அந்த கடிதத்தில், “அமெரிக்கா – இந்தியா இருதரப்பு உறவு என்பது பொதுவான நலன் அடிப்படையிலானதாக இருக்கக் கூடாது. ஜனநாயகம் போன்ற பொது விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த தலைவர்களில் சிலர், அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்திய பிரதமர் மோதி உரையை புறக்கணித்தனர்.

நாடாளுமன்றத்தில் இந்திய பிரதமர் மோதியின் உரையை புறக்கணித்தது ஏன் என்பதை விளக்கி அமெரிக்காவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான அலெக்சாண்டிரியா ஒகோஸியோ கார்டெஜ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவருடன், மற்றொரு முக்கிய தலைவரான இலான் ஒமர் என்பவரும் பிரதமர் மோதி உரையை புறக்கணித்துள்ளார். “மோதி அரசு மத சிறுபான்மையினரை ஒடுக்குகிறது. இந்து தேசியவாதிகள் ஊக்கம் அடைந்துள்ளனர். அத்துடன், பத்திரிகையாளர்கள், மனித உரிமை குறித்து கேள்வி எழுப்புவோரையும் மோதி அரசு குறி வைத்துள்ளது. அவரது பேச்சைக் கேட்க நான் அவைக்குப் போக மாட்டேன்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

ரஷிதா தலெப் என்ற அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரோ, “நம் நாட்டின் தலைநகரில் மோதிக்கு இப்படியொரு வாய்ப்பு தரப்பட்டிருப்பதை எண்ணி வெட்கப்படுகிறேன். மனித உரிமை மீறல்கள் முதல் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் வரை மோதி அரசுக்கென நீண்ட வரலாறு இருக்கிறது. முஸ்லிம் உள்ளிட்ட மத சிறுபான்மையினரை குறிவைப்பது, பத்திரிகையாளர்களின் குரலை ஒடுக்குவது என அது பல வகையிலும் இருக்கிறது. அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. அமெரிக்க நாடாளுமுன்றத்தில் மோதி உரையை நான் புறக்கணிக்கிறேன்.” என்று ட்வீட் செய்துள்ளார்.

குடியரசுக் கட்சியின் நிக்கி ஹாலே ஆதரவு

இந்திய பிரதமர் மோதியின் வருகைக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்தில் சில உறுப்பினர்கள் கடுமையான அணுகுமுறையை கையில் எடுத்துள்ளனர்.

அதேநேரத்தில், எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் முக்கிய தலைவரும், அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருப்பவருமான நிக்கி ஹாலே, “இந்தியா – அமெரிக்கா நட்புறவு என்பது மிகவும் தனிப்பட்ட விஷயம்.” என்று கூறியுள்ளார்.

“அமெரிக்கா – இந்தியா நட்புறவு என்பது தனிப்பட்ட ஒன்று. நமது ஜனநாயக மதிப்பீடுகள், விழுமியங்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு நட்பு நாடு இந்தியா. வர்த்தகம், கலாசார உறவுகள், பாதுகாப்பு நலன்கள் என இருவருக்கும் பொதுவானவை ஏராளமாக உள்ளன. இந்த நட்புறவை மேலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டியது முக்கியம். மோதியின் வாஷிங்டன் பயணம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறேன்.” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

அமெரிக்காவில் மோதி - இந்திய முஸ்லிம்கள் பற்றி கேள்வி

நிக்கி ஹாலே

இந்திய பிரதமர் மோதியின் 3 நாள் அமெரிக்க பயணம் இன்றுடன் நிறைவடைகிறது. கடைசி நாளான இன்று அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், வெளியுறவு அமைச்சர் ஆன்டன் பிளிங்கன் ஆகியோர் அவருக்கு மதிய விருந்து அளிக்கிறார்கள்.

அதனைத் தொடர்ந்து, அமெரிக்க தொழில்துறையினரை சந்திக்கும் மோதி, இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், தொழில் ஒத்துழைப்பு மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடுகிறார்.

அமெரிக்கப் பயணத்தின் நிறைவாக, ரொனால்ட் ரீகன் மையத்தில் இந்திய வம்சாவளியினரிடையே அவர் உரையாற்றுகிறார்.

அதன் பிறகு, அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு மோதி எகிப்து செல்கிறார். எகிப்து அதிபர் அப்டெல் ஃபடே எல் சிசியை சந்தித்து இருநாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்து அவர் பேசுகிறார்.

Previous Story

மோதிக்கு ஜோ பைடன் அதிக முக்கியத்துவம் தருவது ஏன்? 

Next Story

மோடி அமெரிக்காவில் நெகிழ்வு!