“அனைத்து அமைச்சர்களும் இராஜினாமா”
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை தவிர்ந்த, அமைச்சரவையிலுள்ள அனைத்து அமைச்சர்களும் பதவி விலக தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுப்பெற்று வரும் பின்னணியில் இவ்வாறு அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச தொடர்ந்து பதவியில் நீடிப்பார் எனவும்,ஏனைய அமைச்சரவை அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்கள் பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் விசேட அமைச்சரவை கூட்டமொன்று சற்றுமுன்னர் இடம்பெற்ற நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த அமைச்சரவை கூட்டமானது ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அமைச்சரவையில் எஞ்சியவர்கள் பதவி விலகுவதா அல்லது பதவியில் நீடிப்பதா என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பதவி விலகினார் அலிசப்ரி !
நீதியமைச்சர் அலி சப்ரி தனது அமைச்சு பதவியை இராஜினாமா செயதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுப் பெற்ற பின்னணியிலேயே, இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதற்கமைய, தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
MPகள் வீடுகளுக்கு பலத்த பாதுகாப்பு
மாதிவெல பகுதியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீட்டுத் தொகுதிக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பிற்காக பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், வீட்டுத் தொகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் புலனாய்வுக் குழுக்களும் உஷார் நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.நாட்டின் தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
திஸ்ஸ குட்டி இல்லத்துக்குப் பலத்த பாதுகாப்பு
பதுளை மாவட்ட பொது ஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டி ஆராச்சியின் பண்டாரவளை இல்லத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களால் இல்லத்துக்குச் சேதங்கள் ஏற்படும் நிலையில், இன்றைய தினம் பொலிஸாரால் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைக்குச் சரியான தீர்வு கிடைக்காமையால் கொதிப்படைந்த மக்கள் இவ்வாறு அரசுக்கு எதிராக இறங்கியுள்ளனர்.